Monday, January 7, 2013

அன்பென்றால் அம்மா!!!


அம்மா இந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம்  ஒரு வரியில் தர இயலுமா ? நான் எத்தனையோ பக்கம் பக்கமாய் எழுதினாலும் என்னால் முழுவதும்  ஒரு விவரனத்துள் அடைக்க  இயலாத ஒரே விஷயம்  உன்  அன்புதான் அம்மா.
என் கன்னித்தமிழும் தடுமாறிய தருணங்கள் உனக்கான வரையறையை அகராதியில் தேடிய போதுதான். அவள் "கன்னி" என்பதால்தான் உன் அருமை பெருமையை உணர்த்த இயலவில்லையோ ஓரிரு வார்த்தைகளில் !!!

பால்யத்தில் நான் எழுந்திரிக்கும்  காலைப்பொழுது உனது அன்பான கொஞ்சலுடன் தான் ஆரம்பிக்கும் எப்படிப்பட்டதொரு வேலைப்பளுவிலும் எனக்கான உனது பக்கங்கள் ஒதுக்கப்பட்டே இருக்கும்அவை முழுக்க முழுக்க உன் அன்பினால் நிரம்பியே கிடக்கும்.

நான் சொல் பேச்சு கேளாமல் இருக்கும் சமயங்களில்,  என்னை விளையாட்டாய் கோபப்படுத்த “ தவிட்டுக்கு வாங்கிய பிள்ளைதானே நீ”  என்று சொல்லுவாய். கோபத்துடன்  வீம்பாய் முறைத்து கொண்டிருக்கும் என்னை சமாதானம் செய்ய கொஞ்சுவாய் நீ . அந்த அதீத கொஞ்சலுக்காய்  இன்னொரு முறை நீ அப்படி சொல்லக் காத்துக் கொண்டிருப்பேன் நான் . 


பண்டிகை காலங்களில் அடுப்பும், வாணலியுமாய்  இருக்கும் உன்னைக் கழுத்தில் கட்டிக்கொண்டு கொஞ்சுவேன் தள்ளிப்போ என்ற உன் எச்சரிக்கையையும் மீறி, அவ்வாறான நாளொன்றில் பொங்கி என் மேல் தெறித்து விட்ட இரண்டொரு எண்ணெய்த்துளிகளும், நான் செய்த ஆர்ப்பாட்டமும், மனம் கலங்கி, தவிப்பும் அழுகையுமாய்  மருந்திட்டு என்னை சமாதானம்செய்த பின்னர் நான் கவனித்தேன் அம்மா, உன்மேல் என்னை விட அதிகமாய் தெறித்திருந்த எண்ணெய்த் துளிகளை!!!  

நான் எவ்வளவு சாப்பிட்டால் திருப்தி அடையும் உன் மனசு? இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று எவ்வளவு தான் சோறு போடுவாய் நீ ? உன் அன்பினால் வழக்கத்தை மீறி அதிகமாய் சாப்பிட்டு விட்டு நடக்க இயலாமல் ஊரும்  போது,  அருகிலுள்ள யாரிடமாவது  அங்கலாய்த்து கொண்டிருப்பாய்முன்னாடி மாதிரி இவன் சாப்பிடுவதே இல்லை என்று!!!  

வேலைக்கென்று வெளி உலகம்   வந்த பின்னர் எனது வட்டம் பெரிதாகிப் போனது . ஆனால்  உனக்கோ நானே உலகமாகிப் போனேன். நான் எப்போதாவது  மனதளவில்  கஷ்டப்படும் போது  அது  உனக்கு எப்படித் தெரியும் என்று எனக்குத்  தெரியாது. உடனே உனது அழைப்பு வந்து விடும் எனது அலைபேசியில். அம்மா என்று வரும் பேரைக் கண்டவுடன் எனது மனக்கிலேசங்கள் எல்லாம் பறந்து விடும்

