Saturday, September 29, 2012

தாண்டவம் தண்டனையா !!!

நம்ம சீயான்  விக்ரம், அனுஷ்கா வோட சோடி போட்டு நடிக்க, படம் பட்டைய கிளப்பும்ன்னு பார்த்தா நம்மளுக்கு கடுப்பதான் கிளப்புது.
தாண்டவம் படத்தோட கதை என்னன்னா நண்பனோட துரோகத்தால  "ரா" ல   இந்தியாவின் டாப்  அஞ்சு  பேருல ஒருத்தரா இருக்குர விக்ரம் அவரு     பொண்டாட்டியையும் , கண்ணையும் ஒரு குண்டு வெடிப்புல பறிகொடுத்த கடுப்புலஅதுக்கு காரணமான எல்லாரையும்  பழிவாங்குறது தான் கதை.  
 
கண்ணு தெரியாமல் நம்ம விக்ரம் அசால்ட்டா போய் , நாயர் கடையில டீ குடிக்கிறமாதிரி  கொலைகளை பண்றாரு கூடவே நம்மளையும். இதெல்லாம் அவரு எப்படி செய்ராருன்னு நாம தண்ணிய குடிச்சு குடிச்சு யோசிக்கும் போது படத்துல சொல்றாங்க அது ஒரு " எக்கோ லொகேஷன்  டெக்னாலஜியாம்"   என்னமோ போடா மாதவா !!!
இடையில் எமி ஜாக்சன் வேறு, போட்டோ ஷூட்டுக்கு அப்புறம் கண்ணு தெரியாத விக்ரமை இம்ப்ரெஸ் பண்ண சர்ச்சில் சர்வீஸ் செய்வதும், கண்ணைக்கட்டி கொண்டு நடந்து மூஞ்சி,  முகரையை உடைத்து கொள்வதும் சகிக்கல. 
அடுத்ததா அத்தாச்சி லட்சுமிராய் , விக்ரமிடம்  கொல்லவேண்டியவனை பற்றி தகவல் தருவது ஏதோ CIA  ஏஜென்ட்  ரகசியம் காப்பது போல சொல்கிறார்கள் முகத்தயே காட்டாமல். பின்பு முகவரியை ஐ போனில் sms வேறு அனுப்புகிறார். கண்ணு தெரியாதவர் எப்படி படிப்பாருன்னு(ப்ரைலி எல்லாம் இதுல வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல) கேட்டா அதுக்கு  ஏதாவது   "தடவிங்  டெக்னாலஜி" என்று புது பெயர் சொன்னாலும் சொல்வார்கள்.

கல்யாண பொண்ணு  அனுஷ்கா மாப்பிள்ளை என்னாவா இருக்காருன்னு கூட தெரியாம அவர கல்யாணம் பண்ண சம்மதிச்சு டெல்லிலேருந்து  வர்ற அப்பாவி  கண் டாக்டர் . விக்ரம் சொல்ல நினைச்சிருக்கும் அதே மொக்கை காரணங்களை சொல்லி ( பார்க்கணும், பிடிக்கணும் ,பழகனும் , பிரண்ட்ஸ் , காதல் ,கல்யாணம் அப்புறம்தான்   லொட்டு லொசுக்காம்" )
இதையெல்லாம் "லொட்டு லொசுக்குக்கான"  ராத்திரியில  அனுஷ்கா சொல்றாங்க, கூடவே விக்ரம் மச்சினிச்சி (நல்ல பிகருங்க ) அக்காவின் அருமை பெருமைகளை சொல்ல  இதைகேட்டு விக்ரம் இம்ப்ரெஸ் ஆகி பியானோவும்,  கையுமா சுத்துறார் பொண்டாட்டிய  லவ் பண்ண !! புதுசா இருக்குல்ல!!!! ( மௌன ராகம் படத்துக்கும் இதுக்கும் சம்மந்தம்  இல்ல!!!!!! ) .

படத்தில் கொஞ்சம் ஆறுதலான விஷயம் சந்தானம் வருமிடங்கள்.முதல் கொலையை சந்தானம் போலீசிடம் சொல்கையில்
 சார் திஸ் இஸ் டெட் பாடி, கம்மிங் ப்ரம் மொட்ட மாடி, கமிங் கமிங் அண்ட் டேமேஜிங் கார் பாடி என்று கிளாஸ் டம்ளரை உடைக்குமிடமாகட்டும், விபத்து நடந்தவுடன் டைமிங்காக வரும் "ஒளிமயமான எதிர்காலம் பாடலும்"  நாசருக்கு நக்கலாக பதில் சொல்வதாகட்டும் எல்லா இடங்களும் சரவெடி பட்டாசு.
 நீரவ் ஷா வோட ஒளிப்பதிவு அட்டகாசமா இருக்குது. அனுஷ்கா புறாக்களுக்கு இரை  போடுமிடமும், கல்யாணப் புடவையில் வருமிடமும்  அருமை. பின்ணணி இசை பொருந்தி இருக்கிறது  .இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

கேள்வி கேட்கணும்னா கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளவு லாஜிக் ஓட்டைகள். வேற வழியே இல்லன்னா ஒரு படம் பார்த்தே தீரனும்னா, இல்லாட்டி ஓசி டிக்கெட்டுன்னா  பாருங்க படத்த, விக்ரம் படம், தெய்வதிருமகள் விசய் படம்ன்னு போனீங்கன்னா உங்க பர்சுக்கும், கடுப்பாகி உங்க உடம்புக்கும்   சேதாரம்தான்!!!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 27, 2012

கரண்ட மிச்சம் பண்ண சில யோச(ரோத ) னைகள் !!!


பின் விளைவுகளுக்கு  கம்பெனி பொறுப்பல்ல !!!!!

1. எங்கெங்க  ட்ரான்ஸ்பார்மர் இருக்கோ  அங்கெல்லாம் எதோ ரிப்பேர் வேல பார்க்குறமாதிரி  நல்லா சீன்  போடுங்க . 
நாங்களும் சரி சரி  இந்த வேல முடிஞ்சோன்ன சீசன்ல குற்றாலத்துல தண்ணி வந்து பாயுறமாதிரி  கரண்ட் வந்து பாயும்ன்னு நெனைச்சி நாங்களும் மனச தேத்திக்கிவோம் . ஒரு  ஏரியாவுல ஒரு   ட்ரான்ஸ்பார்மர்  வேலை முடிஞ்சதும் அதே ஏரியாவுல  அடுத்த நாள் அடுத்த ட்ரான்ஸ்பார்மர் வேல பார்க்க  ஆரம்பிக்கணும்.  (நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா  பண்ணனும் மங்குனியாரே !!!!)
2 . கரண்ட் எப்போ வரும்ன்னு  போட்டி ஒன்னு வைச்சு எல்லாரையும்  sms  அனுப்ப சொல்லலாம். யாரு சரியா கணிச்சு  சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு  பன்னெண்ண்ண்ண்ண்ண்.............டு     மணி நேரம் கரண்ட் குடுப்பதாக சொல்லலாம். ஒரு நாளைக்கா, ஒரு வாரத்துக்கான்னு சொல்லிராதீங்க !!!

