சொல்ல நினைக்கும் எல்லாவற்றையும் நினைத்தாற் போல சொல்லி விடமுடிவதில்லை எப்போதும். அப்படி சொல்லாமல் விட்டு போன வார்த்தைகள் தொலைந்து போய்விட்டாலும், அதன் அடிநாதமான நினைவுகள் மனதை அவ்வப்போது வருடிப்போகின்றன .
மருத்துவமனைக்கு மனவளர்ச்சி குன்றிய பதின்ம வயது மகளை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளிக்கொண்டு வந்த ஒரு தாயின் கண்களில் கவ்விக்கிடந்த சோகமும், அம்மகள் தொடர்ச்சியாய் அவரையும், சுற்றத்தாரையும் தொந்தரவு செய்த போதும் அவர் காட்டிய பொறுமையும், அக்கறையையும் பார்த்த போது ''நீங்கள் ஒரு சிறந்த தாய்" என்று சொல்ல நினைத்து சொல்லாதது.
பிழைப்புக்காய் சுற்றத்தின் நிர்பந்தத்தால், தன்னால் அழைத்து வரப்பட்ட மருமகன் வந்த இடத்தில் மருந்தை குடித்துவிட்டு அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராட, அவருடைய வேலைத்தளத்தில் இருந்து வரும் நிர்பந்தங்கள் ஒருபுறம், போலீசாரின் விசாரணை மறுபுறம், ஊரிலிருந்து வந்து கொண்டே இருக்கும் அலைபேசி அழைப்புகள் ஒருபுறம், மொழியும், மனிதர்களும் அறியாத நாட்டில் கஷ்டபட்டுக்கொண்டிருந்த ஒரு பெரியவரை பார்க்கும் போது ஆதரவாய் தோள் சேர்த்து " இதுவும் கடந்து போகும்" என்று சொல்ல நினைத்து சொல்லாதது.
மருத்துவமனையில் உயிருக்கு நண்பன் போராடிகொண்டிருக்கும் அந்த வேளையில், வெறுமனே கடனுக்காய், வேண்டா வெறுப்பாய் பதிலளித்து அங்குமிங்கும் அலைய விட்டுக்கொண்டிருந்த அரபிகளுக்கு மத்தியில் கனிவாய், இன்முகத்துடன் அவரது வேலையாக அது இல்லாத போதும் சரியாய் வழிநடத்திய அந்த பெண் அரபி மருத்துவருக்கு மனம் நெகிழ்ந்து, நன்றியுடன் பாராட்டுதலாய் சில வார்த்தைகளை சொல்ல நினைத்து சொல்லாதது.
இப்படியாக நாம் செல்லும் வழிநெடுகிலும், நம்மைச் சுற்றிலும் அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றன யாருக்காகவோ, எதற்காகவோ நாம் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட வார்த்தைகளும் அதனூடாக மங்கிய அதன் நினைவுகளும்!!!!!
வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!