நான் அம்மா என்று சொல்வதை வைத்தே  என் மனநிலையை துல்லியமாக கணித்து விடுவாய் ஒரு கை தேர்ந்த மருத்துவர்  போலபிறகென்ன போதும் போதுமென்ற அளவுக்கு உன் அன்பு மழையில் நனையவிட்டு, தனி ஒருவனாய் இந்த உலகை எதிர்த்துப் போராடும் அளவுக்கு மனதைரியத்தை தந்து  உன் அன்பினால் என்னை நிறையச் செய்வாய்.
உன் மடித்தலையணை தந்த நிம்மதியும், அரவணைப்பும் பாச உணர்வுகளும் இதுவரை மட்டுமல்ல இனிமேலும் வேறெங்கிலும் கிட்டப்போவது இல்லை அம்மா.

ஒருமுறை திரு.அப்துல் கலாம் கூறினார்,
ஒரே ஒருநாள் நீ அழும்போது
உன் அம்மா புன்னகைத்தது
அது “நீ பிறந்த தினத்தன்று”.

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். உனக்கென்ன எப்பொழுதுமே முழுக்க முழுக்க அன்பினாலே என்னை  நனைத்து விட்டு  இயல்பாய்  இருந்து விடுவாய், நானோ உன் அன்பின் முழு பரிமாணத்தையும் தாங்க இயலாமல் அடிக்கடி நெட்டுயிர்த்துப் போய்விடுகிறேன் அம்மா.சுருக்கமாகச் சொன்னால்

தெய்வங்களின் மறு உருவம் அம்மாக்கள்.
இல்லையில்லை
அம்மாக்களின் மறு உருவம்தான் தெய்வங்கள் !!!




வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!










Saturday, December 22, 2012

செத்துப் போ விவசாயியே 2

செத்துப் போ விவசாயியே - 1

தண்ணீர் இல்லை நிலத்தடி நீர்  எத்தனையோ அடிக்கு மேலே  போய்விட்டது என்று சொல்லும் நாம்தான்,   நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கான எந்த ஒரு முயற்சியையும் செய்யமாட்டோம். மழை  இல்லை   என்று புலம்பும் நாம்தான் இரண்டு நாட்கள் தொடர்ந்தாற்  போல மழை பெய்தால் ஊரே வெள்ளக்காடாகி விட்டது, ரோடெல்லாம் ஒரே தண்ணீர்  என்று புலம்புகிறோம்.



அதற்கும்  முழு காரணமும் நாமாகத்தான் இருப்போம். இருக்கும் குளங்களையும், வாரிகளையும் தூர்த்து, சிறுகச் சிறுக சேர்த்து பிளாட் போட்டு விற்றிருப்போம்.அடுத்த ஒரு வாரம்   கழித்து  தண்ணீர் இல்லை ,மழை இல்லை என்று அதே பஞ்சப்  பாட்டை திரும்ப  பாடுவோம்.

  • படிக்காத ஒன்றும் அறியாதவர்கள் என்று நாம் நினைக்கும் நமது பாட்டனும் முப்பாட்டனும், முன்னோர்களும்  அமைத்து வைத்திருந்த விவசாய முறை நாம் அறிவோமா ?
  • பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்து தஞ்சை டெல்டா முதல்  தலைக்காவிரி வரை கோலோச்சிய தமிழனின் யுக்திகளை  நாம் தொடர்கிறோமா ?? 
  • அவர்கள்  செய்த நீர்ப்பங்கீடு முறை நமக்கு நினைவில் உள்ளதா? மழைக்காலத்தில் நமது கிராமங்களில் உள்ள குளங்கள் வரிசைக்கிரமமாக  நிரம்புவதை இப்போது பார்க்க முடியுமா?
  • பருவமழை தொடங்குவதற்கு முன்பாக வீட்டிற்கு ஒருவர் என முறை வைத்து வாய்க்கால்களையும், வாரிகளையும் வெட்டி சீரமைப்பார்களே அந்த முறை இப்போது  உள்ளதா ?
  •  உபரி நீரை வெளியேற்றுவதற்காக காட்டாற்றுடன் இணைக்கப்பட்டுள்ள வாய்க்கால்  இருக்கிறதா இப்போது ? 
  • சிறுவயதில் நமக்கு தெரிந்து பயிர் செய்த, குருதாளி, பனிப்பயறு,கேப்பை என  எத்தனை தானியங்கள் காலப்போக்கில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. அவற்றை  முக்கியப் பயிர்களின் அறுவடைக்கு பின் இடையிடையே  பயிர் செய்வதன் மூலம் நுண்ணுயிர் சத்துக்கள் சம நிலைப்படுத்தப்பட்டு இருந்ததை நாம் செய்கிறோமா இப்போது? 
பதில்  நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