3 . டிவியும் இல்ல பொழுது போக, அதுனால  தெருமுனையில, ஜங்க்ஷன்ல  ஜோடி நம்பர் 1,   மானாட மயிலாட,  போட்டியில ஆடுனவுங்களை ஆட விட்டிங்கன்னா மக்களுக்கு பொழுதும் போகும், கொஞ்சம்  கோபமும் கொறையும்.

4. எல்லா டிவியிலையும்  வீராசாமி,லத்திகா போன்ற உன்னத திரை  காவியங்களை திருப்பி திருப்பி போட சொல்லலாம், தப்பி தவறி உங்களுக்கு தெரியாம கரண்ட் இருந்துச்சின்னாலும், அந்த படத்த பாக்குறவங்களுக்கு  டிவி பார்க்குற ஆசையே போயிரும். உங்களுக்கும் கரண்ட் மிச்சமாகும். (சொல்ல முடியாது நம்ம பவர் ஸ்டார் புளகாங்கிதம் அடைஞ்சு கட்சிக்கு நிதி ஏதாவது குடுப்பாரு.)

5 . காலேஜ் டே, பஸ் டே மாதிரி "பவர் கட் டே" என்று புதுசா ஒன்ன ஆரம்பிச்சு பகல் நேரத்துல கொண்டாடலாம். சாக்லேட்டுக்கு பதிலா மெழுகுவர்த்தி குடுக்கலாம். என்ன  ஒன்னு இதை வாராவாரம்  கொண்டாடனும்.

6. அம்மா இலவசமா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் இந்த ஆட்சியிலையும், கரண்ட அடுத்த ஆட்சியிலையும் தருவதா ப்ளான் பண்ணி இருக்காங்கலாம் . ஏம்மா நீங்க இதையெல்லாம் தர்றதை நிறுத்திட்டு, மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, பெட்ரோமாக்ஸ் லைட் , இதுகள தாங்களேன் எங்களுக்கு உபயோகமா இருக்கும். அப்புறம் யாராவது   கரண்ட் வேணும்ன்னு கேப்பாங்களா என்ன??

அய்யா அஞ்சு வெரலக்காட்டி ஓட்டு கேட்டப்ப நாங்களும் உதயசூரியனை  சொல்றாருன்னு நினைச்சு ஒட்டு போட்டோம்,  ஆனா  அவரு அஞ்சு மணிநேரம் பவர் கட் பண்ணினாரு.....

அதே மாதிரி அம்மா ரெண்டு விரல காட்டி ஓட்டு  கேட்டப்ப , நாம  கொஞ்சம் சுதாரிச்சு  சர்தான் அம்மா பவர் கட்ட ரெண்டு மணிநேரமா கொறைக்க போறாங்கன்னு அப்பாவியா நெனைச்சுகிட்டு அவங்களுக்கும் ஓட்டை போட்டு தொலைச்சிட்டோம். இப்பதான் புரியுது அந்த ரெண்டு வெரலுக்கு அர்த்தம், ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் பவர்ன்னு ...... என்ன கொடுமை சரவணா இது !!!!!!




ஒட்டு வாங்குறப்ப அஞ்சு விரலையும் , ரெண்டு விரலையும் மாத்தி மாத்தி காமிச்சி  இப்போ எங்களுக்கு நடு விரலை காமிச்சுட்டீங்களே இது நியாயமா ???!!!!!!!!!!!!

வாழ்க வளமுடன்!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 20, 2012

இலை கொழுக்கட்டையும், விநாயகர் சதுர்த்தியும் !!!

                                                                    விநாயகர் சதுர்த்தி  அதுவுமா பேஸ்புக்குல  நம்ம இரவுவானம் சுரேஷ் ஒரு   கொழுக்கட்டை போஸ்ட்டுல  "நச்" கமெண்டுகளா    போட்டு தாக்க, அந்த கொழுக்கட்டை படத்த பார்த்த   நம்மளுக்கும்  கொழுக்கட்டை சாப்பிடணும்ன்னு ஆசை வர,  "முதல் முறையாக நமது கிச்சன் வரலாற்றில்" அப்படீன்னு சன்  டி.வி எபெக்டோட,   விநாயகர் சதுர்த்தியை  இலைகொழுக்கட்டையோட கொண்டாட  முடிவு பண்ணியாச்சு. செய்முறையை அரை மணி  நேரமா அம்மாகிட்ட   விலாவரியா போன்ல  கேட்டு தெரிஞ்சுகிட்டாச்சு.
நம்ம பரிசோதனை எலிகள்கிட்ட (ஹி...ஹி.. நம்ம ரூம்மேட்ஸ் ) எல்லாம்  சொல்லிட்டு,  சாயந்திரம்  வெல்லம், அரிசிமாவு சகிதம் ரூமுக்கு போனா எந்த இலையில செய்யப் போறேன்னு?  நண்பன் கேட்க , அங்க ஒரு சத்திய சோதனை "இலை வடிவுல".  பூசர  இலைக்காக  துபாய் பூரா  தேடியாச்சு எங்கயும் கிடைக்கல. "மனமிருந்தா மார்க்க பந்துன்னு" சொல்லிட்டு வாழையிலை  வாங்கியாச்சு.

அரிசிமாவை பிசைஞ்சு இலையில தடவ சொல்லிட்டு,    பூர்ணம் செய்வதற்காக வெல்லப்பாகு காய்ச்சி, பருப்பை போட்டு கடைஞ்சா, பாயசம் கணக்கா இருக்குது!! அவ்ளோ தண்ணி, நானும்  மனசு  விடாம  தேங்காய் துருவலை எல்லாம் போட்டு கெட்டியாக்க  பார்க்குறேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல... அந்த நேரம் பார்த்து வந்த நண்பன் ஒருத்தன் பாயாசம் நல்லாருக்கேன்னு சொல்ல, மனசு ஒடைஞ்ச  நான் அந்த அரிசி மாவை தூக்கி கொட்டி கிளற  கொஞ்சம்  கெட்டியாக ஆரம்பிச்சது,அப்ப உள்ள வந்த இன்னொருத்தன் என்னடா  மச்சான் இலைகொழுக்கட்டை செய்யுறேன்னு சொல்லிட்டு சர்க்கரை பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்கேன்னு? கேட்க, எனக்கு வந்த கடுப்புல பொங்கலை   ச்சே.. அந்த பூர்ணத்தை  நல்லா  கிண்ட ஆரம்பிச்சேன்.