நகர மயமாக்கலும், நாகரீகமாக்கலும் சேர்ந்து விவசாயத்தை அடியோடு சீர்குலைத்து போட்டு விட்டது.எந்த அரசாங்கம் வந்தாலும் விவசாயியின் வறுமையோ தற்கொலையோ   ஒரு பொருட்டு அல்ல.

அவர்களின் தாரக மந்திரம் இதுவாகக் கூட இருக்கலாம்  விவசாய நிலங்களை கான்க்ரீட் காடுகளாக்கி, நிலத்தடி நீரை தொலை தூரத்திற்கு அனுப்பி, மிச்சமிருக்கும் உவடு தட்டி போன நிலத்தை  சுடுகாடாக்கிவிட்டு   விவசாயிகளை  பார்த்து  "செத்து போ விவசாயியே  " என்று சொல்வதாக கூட இருக்கலாம்...

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு,தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் ...


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, December 18, 2012

செத்துப் போ விவசாயியே ...

"வரப்புயர நீர் உயரும்
 நீர் உயர நெல் உயரும்
 நெல் உயர  குடி உயரும்
 குடி உயரக்  கோன் உயர்வான்."

 என்று ஒரு விவசாய குடியின் வளர்ச்சி  நாட்டின் வளர்ச்சியாகப் பார்த்த காலங்கள் மலையேறிப் போய்விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமாய்,  பெருமையாய்  பாடப்பட்ட விவசாயி தான் இன்று வரிசையாய்  தற்கொலை செய்து கொள்கிறான்.  இது விதர்பாவிலோ, அல்லது நமக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நாட்டின்  ஏதோ  ஒரு மூலையிலோ  நடந்த செய்தி அல்ல. உலகுக்கே  படியளந்த தஞ்சை டெல்டாவில் தான் இந்த தொடர் தற்கொலை சம்பவங்கள்.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
 தான்அமிழ்தம்  என்றுணரற் பாற்று.  "

 என்று உலகத்து உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் அமிர்தம் போன்ற மழைதான் இன்று "ஆலகாலமாய்" மாறி, பெய்க்காமல் பொய்த்து, விவசாயிகளை காவு வாங்குகிறது.

அண்டை மாநிலங்கள் தண்ணீர் தராமல்  வஞ்சிக்க, பருவமழை பொய்க்க, நிலத்தடி நீரும் குறைந்து, குண்டு பல்பு எரியகூடிய அளவு மின்சாரத்தையே வழங்க  வக்கத்த, துப்புகெட்ட அரசாங்கமும் கைவிட, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமலும், வறண்ட வீறு விட்ட வயலை காணச் சகிக்காமலும், பூச்சி மருந்திலும், புளிய மரத்தில் நான்கு  முழக் கயிறுடன்  நிரந்தர நிம்மதி தேடிக்கொள்கிறான் ஏழை விவசாயி.

வறட்சி காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அரசாங்கம்,  வாய்தா வாங்கும் சாமர்த்தியத்தில் பாதி காண்பித்தால் கூட போதும் காவிரி கைவிரிக்காது. முல்லைப் பெரியாறு முரண்டு பிடிக்காது. ராஜ தந்திரமாய் காரியம் சாதித்து கொள்ள நமது அரசியல்வாதிகளுக்கு துப்பில்லை. ஆனால் அறிக்கை போர் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

  • நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வை இல்லை. அதை மேற்கொள்ள எந்த விதமான முனைப்புத்  தன்மையும் இல்லை.
  • நீராதாரத்தை நிலைப்படுத்த எந்தவிதமான  தொலை நோக்கு திட்டங்களும் இல்லை.  
  • போதிய தடுப்பணைகள் அமைத்து உபரியாய் கடலில் கலக்கும்  நீரைச் சேமிக்க எந்த ஒரு முயற்சியும் இல்லை.  
  • குறிப்பாக விவசாயம் குறித்தோ விவசாயிகள் குறித்தோ யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை .

அரசியல்வாதிதான் அப்படி இருக்கிறார்கள் என்றால்  நன்கு மெத்த படித்த நல்ல பதவியில் உள்ள வேளாண்மை அதிகாரிகள்  அதுக்கு மேல் !!!!  விவசாயி எங்கு போய்  முட்டிக்கொள்வது???  மண்பரிசோதனை  செய்ய நான் பட்ட பாடு சொல்லி மாளாது ....


                                                                             மீண்டும்  புலம்புவான் விவசாயி  .......

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு, தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் .


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!











Thursday, December 13, 2012

மாலை நேரத்து மழை.


 
                                                                அகமும் புறமும் 
                                                                இதமாய் நனைத்து 
                                                                குழந்தையாய் 
                                                                உள்ளம் குதூகலிக்க 
                                                                வைத்து  
                                                                மறந்திருந்த பால்யம் 
                                                                உசுப்பி 
                                                                தற்கால கவலை
                                                                மரணித்து 
                                                                இயல்பாய் உயிரினில்
                                                                ஒரு சிலிர்ப்பை  
                                                                 தந்தது  அந்த 
                                                                 மாலை நேரத்து 
                                                                 மழை .
                                                                அந்த அற்புத 
                                                                 கணங்கள்  
                                                                 மண் நனைத்து 
                                                                 வாசனை கிளப்பி 
                                                                 என்னை ஏகாந்தத்தில் 
                                                                 திளைக்க விடலாம்.
                                                                 இல்லை 
                                                                 நெஞ்சில் சூல் கொண்டு 
                                                                 கவிதையாய் பிரசவிக்கலாம்.
                                                                 எப்போது வேண்டுமானாலும் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!





Monday, December 10, 2012

செய்திலா வினைகள்.


உன் வெட்கத்தின்  நிறமான இளஞ்சிவப்பை 
பூசி இருந்திருக்கலாம் அந்த  சுவர்களில்
மொத்தமாய் உனது உருவம் பார்க்க
பொருத்தி இருந்திருக்கலாம் அந்த கண்ணாடியை
காலை  வெயிலின்  கடுமை   குறைக்க
 மாட்டி இருந்திருக்கலாம் அந்த திரைச்சீலையை
வாகாய்  துணி  உலர்த்த  கொடி  ஒன்றை
கட்டி இருந்திருக்கலாம் அந்த மொட்டை மாடியில்
உனக்கென்ன
இப்படியாய் கேட்டு  நிராசையாய் போன
எத்தனையோ  ஆசைகளுடன்  இதுவும் ஒன்று
எனக்கோ
மனதை பிசையும் பிரிவுத்துயருடன்
இலவச இணைப்பாய் உறுத்தும்
செய்திலா வினைகளின் மிச்சங்களும் 
அதன்  நினைவுச் சேர்க்கைகளும் 
இருந்தாலென்ன  அனைத்தையும் செய்து
முடிக்க இன்னொரு வருட விடுமுறை
வராமலா போய்விடும் எனக்கு ???!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, November 20, 2012