 இன்னொரு நண்பன் கொஞ்சம் கடலை மாவை போட்டு கிண்டுனா  கெட்டியாகும்னு சொல்ல, கொய்யால போடு அதையும்!!! எல்லாத்தையும்  போட்டு கிண்டி ஒருவழியா ஒரு பதத்துக்கு கொண்டுவந்தாச்சு.  இலைக்கொழுக்கட்டையை அவிச்சு எடுத்தவுடன் ஒருத்தன் சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு  (உண்மையிலே நல்லா  தான் இருந்துச்சு ) சாப்பிட ஆரம்பிக்க, ஆனா செஞ்சு முடிச்ச   எனக்குதான் நாக்கு தள்ளிப்போச்சு .   ஆரம்பம் முதல் நான்  பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு  நண்பன் கேட்டான் என்ன, இனிமே இதுமாதிரி எல்லாம் செய்யவேண்டாம்ன்னு தானே நினைக்குறேன்னு கேட்க, சேச்சே அப்படி எல்லாம் இல்லைடா  மச்சான்,  
 

என்ன செய்யுறமோ அதோட பேரு சொல்லாம செஞ்சோம்னா , ரிசல்ட்டுக்கு தக்கமாதிரி பேரு வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன் என்றேன் நான்!!!.

வாழ்க வளமுடன்!!!தமிழ் தந்த புகழுடன் !!!







Thursday, September 13, 2012

கசாபை தூக்கிலிட வேண்டாம்!!!

                                                            கசாபை தூக்கிலிட வேண்டாம்.  அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டான்? மூளைசலவை செய்யப்பட அவனும் அவன் கூட்டாளிகளும்  இயந்திர துப்பாக்கியால் குழந்தைகள் , பெண்கள் என்ற வேறுபாடின்றி கொஞ்சமே கொஞ்சமாக 166 பேரை குருவி சுடுவது போல சுட்டுக்கொன்றான்  அவ்வளவே !!! இது  என்ன மரண தண்டனை தரக்கூடிய அளவுக்கு கொடிய குற்றமா என்ன? அப்படியே இருந்தாலும் "கண்ணுக்கு கண்"  "பல்லுக்கு பல்" என்பது காட்டு மிராண்டிகளின் சட்டம். நாகரீக வளர்ச்சியில் நாம் எவ்வளவு முன்னேறி விட்டோம்.
"கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது "

உண்மைதான். இத்தகைய கொடூர கொலைகளுக்கு  சாதாரணமாக வழங்கப்படும் மரணதண்டனை போதாது  மாறாக அணுஅணுவாய்  அவனை சித்திரவதை செய்து வெட்டி கொல்ல வேண்டும் .

கசாபுக்கு தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தவுடன், மரண தண்டனைக்கு எதிராக  சிலர் பேசுவது என்னவோ அவர்கள் மட்டும் தான் நாகரீகத்தின் விளைவாக மிகவும் பண்பட்டவர்கள் போலும், இதை ஆதரிப்பவர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள் போலும் ஒரு மாயை உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில்.

எவ்வளவு திமிரும், அரக்கத்தனமும் இருந்தால் எதிரி நாட்டின் வர்த்த தலைநகரில்  நுழைந்து  குழந்தைகள், பெண்கள்  என்ற வேறுபாடின்றி  நூற்றுக் கணக்கில் சுட்டுக்கொல்லுவான் ஒருவன் அந்த  அரக்கனுக்கு  நாம் இரக்கம் காட்ட வேண்டுமாம். நடந்த செயல் ஓர் "அறிவிக்கப்படாத போர்". கொடூரத்தின் உச்சகட்டம். என்ன நடக்கிறது என்று ஆறாம் அறிவு சிந்திக்கப்படும் முன்பே  மூளையை  சிதறடித்தது இந்த பாதகனின் தோட்டாக்கள் தான்.
இது காந்திய தேசமாம் மரண தண்டனை கூடாதாம் , பூக்களை விட மென்மையான குழந்தைகளுக்கு  தோட்டாக்களை  பரிசளித்தவனுக்கு, பூவையா  கொண்டு அர்ச்சிக்க வேண்டும்!! என்ன ஒரு அபத்தம் !

நம்மிடம்  உள்ள  மனிதாபிமானம் உணர்ச்சிவேகத்தில் தன்னிலை மறந்து தவறிழைத்தவர்களுக்கு வேண்டுமானால் கருணை  காட்டலாம். ஆனால் கொல்லப்படுவோம் என்று தெரிந்தே, மனது முழுக்க வன்மத்தோடும்  , வெறியோடும் வந்த இவனுக்கு தண்டனை குறைப்பு  என்ற கூப்பாடு எதற்கு ? ஆயுள் தண்டனையாக்கினால் மட்டும் இவன் திருந்தி விடுவானா  என்ன ?  எத்தனை பேரின் கனவுகளை சிதறடித்தான், எத்தனை குடும்பங்கள் தங்கள்  வாழ்வாதாரத்தின் அடிப்படையான அப்பாவையோ, அம்மாவையோ , அண்ணனையோ, அக்காவையோ இழந்து விட்டு  நிர்க்கதியாய் நிற்கின்றன ?  அந்த  குடும்பங்களுக்கு  நாம் தரும் பதில் என்ன?

 பொக்கேவுடன்  விருந்திற்கு வந்தவர்களுக்கு நாம் மரணதண்டனை வழங்கவில்லை . மாறாக நம்மீது படையெடுத்து வந்தவர்களுக்குதான்  ஆம் இதுவும் ஒருவகையான  படையெடுப்புதான்!  இந்த தண்டனை.  போர்க்களத்தில் மட்டும் நம் வீரர்கள் என்ன பூவா பறிக்கப்போகிறார்கள் ? அங்கும் உயிர் தானே பலியிடப்படுகிறது. பின் என்ன ? போரிலாவது யுத்த தர்மத்தை எதிர்பார்க்கலாம். மும்பையில் நடந்தது அதற்கும் குறைவானதுதானே .இத்தண்டனை  தேவை இல்லை என்றால்  காந்தீய தேசத்திற்கு படை எதற்கு? படைக்கலங்கள் எதற்கு ? அக்னி , ப்ரமோஸ் என்று  ஒவ்வொரு  பரிசோதனையின்   வெற்றின் போது நாம் மயிர் கூச்செறிய முஷ்டி  மடக்கி பெருமிதம் அடைவது  ஏன் ?

உயிரின் மதிப்பு தெரிந்தவர்களுக்கு, மனிதர்களுக்கு வேண்டுமானால் கருணை காட்டலாம். ஆனால் சில மாக்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மொழியில் பதில் பேசுவதே பொருத்தமாயிருக்கும். அந்த மொழிதான் "மரணம் "   அது போரிலாவது இல்லை தண்டனையிலாவது  .
  உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்த பின்னும்  இன்னும் மறுமுறையீட்டு மனு (review petition)  தீர்வு மனு (curative petition), கடைசியாக கருணை மனு (mercy petition) எல்லாம் போட்டு (கூடவே பிரியாணியும் போட்டு) சிலபல அரசியல் சித்து விளையாட்டு விளையாடி கடைசியிலாவது  கசாபுக்கு  மரண தண்டனையை  தருவதே இதில் இறந்த அப்பாவிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும் . இல்லாவிட்டால் அவர்களின்  ஆன்மா  நம்மை மன்னிக்கவே மன்னிக்காது .   நினைவில் கொள்ளுங்கள் 
"தாமதமாக கிடைக்கும் நீதியும் ஒரு வகையான அநீதியே".