பசுமை நிறைந்த பால்யம்-3

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் -1
பசுமை நிறைந்த பால்யம் -2
                           
பள்ளி செல்லும் காலை பொழுதுகள் சற்று கசப்பானவை. ஜோல்னா பையை தலையில் மாட்டியபடி  அவசர அவசரமாய் நடந்து  செல்வதும் , நண்பன் கேட்கையில் மாத்திரம் நினைவுக்கு வரும் எழுத  மறந்து விட்ட வீட்டுப்பாடங்களும், எழுத ஆரம்பித்து பாதியில் தொக்கி நிற்கும் கணக்கும் செல்லும் வழியில் பயத்தை தருபவை.

கணக்கு டீச்சர் வராத நாட்களை எண்ணி குதூகலித்த தருணங்கள்  மிகவும் அதிகம்.பள்ளி நெருங்குகையில்  உரத்து  கேட்கும்  வாய்ப்பாட்டை  கேட்கும் பொழுதே சொரேரென்றிருக்கும்.  எங்கே சுழற்சி முறையில் நாமும்  சொல்ல வேண்டுமோ என்று பயந்து முன்னால் இருப்பவனின் முதுகுக்கு  பின்னால் ஒளிந்திருந்தது   ஒரு காலம் பால்யத்தில் . 

மழை பெய்யும் பள்ளி நாட்கள் இதமானவை. மழையின் ஆரம்பத்தில் வரும் மண்வாசனையும், இரைச்சல் மிகுதியால் நின்று விடும் வகுப்புகளும், மைதானத்தில் புள்ளியாய் ஆரம்பித்து தாழ்வான பகுதியை நோக்கி வாரிவாரியாக ஓட ஆரம்பிக்கும் மழை  நீரும், தேங்கிய மழைநீரில் விழுந்து  குடைவிரித்தவாறே  மறையும் நீர் முத்துகளும் கண்ணெதிரில் நடக்கும் அற்புதம்.

வானம் வெக்காளித்த  பின் வழக்கத்தை விட சற்று முன்னதாக விடப்படும் பள்ளியும், வெளிவருகையில் உணரும் வெம்மையும், செல்லும் வழி எல்லாம் தண்ணீரை எத்தி விளையாடிய படியே செல்வதும், மரம் செடிகளில் இருந்து சொட்டி கொண்டிருக்கும் நீர்த்திவலைகளும், சிறுமரத்தினடியில் யாரையேனும் எதார்த்தமாய் நிற்க வைத்து, அவர்கள் மீது  ஆட்டி விடப்பட்டு, சொட்டிய மழைத்துளிகளும்,

அம்மாவால் சூடாக   தரப்படும்  மழை நேரத்து தேநீரும், கூடவே தித்திப்பாய்  தேங்காய்,வெல்லமிட்டு தரப்படும்  ஊறவைத்த அரிசியும், அதில்  எதிர்பாராமல்  கடிபட்ட கல்லால் ஒரு வினாடி  கூசிப்போகும் உடலும்,  அதை நினைக்கையில்  அதே  உடல் கூசும் உணர்வை இப்பொழுதும்  உணரும் அதிசயத்தையும்    என்னவென்று சொல்வது!

பால்யம் குறித்த நினைவுகளை  எழுதுவது என்பது, கோடை நாளொன்றின் மீது கோபம் கொண்டு பெய்யும் பெருமழையின் சாரலில் நனைவது  போல என் மனதை சுகமாய்   நனைக்கிறது .

நன்றாய்  நனைக்கட்டும்  பெருமழையின் சாரல் !!!

                                                                                                                      பால்யம் மலரும் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


 

Tuesday, November 6, 2012

துப்பாக்கி - ஒரு பார்வை.



1.இது எப்புடி ??


2.அப்ப இது?



3.இதுவும் புடிக்கலையா ??




4.கடைசியா இது .
 



5. சரிங்க உங்களுக்கு புடிச்சத நீங்களே பார்த்துக்குங்க !!!!!






சரிங்க துப்பாக்கி - ஒரு பார்வை.  பார்த்துடீங்கள்ள !!???
அடுத்த தடவை பீரங்கி சரியா ?
என்னது டாக்குடர் படமா ?  ஒ.. ஓ .. நீங்க அந்த துப்பாக்கின்னு  நினைச்சிங்களா?  

இப்படி நீங்க தெளிவா கேட்டு இருந்தா முன்னாடியே சொல்லி இருப்பேன்ல இன்னும் ரிலீஸ் ஆகலைன்னு !!!!!



போங்கப்பா போங்க போய் வேல வெட்டிய பாருங்க ....என்னது அட்ரஸா ???
ஆட்டோவா ??? அய்யய்யோ சீக்கிரம் எடத்த காலி பண்ணுடா சூனா  பானா !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!









Monday, November 5, 2012

அத்தாச்சி போட்ட சூடு !!!

                                                   பொங்கல் நேரத்தில் வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, வீட்டை சுத்தம் பண்ணுவது என்று எங்களை  சத்தெடுப்பார்கள். வீட்டினுள்  இருக்கும் அனைத்து பொருட்களும் கொல்லைப்புறம் வந்துவிடும். அனைத்தும் கழுவியும்,துடைத்தும் திருப்பி வீட்டிற்குள்  வைக்கப்படும். வீட்டை அலசுவதற்கு அடிபைப்பில்  தண்ணீர் அடிக்கணும்  பாருங்க, அப்பப்பா  கண்ணைக்கட்டிடும். இதுதான் கடைசி குடம், கடைசி குடம்ன்னு சொல்லியே ஒரு ஏழெட்டு  குடம் அடிக்க வைச்சுடுவாங்க.



எல்லாம் முடிஞ்சு சரிதான் இனி விளையாட போகலாம்னு நினைக்கும் போது, நம்மளோட பளிங்கு, சோடாமூடி போன்ற பொக்கிஷம்  எல்லாம் வீட்டுக்குள்ள இருக்கும். அலசிவிட்ட ஈரம் காயுற வரைக்கும் வீட்டுக்குள்ள விடமாட்டாங்க. ஒரே சத்திய சோதனைதான் போங்க ...

நான் தவழும் பிள்ளையா இருக்கும் போது நடந்தது கீழே  ,
அத்தை  பசங்கள் எல்லாம் ஒன்னாதான் படிச்சோம்.சின்னபசங்க   யாராவது   அழும் போதோ அல்லது சுட்டித்தனம் செய்யும் போதெல்லாம் பேசாம இருக்கியா இல்ல ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா என்று  எங்கம்மா அதட்டுவதும், அந்த குழந்தைகள் அமைதியாவதும் வாடிக்கையாய் இருந்திருக்கிறது.

 ஒரு பொங்கல் சமயத்தில்  எனதருமை அம்மா வீடு அலசிக்கொண்டு இருக்க , வெளியில் தொட்டிலில் இருக்கும் என்னை பார்த்து கொள்ளமாறு  சின்னபிள்ளையான எனது அத்தாச்சியிடம் சொல்லி இருக்கிறார்கள். தொட்டிலில் இருந்து நான் சிணுங்கும் போதெல்லாம் எச்சரிக்கை செய்வது போல பேசாம இருக்கியா இல்ல  ஊதாங்குழலை காய வச்சு சூடு போடவா? என்று எனது அம்மா பாணியில் அதட்ட,
நான் தொடர்ந்து அழவும்,வெளியில் உலை கொதித்து கொண்டிருந்த விறகு அடுப்பில் ஊதாங்குழலை காய வைத்து கையில் ஒரு இழுப்பு இழுத்து விட , நான் வீறிட்டு அழவும் எனது அம்மா  ஓடி வந்து பார்க்க, எனது அத்தாச்சியோ ஊதாங்குழலும் கையுமாக ஒரு கேள்வி கேட்டு இருக்கிறார்கள் அது என்னன்னா,   
                             *
                             *
                             *
                             *
                             *
                             * 
ஏன்  அத்தை  நான் சூடு போட்டும் இவன் இன்னும் அழுகையை நிறுத்தலை ???
அப்புறமென்ன அவங்களை ஸர்ஃப், நிர்மா, எல்லாம் போட்டு வெளு வெளுன்னு   வெளுத்துட்டங்களாம் .
எப்போதாவது  அத்தாச்சியிடம்  ரொம்ப கிண்டலடித்து பேசும் போது,      தலையாட்டிக்கொண்டே சொல்வார்கள் உனக்கு சூடு போட்டது    தப்பில்லை,     ஆனா அந்த சூட்டை உன் வாயில போட்டிருக்கணும்!!!. 