இதையெல்லாம் விட்டுவிட்டு   "கொலைக்கு இன்னொரு கொலை நியாயமாகிவிடாது " இது காட்டு மிராண்டித்தனம், இப்படி செய்பவர்கள் காட்டுமிராண்டிகள் என்றால்  நான் எப்பொழுதும் காட்டுமிராண்டியாக,  வெறி பிடித்த காட்டுமிரண்டியாகவே  இருக்க விரும்புகிறேன் இத்தகைய  வெறி   பிடித்த மனித மிருகங்களுக்கு !!!!!!!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!! 




Tuesday, September 11, 2012

குழலினிது யாழினிது!!!




இன்று காலை  என்ன செய்தான் தெரியுமா?                           
இப்பொழுது என்ன செய்கிறான் தெரியுமா ?
என்று
உன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளுடன் 
தொடங்குகின்றன உன் அம்மாவின்
உரையாடல்கள்  சற்றே  பெருமையுடன்,
வெகு சீக்கிரமாய்  எழுந்து
விழித்திடாத  உன் அம்மாவின்
முகம் பார்த்து சிரித்து கிடந்தது,
வெளியே செல்லும் தாத்தாவுடன்
கிளம்பிட துடித்த உன் தாவல்கள்,
சாப்பிட மறுத்து நீ மாற்றும்
முகபாவனைகளும்,
 பிடிவாதமாய் ஊட்டியதால்
உதடு துடிக்க  வெடித்து கிளம்ப
காத்திருக்கும் உன் அழுகையும்,

பொய்க்கோபம் கொண்டு அதட்டும்
உன் அம்மாவும், அதை  நேர்செய்யும் 
விதமாய் உன் மந்தகாசப் புன்னகையும்
உன் ஒவ்வொரு அசைவையும்
துளித்துளியாய்
ரசித்துக்கொண்டிருக்கின்றனர் வீட்டில்.
"குழலினிது யாழினிது" என்னும் வள்ளுவன்
வாக்கோடு வாழ்ந்து  கொண்டிருக்கிறேன்
உன் அப்பா  அந்நிய தேசத்தில் .
அங்கு நீ தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
உன் பிரிவால்
நான் இங்கு தவித்துகொண்டிருக்கின்றேன் .

சில வார்த்தைகளை   படிக்கும் போது
உணராத   அர்த்தங்களை
வாழ்வின் பக்கங்கள்
அவற்றை கடக்கும் போது
அழகாய்  உணர்த்திவிடுகின்றன 
சில நேரங்களில் வலியுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!






Monday, September 10, 2012

சினிமாவும் சிக்கித்தவித்த நானும் !!!

                                             சின்னப்பையனா இருக்கும் போது நம்மள தியேட்டருக்கு அதிகமா கூட்டிட்டு போகமாட்டாங்க. ஏன்னா போன கொஞ்ச நேரத்துல படத்துல சண்டை எப்போவரும், எப்போவரும்னு கேட்டு நச்சரிக்கிறது. இல்லைன்னா கும்பகர்ணனை குசலம் விசாரிக்க போயிடுறது. டிக்கெட்  எடுத்து தூங்கினது  கூட அவங்களுக்கு கடுப்பாகாது, படம் முடிஞ்சதுக்கப்பறம்  தூக்க கலக்கத்துல என்னைய தூக்கிட்டு போக சொல்லி சண்டை போடுறதுல  ரொம்ப கடுப்பாகிடுவாங்க (நம்மதான் மாடு மாதிரி இருப்போமே!!!! ).  இதுனாலேயே என்னைய அடிக்கடி கழட்டி விட்டுட்டு படத்துக்கு போயிருவாங்க.
 ஒருநாள்   சாயந்திரம்  நான் கராத்தே கிளாசுக்கு  வந்துட்டேன். மாஸ்டர் வர லேட்டானதால  கிரௌண்டுக்கும் ரோட்டுக்குமா கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி ஓடி அவர் வர்ராறா  இல்லையானு  பார்த்து விளையாண்டுட்டு இருந்தோம். அப்ப  என்னோட பிரெண்ட் ஒருத்தன் வந்து உன்னோட அம்மா வர்றாங்கடான்னு சொல்ல, ஓடிவந்து பார்த்தா  என்னோட அம்மாவும், புதுசா டீச்சர் வேலையில சேர்ந்திருந்த  என்னோட அத்தாச்சியும் வந்துகிட்டு இருந்தாங்க, நான் ஓடிப்போய் அவங்க முன்னாடி நின்னவுடனே அவங்க  ஷாக்காகி,
 ஒண்ணுமில்லப்பா, அத்தாச்சிக்கு  நோட்ஸ் ஆப் லெசன் பார்மேட் வாங்கணும் அதான் இந்த டீச்சர் வீட்டுக்கு போறோம்னு   எனக்கு தெரிஞ்ச ஒரு டீச்சர் பேரையும்   சொல்லிட்டு  போனாங்க. கரெக்ட்டா  6.30 மணிக்கு அவசர அவசரமா  நோட்ஸ் ஆப் லெசனான்னு??  நம்ம மனசுக்குள்ள ஒரு அலாரம்  அடிச்சுக்கிட்டே இருந்ததால  கேட் ஓரமா நின்னு பார்த்துகிட்டே இருந்தேன் .

 லெப்ட்ல போனா டீச்சர் வீடு, ரைட்ல போனா தியேட்டர்ன்னு  பார்த்துகிட்டே இருக்க , நம்ம வில்லத்தனம் தெரியாத  நம்மாளுங்க திரும்பி கூட பார்க்காம  ரைட்ல திரும்ப, நண்பனொருவனை என்னோட டிரெஸ்ஸ வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்லிட்டு, கராத்தே  ட்ரெஸ்ஸோட வடிவேலு சொல்ற மாதிரி "எடுத்தேன் பாருங்க ஓட்டம்" ரோடு, மார்கெட்டுன்னு  ஒன்னும் பார்க்கலையே. எங்கம்மா டிக்கெட்  எடுக்க போற நேரத்துல உள்ள போய்  சேர்ந்துட்டேன். மாஸ்டர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்னு பிட்டை  வேற  போட்டுட்டு, படத்தையும்  தூங்காம பார்த்துட்டேன் .

ஆனா நம்ம நேரந்தான் நாம பஸ்ல போன அது பிளைட்டுல நம்மளுக்கு முன்னாடி வந்து நிக்குமே !!!.
நான் இப்படி பாக்யராஜ் மாதிரி  ஸ்லோமோஷன்ல கராத்தே  ட்ரெஸ்ஸோட ஓடி வந்ததை லேட்டா  வந்துகிட்டு இருந்த  கராத்தே  மாஸ்டர் பார்த்துட்டார். அப்பறம்  என்ன?  அடுத்த கிளாசுல  நாந்தான்   அவருக்கு  "பஞ்சிங் பேக் " . குத்துங்க மாஸ்டர் குத்துங்கன்னு  நான் நிக்க, பைனல் டச்சா கைல மடக்கி வைச்சிருந்த பெல்ட்டால என்னை அடிக்க ஓங்க , எசகு பிசகா திரும்புன நான்  இன்னொருத்தர்  மேல நல்லா  மோத  என்னோட சில்லு மூக்கு ஒடைஞ்சு  மூக்குலேருந்து  ரத்தம் கொட்டோ கொட்டென கொட்டிடுச்சு. சரி சரி  தக்காளி சட்னிதானே விடுன்னு   தொடச்சிக்கிட்டு வீடு போய்  சேர்ந்தேன். (பின்னே இதையெல்லாம் சொல்லி அங்க வேற அடி வாங்கனுமா என்ன???)

ம்ம்ம்.....  சொல்ல மறந்துட்டேனே, சாகசமெல்லாம் பண்ணி, பஞ்செல்லாம் வாங்கி   அப்படி   நான் பார்த்த படம் நம்ம இளைய திலகம் பிரபு நடிச்சது , படத்தோட பேரு அதாங்க அதான், நான்  அந்த க்ரௌண்டுக்கு  கொடுத்தது,  








   "ரத்த தானம் ".


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!






Tuesday, September 4, 2012

வெங்காயமும் கண்ணீரும் !!!

                                                               நாளெல்லாம்    உழைச்சு களைச்சு  ரூமுக்கு போனா  அங்க வந்து தக்காளிய வெட்டு , வெங்காயத்த வெட்டு ,பொடலங்காய வெட்டுன்னு ஒரே இம்சைங்க ,  அதுலயும் அந்த  வெங்காயம் வெட்டும்போது  வரும் பாருங்க  கண்ணீர் ஸ்ஸ் ப்பா ... உரிக்க உரிக்க ஒண்ணுமில்லாத வெங்காயத்தால  இவ்வளவு கண்ணீர் வருதேன்னு காரணம்  என்னன்னு ஒரு கதையை  நண்பர்கள்கிட்ட சொன்னேன் பாருங்க,  அதுலேர்ந்து அவங்க என்னைய கிச்சன் பக்கமே வரவேண்டாம் அப்படின்னு கெஞ்சி கேட்டுகிட்டாங்க. யாருக்காகவும் திரும்ப சொல்லாத அந்த கதை உங்களுக்காக கீழே !!!

ஒரு காலத்துல  தக்காளி , வெங்காயம் ,உப்பு  மூணும் நண்பர்களா  இருந்தாங்களாம்.   ஒருநாள் மூணு பேருமா நடந்து   போகும் போது  தாறுமாறா வந்த தண்ணி லாரியில அடிபட்டு "தக்காளி" செத்து போச்சு. நண்பன் செத்துபோயிட்டான்னு ரொம்ப உருகி உருகி அழுதாங்களாம் நம்ம வெங்காயமும், உப்பும் .    அந்த சோகத்தோட கடற்கரைக்கு போனவங்க சும்மா இருக்காம  அலையில கால் நெனைக்க ஆசைப்பட , வெங்காயம் எவ்வளவு எடுத்து சொல்லியும் கேட்காம  உப்பு தண்ணியில போய்  நிக்க அதுவும் கரைஞ்சு செத்து போச்சாம் !!!

ரெண்டு நண்பர்களையும்  ஒரே நேரத்துல பறிகொடுத்த  துக்கத்துல வெங்காயம் "ஓ " ன்னு அழுதுகிட்டே இருக்க,  நம்ம கடவுள் தான் ரொம்ப இரக்க மனசுக்காரர்   ஆச்சே, வெங்காயத்துகிட்ட பிரசன்னமாகி உனக்கு என்ன வேண்டும்னு கேட்க , வெங்காயம் சொல்லுச்சாம்   என் பிரெண்டு தக்காளி செத்தப்ப   நானும் , உப்பும் அழுதோம். அதே உப்பு கரைஞ்சு செத்தப்ப நான் மட்டும் தனியா அழுதேன். இனிமே நான் செத்தா  எனக்காக யார் அழுவான்னு  கண்ணீரோட கேட்க, செண்டிமெண்டா அட்டாக் ஆன கடவுள் சொன்னாராம்
கொய்யால இனிமே எவன் உன்னை சாவடிச்சாலும்   அவனும் அவன்கூட உள்ள எல்லாரும்  கண்ணீர் விட்டு  கதறுவாங்கன்னு  சொல்லிட்டு மறைஞ்சுட்டாராம்.

மக்களே இப்ப தெரியுதா வெங்காயம் வெட்டுனா  கண்ணீர் வரக் காரணம் !!!
(நோ ஆட்டோ............... நோ பேட் வோர்ட்ஸ்!!!!!!!!!)


வெங்காயம் பற்றிய சில தகவல்கள் 
  • வெங்காயம் வெட்டும் போது கண் எரிவதற்கு காரணமான வேதிப்பொருள் ப்ரோப்பேன்தியல் எஸ் ஆக்ஸைடு . (அமினோ ஆசிட் சல்பாக்சைடு மற்றும் தண்ணீரின் கலவையால் வருவது ) 

  • வெங்காய உற்பத்தியில் சீனாதான் முதலிடம்.

  • பழங்கால பண்டமாற்றத்தில்  மிகவும் மதிப்பு மிக்க பொருளாக கருதப்பட்டது (இதுனால ஆட்சியே கவுந்திருக்கு நம்ம நாட்டுல!!!!!!)

  • கல்யாணம் செய்யபோற பிரம்மச்சாரிகள் சின்ன வெங்காயம் சாப்பிடுறது ரொம்ப நல்லதாம். (சொன்னதுலேருந்து ரூம்ல ரெண்டுபேர் வெறும் சின்ன வெங்காயமாதான் சாப்பிடுறாங்க)

  • வெங்காயம் வெட்டுறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி ப்ரீசர்ல வச்சு எடுத்தா, இல்ல ஏதாவது சூவிங்கம் மென்னுகிட்டே வெட்டினால், இல்ல வெங்காய  அடிப்பாகத்த கடைசியா வெட்டுனாலோ  கண்ணு அதிகமா எரியாதாம். 
 
இதையும் மீறி கண்ணு எரிஞ்சா   இத ட்ரை பண்ணுங்க !!!!!!! 



படிச்சுட்டு,பார்த்துட்டு  திட்டணும்னு தோணுச்சுன்னா  என்னை  "போடா வெங்காயம்ன்னு  " திட்டுங்க ....அவ்வ்வ்வவ் !!!!!!!!!!!!!!!!!!!!!



வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!












Tuesday, August 28, 2012

அக்காவை அதிகம் பிடித்த நாட்கள் !!!