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!

Saturday, November 3, 2012

சொல்ல நினைத்து சொல்லாதவை!!!

                                                             சொல்ல நினைக்கும் எல்லாவற்றையும் நினைத்தாற்  போல சொல்லி விடமுடிவதில்லை எப்போதும். அப்படி சொல்லாமல் விட்டு  போன வார்த்தைகள் தொலைந்து போய்விட்டாலும், அதன்  அடிநாதமான நினைவுகள் மனதை  அவ்வப்போது வருடிப்போகின்றன .

மருத்துவமனைக்கு மனவளர்ச்சி குன்றிய பதின்ம வயது மகளை  சக்கர நாற்காலியில் வைத்து  தள்ளிக்கொண்டு வந்த  ஒரு தாயின் கண்களில் கவ்விக்கிடந்த  சோகமும், அம்மகள் தொடர்ச்சியாய் அவரையும், சுற்றத்தாரையும்   தொந்தரவு செய்த போதும்  அவர் காட்டிய பொறுமையும், அக்கறையையும் பார்த்த போது   ''நீங்கள் ஒரு சிறந்த தாய்"   என்று  சொல்ல நினைத்து சொல்லாதது.




பிழைப்புக்காய் சுற்றத்தின் நிர்பந்தத்தால், தன்னால்  அழைத்து  வரப்பட்ட மருமகன்   வந்த இடத்தில்  மருந்தை குடித்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராட, அவருடைய வேலைத்தளத்தில் இருந்து வரும் நிர்பந்தங்கள் ஒருபுறம், போலீசாரின் விசாரணை மறுபுறம், ஊரிலிருந்து  வந்து   கொண்டே இருக்கும் அலைபேசி அழைப்புகள் ஒருபுறம், மொழியும், மனிதர்களும் அறியாத நாட்டில் கஷ்டபட்டுக்கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்க்கும் போது ஆதரவாய் தோள்  சேர்த்து  " இதுவும் கடந்து போகும்"    என்று சொல்ல நினைத்து சொல்லாதது.

மருத்துவமனையில் உயிருக்கு நண்பன் போராடிகொண்டிருக்கும் அந்த வேளையில், வெறுமனே கடனுக்காய், வேண்டா வெறுப்பாய் பதிலளித்து அங்குமிங்கும் அலைய விட்டுக்கொண்டிருந்த அரபிகளுக்கு மத்தியில்  கனிவாய், இன்முகத்துடன் அவரது வேலையாக அது இல்லாத போதும்  சரியாய் வழிநடத்திய அந்த பெண் அரபி மருத்துவருக்கு  மனம் நெகிழ்ந்து, நன்றியுடன்  பாராட்டுதலாய் சில வார்த்தைகளை  சொல்ல நினைத்து சொல்லாதது.

இப்படியாக  நாம் செல்லும் வழிநெடுகிலும், நம்மைச்  சுற்றிலும்  அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றன யாருக்காகவோ, எதற்காகவோ  நாம் சொல்ல நினைத்து  சொல்லாமல் விட்ட வார்த்தைகளும் அதனூடாக மங்கிய  அதன்  நினைவுகளும்!!!!!


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!