                                                உனக்கு நினைவில் இருக்கிறதா என்று தெரியவில்லை  ஆனால் எனக்கு நன்கு நினைவில் உள்ளது நீ சிறுவயதில்  கைகளில் பிரில் வைத்த ரோஸ் கலர் பாவாடை சட்டை அணிந்து   வளைய வந்த நாட்கள்.   நீ வாசலில் கூட்டி  பெருக்கி கோலம் போட எத்தனிக்கையில் அதற்கு  இடைஞ்சலாக மட்டுமே நானிருப்பேன் உன்னை பெருக்க விடாமல் உன் கழுத்தை கட்டிக்கொண்டோ அல்லது  நீ கோலம் போட வைக்கும் புள்ளிகளுக்கு இணையாக நானும் எதாவது புள்ளிகளை வைத்துக்கொண்டோ இருப்பேன்.

உன் வயதையொத்த தோழிகள் என்னை ஏதாவது சொன்னாலும் அதை சிரித்துக் கொண்டே தவிர்த்துவிட்டு "என் தம்பி " இவன் என்ற வாத்சல்யத்தோடு  பார்ப்பாய் என்னை .    எவ்வளவு தான் உன்னை தொந்தரவு செய்தாலும் அம்மா இவனைப் பாருங்கம்மா என்றதொரு செல்ல சிணுங்கலுடன் நிறுத்தி விடுவாய் !!! அந்த சிணுங்கலுக்காகவே  உன்னை மீண்டும் மீண்டும் சீண்டுவேன் நான்.

                                                          பள்ளியில் இருந்து நீ நடந்து வந்ததால் கால் வலிக்கிறது என்றவுடன் தினமும் உன்னை தூக்கி கொண்டு போய் விட்டுவிட்டு  வந்த தாத்தாவும், என் பேத்தி ,என் பேத்தி  என எங்கு போனாலும் உன்னை கூட்டி திரிந்த ஆயாவும் , மகளுக்கென்று அப்பாவால்  ஸ்பெஷலாக வாங்கி வரப்படும் கோலாலம்பூர் லக்ஸ் சோப்பும் , டீச்சர் ஒருமுறை உன்னை கிள்ளியதால் அந்த டீச்சருடன் சண்டைக்கு போன அம்மாவும்  என எல்லோருக்கும்   செல்லமாக நீ இருந்தாலும், உனக்கு செல்லமாக நான்தான்  இருந்தேன்.


பள்ளிகளில் நல்லவை  எல்லாவற்றிற்கும் முன்னுதாரணம் நீயாகத்தான் இருப்பாய். நான் உனக்கு நேரெதிர் . பள்ளியிலும் சரி வீட்டிலும் சரி, நான் எந்த தப்பு செய்தாலும் அது உன்னையே சுட்டும். எல்லாவற்றிர்க்கும் நீதான்  நீதிபதி அது பெரும்பாலும் என்னை காப்பதாகவே இருக்கும்.

பத்தாவதில் கணக்கில் எனக்கு  சென்டம் வருமென்று கணித்தது தவறாய் போக, அதை ஏற்றுக்கொள்ள இயலாத நீ சிறுபிள்ளை போல அழுததை நினைத்து  நான் மனங்கசிந்த நாட்கள் ...
திருமணம் முடிந்து கணவன் வீடு செல்கையில் துணைக்கு யாரை அனுப்பலாம் என்று பேசுகையில், இடைபுகுந்த நீ தம்பியை அனுப்புங்கள் அவன் பார்த்து கொள்வான் என்று எனக்கே இல்லாத ஆளுமையை,               தன்னம்பிக்கையை நீ ஊட்டிய நாள் ...

சென்னையில் இருந்து கொண்டு வாரம் ஒருமுறைகூட உங்களால் வந்து போக முடியாதோ என்று ஆதங்கப்பட்ட நாள்... நீ கர்ப்பம் தரித்த காலத்தில் வந்த டைபாயிடும், உன்னை அழைத்து செல்ல அம்மா அப்பா வந்த போதும் நீயும் வாயேண்டா  என்று உன் கண்கள் உரைத்ததை  உணர்ந்து செங்கல்பட்டு  ரயில் நிலையத்தில் நீ ஊருக்கு செல்லும் நாளில் வந்ததும், நானும் உன்னுடன்  ஊருக்குதான் வருகிறேன் என்று நீ  அறிந்தவுடன் உன் விழிகளில் கண்ணீர்  துளிர்த்த நாட்களும் .....   

ஸ்லேட்டு குச்சி முதல் பாரின் சாக்லேட் வரை உனக்கான  பங்கை எனக்கு  விட்டு தந்திருக்கிறாய் . ஆனால்  நான் மட்டும் நமது அம்மாவின் பாசத்தில் உனக்குரிய பங்கை விட்டு தரவே இல்லை .  அது எல்லாம் எனக்கு மட்டுமே வேண்டும் என்று  சுயநலமாக நடந்து கொண்ட பின்னும் , என்றும் மாறா  அதே புன்னகையுடன் நீ சிரித்த நாட்கள், நீ எல்லாமுமானவள் என்பதை எனக்கு உணர்த்திய நாட்கள் !!!

அக்காக்கள் இன்னொரு அம்மாக்கள் !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன்!!!





Monday, August 27, 2012

எப்படி இருக்கிறாய் என் காதலியே ?

                                
  
                         நீ நன்றாக இருக்கின்றாய் என்று  எனது காதல்  எனக்கு சொன்னாலும், உன்னிடமிருந்து வரும் " ம் " ஒற்றை சொல்லில் பொதிந்துள்ள ஒராயிரம் அர்த்தத்தை இந்த பொல்லாத காதல் நீயின்றி உணர்த்திவிடுமா  என்ன?  அந்த காதலின் கர்வத்தை அடக்கவாவது என்னுடன் மறுமொழி பேசிவிடு.

 உன் மீதுள்ள காதலை உனக்கு உணர்த்த ஓராயிரம் முறை உன்னை அலைபேசியில் அழைத்திருப்பேன். எத்துனை முறையோ வாய் வரை வந்து விட்ட சொற்கள் ,   என் காதலின் ஆழத்தை உனக்கு உணர்த்தும் சரியான  வார்த்தைகள்  தெரியாமல்  உன்னுடன் பேசுவதற்கு முன்பே   ஓடி ஒளிந்து கொள்கின்றன. என்ன சொல்லி சமாளிப்பேன் உன்னிடம்?
ஆகவேதான்  அலைபேசி ஒலிப்பதற்குள் துண்டித்து விடுகிறேன் சமயத்தில் உதவாத இந்த சொற்களின் மீது பெருங்கோபம் கொண்டு !!!!

தேவதையிடம் காதலை சொல்ல இயலாமல் ஒளிந்து கொண்ட வார்த்தைகள் என்னிடம்  வந்து மன்னிப்பு கோரி சமரசம் செய்கின்றன. வார்த்தைகளால் சொல்ல இயலாத காதலை வரிகளாக்கி உன்னிடம் சமர்ப்பிப்பதாக!!! . எனது  மௌனத்தையே சம்மதமென கருதி விரைகின்றன வார்த்தைகள், உன் பேரழகையும், காதலையும்    ஒருங்கே எழுதிவிட! . 

அது என்ன அவ்வளவு சுலபமா என்ன ? இருவெளிகளில் வெவ்வேறு திசையை நோக்கி பயணிக்கும் முடிவிலி போன்றது அது.  இதுதான் மிகசிறந்தது என வார்த்தைகளால் வடித்து கொண்டுவரப்படும் அனைத்துமே  சாதாரணமாகத்  தான் தெரிகிறது எனக்கு.
 உனக்கு  அனுப்புவதற்காக காதலைக்கொண்டே  உருகி உருகி எழுதப்பட்ட அத்தனை      மின்னஞ்சல்களுக்கும் உன்  மேலுள்ள  என் காதலை முழுதாய் சொல்லிவிட திராணி இல்லாததால் அவை எனது சேமிப்பறையில் உனக்கான   என் காதலுடன் சுகமாய் உறங்குவது  உனக்கு தெரியுமா?

எனக்கு தெரியும்  உனக்கான என் காதல்  ஒருநாள் உன்னால் உணர்ந்து கொள்ளப்படுமென்று, அதுவரையில் தேவதையிடம் யாசிக்கும் ஓர் யாசகனைப் போல நான் ஒரு ஓரமாய்  காத்திருப்பேன்   என்றோ ஒருநாள்  மகுடமேறப்போகும்  என் காதலுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!









Thursday, August 23, 2012

பசுமை நிறைந்த பால்யம் -2

பசுமை நிறைந்த பால்யம்-1  

மின்சாரமில்லா மழைக்கால ராத்திரிகள் மனதுக்கு ஒருவித நெருக்கமானவை. சாயந்திரத்தில் லாந்தரையும், சிம்னி விளக்குகளை துடைத்து மண்ணெண்னை ஊற்றும் அம்மாவும், அக்காக்கள் படிப்பதற்காக ஏற்றப்படும் சிம்னி விளக்குகளும், தீச்சுடருடன் இயைந்தவாறு நேர்க்கோட்டில் வெளிவரும் புகைச்சுடரும், காற்றின் வேகத்தில் அலைக்கழிக்கப்படும்போது அலையும் நிழல்களையும், அணைவது  போல போக்கு காட்டும்  சுடரை  ரசிப்பதும்,  ஆவி பறக்க பரிமாறப்படும் சோற்றின்
சூடும்தலை முதல் கால் வரை கம்பளி போர்த்தி கதகதப்பாக படுத்துறங்கிய  சுகமும்  இன்னும் என்னுள்  இருப்பது போல ஒரு உணர்வு...
 
கீற்றும் , குடலையும் முடைவதற்காக  குளத்து நீரில் ஊறவைத்து கொண்டு வரப்படும்  தென்னை  மட்டைகளும், அவற்றை நொடிப்பொழுதில் நெட்டாக  இரண்டு துண்டாக  வகுந்து விடும் பாளை அருவாளும், லாவகமாக  கீற்று முடையும் தாத்தாக்களும், ரீங்காரமிடும் சில்வண்டுகளும், இணைக்காக சப்தமெழுப்பும்  தவளைகளைப்  பார்த்து  அதுபோலவே கட்டை குரலில் சப்தமிடுவதாகவும்  கழியும் எனது மழைக்கால ராத்திரிகள்.....

கார்காலத்தின்  பகற்போதுகள் வண்ணமயமானவை அடிக்கடி பெய்யும் மழையும் அதனால் முளைத்த தும்பை பூச்செடிகளும், ஆளரவமில்லா கொல்லைகளில் பச்சைப்பசேலென்று  மண்டிக்கிடக்கும். நட்சத்திரங்களை இரைத்தார்போல பொலேரென்று  பூத்து கிடக்கும் தும்பைப்பூக்களும், அப்பூவில் தேனுண்ண வரும் வண்ணத்துப்பூச்சிகளும் அதை பிடித்து அதன்  வயிற்றில்  நூல்கட்டி அதை துரத்தி விளையாடுவதும் , திடீரென முளைத்தது  போல பறக்கும் ஈசல்களும், அவற்றை பிடிக்க ஓடுவதும். அடிக்கடி  எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கும் ஆயாவையும் பொருட்படுத்தாமல்
விளையாடிக்கொண்டே இருந்த எனது பால்ய நாட்கள் மீண்டும் கிடைக்காதவை ......

அவ்வப்போது  கிடைக்கும் பொன்வண்டுகளும், அதற்கு  கொன்றை, கொடுக்காபுளி  இலைகளையும் உணவாக ஊட்டுவதும், பட்டு கத்தரிப்பது போல நறுக்நறுக்கென்று அவ்விலைகளை பொன்வண்டு தின்பதை பார்த்துக்கொண்டிருப்பதும்,  அதன் முட்டைகளை  நல்லெண்ணெய் பூசி வெயிலில் வைத்து  அது குஞ்சு பொறிக்க நண்பர்களுடன் காத்து கிடந்ததும், அதன் கழுத்தும் உடம்பும் சேருமிடத்தில்  கையை வைக்கும் போது  கடிப்பதும்,  அக்கழுத்தில் நூலொன்றை கட்டி கையில் பிடித்துக்கொண்டு அது என்னுடைய  உடலில் ஊர்வதை பெருமையாய்  ரசித்ததும், அது பறக்கும் போது நூலைப்பிடித்து  அதனுடன் ஓடித்திரிவதும், எத்தனை  கொடுத்தாலும் திரும்ப வராத நாட்கள்.

பழைய நினைவுகளுடன் மட்டுமே வாழ்வது என்பதாகிவிட்டது  இப்போதைய வாழ்க்கை. எழுத்து ஒன்று மட்டுமே பால்யத்தை கிளறி  அந்த வாசனையை திரும்ப கொண்டு வருகிறது.

 நன்றாய் வரட்டும் வாசனையும்,  எழுத்தும்!!!

                                                                                                         பால்யம் மலரும் ....


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, August 16, 2012

பசுமை நிறைந்த பால்யம்!!!

விடியலில்  இருள் கரையதொடங்குவது போல, பால்யம் சுமந்த நினைவுகள் முழுவதும்  என்னுள்  கரைந்து  வியாபிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து  பூனை படம் போட்ட  நீலகலர் பனியனை போட்டுக்கொண்டு அலைந்து  திரிந்த நாட்கள் ஒரு வசந்த காலம். பச்சைக் கம்பளம் விரித்த பசிய வயல்களுக்கு நடுவே தாத்தாவின் கைபிடித்து வரப்பில் நடந்ததும், வயலில் நடவு நடும் வேலையாட்களின் குலவை சத்தமும், நாற்று பறித்து லாவகமாக முடிச்சிடும் போது பசுந்தளிர் சிறிதாக கசங்குவதால் ஏற்படும் ஒருவித வாசமும்  இன்னும் என் மனதை விட்டு அகலாதவை.

எல்லோரும் பள்ளி செல்லும் நாளில், மட்டம் போடுவதைப் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை  பால்யத்தில். பள்ளி செல்லா நாளொன்றின் முற்பொழுதுகளில் அலை அலையாய் இறங்கி கொண்டிருக்கும் வெயிலின் ஊடாக அலைந்து திரிவதும், கிரீச்சென்றும், மெல்லிய முனங்களுடனும்   விதவிதமான ஒலிகளை எல்லாம் எழுப்பிகொண்டு  சுற்றி வரும் செக்கடியும், அந்த செக்கு மரத்தண்டில் அமர்ந்து காலால் மணல்  தரையில்  கோடிழுத்து செல்வதும், அந்த  வெம்மையிலும் வாணியொழுக செக்கிழுக்கும் மாடுகளுடன்  சுற்றுவதுமாக  கழியும் எனது பள்ளி செல்லா நாட்களின் பகல்  பொழுதுகள்.

கோடைக்கால வெயிலின் உக்கிரம்  தணிந்த ஒரு  சாயந்திரத்தின்வீட்டின்  முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின்  அடியில் கழியும் எனது இரவுப்   பொழுதுகள். வெயிலின் வெக்கை தெரியாமலிருக்க வாசலில்  தெளிக்கப்படும் தண்ணீரும், அதனால்  கிளம்பும்  மண்வாசனையும், சிறிது ஈரம் காயவிட்டு அதில் ஒரு பாயை போட்டு படுத்திருக்கும் போது  வேப்பமரத்திலிருந்து வீசும் மிதமான இளந்தென்றலும்,  அவ்வப்போது ஆசிர்வதிப்பது போல உதிர்க்கப்படும் வேப்பம்பூக்களும்...   யப்பா அனுபவித்தறியா  பேரானந்தம் இன்னும் என் நினைவுகளில்!!!

 எப்போது நினைத்தாலும் பெருமூச்சிட்டு ஏங்க  வைத்த எனது  பால்யம் சுமந்த நினைவுகள்  இப்போது பசுமையாய்  எனது நினைவுகளில் மட்டும்.!!!

                                                                                                                     பால்யம் மலரும் .....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, August 9, 2012

மழலைகள் ....




எப்படி எடுத்தாலும்
எல்லா புகைப்படத்திலும்
அழகாய் இருக்கின்றனர்
குழந்தைகள்.

எப்படி  கேட்டும்
அனுமதி கிடைப்பதில்லை
மழையில்  நனைந்திட,

கொஞ்சும் மழலையில்
மிரற்றுவது போல்
கேட்கப்படுகின்றன
பதிலளிக்க இயலவிலா
கேள்விகள்.

எத்தனையோ முறை
எத்தனித்த கோபத்தை
நீர்க்குமிழியாய்
உடைத்துவிட்ட உன்
பொக்கைவாய் புன்னகைகள் ,

வாழ்வின் அர்த்தத்தையே
உணர்த்திவிடும்
எனக்கான  உனது தருணங்கள் !!!!!!!















Wednesday, August 8, 2012

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க !!!


திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற  கூட்டம் வேடிக்கை தான்  பார்க்குது. இதை நிரூபிப்பது போல ரெண்டு சம்பவம் நடந்தது,
சம்பவம் #1
போன வாரத்துல என்னோட  நண்பனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதாவது அவர்  லண்டனுக்கு   ஒரு வேலை விஷயமா போனப்ப  அங்க எதோ ஒரு  பிரச்சினையில மாட்டிகிட்டதாகவும், அதை தீர்க்க ஒரு ரெண்டு லட்சம் அனுப்ப சொல்லி இருந்தான் . உன்கிட்ட அவ்வளவு  பணம் இல்லாட்டி பரவாயில்ல உன்கிட்ட எவ்வளோ இருக்கோ அதை அனுப்பு. மீதிய நான் மத்த நண்பர்களிடம் இருந்து வாங்கிக்கிறேன். உன் பணத்த ஊருக்கு வந்த உடனே  எப்படியாவது திருப்பி தந்துடுறேன்னு  உறுதிமொழி வேற.லண்டன்ல ஒரு தெளிவான முகவரி மட்டும் இருந்தது ஆனால் அலைபேசி எண் எதுவும் இல்லை. எனக்கு  கொஞ்சம் சந்தேகம் வர   அவனோட துபாய் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது சாட்சாத் அவனே எடுத்து பேசினான். அவனோட மின்னஞ்சலை யாரோ ஹாக் செய்து விட்டதாகவும், இதே போன்ற பல மின்னஞ்சல்களை பலருக்கும் அனுப்பி விட்டதாகவும்  கூறினான். அப்போது அவன் கேட்டான் மச்சான் உனக்கு சந்தேகம் எப்படி வந்ததுன்னு? கடுப்பில் இருந்த நான் கூறினேன் “தக்காளி இந்த மூஞ்சி எல்லாம் போற அளவுக்கு லண்டன் ஒன்னும் அவ்வளவு மோசமாகலைன்னு”

சம்பவம் #2
நண்பன் ஒருவனை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். ரொம்ப மும்முரமாக வேலை தேடிக்கொண்டிருந்தான். பாரபட்சமில்லாமல் கிடைக்கும் எல்லா  நாடுகளுக்கும், எல்லாவிதமான வேலைக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மிகவும் சந்தோஷமாக பேசினான். மச்சான் லண்டன்ல ஒரு வேலை கிடைச்சிருக்கு, நியமனக் கடிதம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதாகவும் கூறினான். மாத சம்பளம் 8000 பவுண்டு கிடைக்கும் என்றும் கூறினான். ரெண்டு நாள் கழித்து ஒரு நியமனக் கடிதத்தை எனக்கு அனுப்பி இருந்தான். அதில் கூறப்படாத சலுகைகளே இல்லை எனலாம். நின்னா பவுண்டு, நடந்தா பவுண்டுதான். அப்புறமா உங்களோட சான்றிதழ், கடவுச்சீட்டு நகல் எல்லாம் அனுப்ப சொல்லி இருந்தாங்க. எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் எல்லாமே நகல்தானே கேட்கிறான்னு அதையும் அனுப்பினான்.
அப்புறம் கேட்டான் பாருங்க உங்களுக்கு விசா  எடுக்கனும். தங்குமிடம் ஏற்பாடு செய்யனும், டவுசர கழட்டனும் அப்படி இப்படின்னு சொல்லி கொஞ்சமே கொஞ்சமா ஒரு 1000 பவுண்டு கேட்டுட்டு, அடைப்பு குறிக்குள்ள இதையும் நீங்க இங்க வந்த உடனே  திரும்ப வாங்கிக்கலாம்ன்னு சொல்லி, ஒரு வங்கி கணக்கு எண் அனுப்பி அவனொரு திருட்டுபயல் என்பதை உறுதி செய்து இருந்தான்.  கடுப்பான நண்பன் அவனை திட்டி  எவ்வளவு கெட்ட வார்த்தை கொண்டு எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்.


அந்த திட்டுதலின் ஆரம்பம் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த அவனுடைய கொள்ளு பாட்டியில் நடத்தையில் சந்தேகப்படுவதில் இருந்து ஆரம்பித்து இருந்தது!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!