Thursday, August 16, 2012

பசுமை நிறைந்த பால்யம்!!!

விடியலில்  இருள் கரையதொடங்குவது போல, பால்யம் சுமந்த நினைவுகள் முழுவதும்  என்னுள்  கரைந்து  வியாபிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து  பூனை படம் போட்ட  நீலகலர் பனியனை போட்டுக்கொண்டு அலைந்து  திரிந்த நாட்கள் ஒரு வசந்த காலம். பச்சைக் கம்பளம் விரித்த பசிய வயல்களுக்கு நடுவே தாத்தாவின் கைபிடித்து வரப்பில் நடந்ததும், வயலில் நடவு நடும் வேலையாட்களின் குலவை சத்தமும், நாற்று பறித்து லாவகமாக முடிச்சிடும் போது பசுந்தளிர் சிறிதாக கசங்குவதால் ஏற்படும் ஒருவித வாசமும்  இன்னும் என் மனதை விட்டு அகலாதவை.

எல்லோரும் பள்ளி செல்லும் நாளில், மட்டம் போடுவதைப் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை  பால்யத்தில். பள்ளி செல்லா நாளொன்றின் முற்பொழுதுகளில் அலை அலையாய் இறங்கி கொண்டிருக்கும் வெயிலின் ஊடாக அலைந்து திரிவதும், கிரீச்சென்றும், மெல்லிய முனங்களுடனும்   விதவிதமான ஒலிகளை எல்லாம் எழுப்பிகொண்டு  சுற்றி வரும் செக்கடியும், அந்த செக்கு மரத்தண்டில் அமர்ந்து காலால் மணல்  தரையில்  கோடிழுத்து செல்வதும், அந்த  வெம்மையிலும் வாணியொழுக செக்கிழுக்கும் மாடுகளுடன்  சுற்றுவதுமாக  கழியும் எனது பள்ளி செல்லா நாட்களின் பகல்  பொழுதுகள்.

கோடைக்கால வெயிலின் உக்கிரம்  தணிந்த ஒரு  சாயந்திரத்தின்வீட்டின்  முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின்  அடியில் கழியும் எனது இரவுப்   பொழுதுகள். வெயிலின் வெக்கை தெரியாமலிருக்க வாசலில்  தெளிக்கப்படும் தண்ணீரும், அதனால்  கிளம்பும்  மண்வாசனையும், சிறிது ஈரம் காயவிட்டு அதில் ஒரு பாயை போட்டு படுத்திருக்கும் போது  வேப்பமரத்திலிருந்து வீசும் மிதமான இளந்தென்றலும்,  அவ்வப்போது ஆசிர்வதிப்பது போல உதிர்க்கப்படும் வேப்பம்பூக்களும்...   யப்பா அனுபவித்தறியா  பேரானந்தம் இன்னும் என் நினைவுகளில்!!!

 எப்போது நினைத்தாலும் பெருமூச்சிட்டு ஏங்க  வைத்த எனது  பால்யம் சுமந்த நினைவுகள்  இப்போது பசுமையாய்  எனது நினைவுகளில் மட்டும்.!!!

                                                                                                                     பால்யம் மலரும் .....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Thursday, August 9, 2012

மழலைகள் ....




எப்படி எடுத்தாலும்
எல்லா புகைப்படத்திலும்
அழகாய் இருக்கின்றனர்
குழந்தைகள்.

எப்படி  கேட்டும்
அனுமதி கிடைப்பதில்லை
மழையில்  நனைந்திட,

கொஞ்சும் மழலையில்
மிரற்றுவது போல்
கேட்கப்படுகின்றன
பதிலளிக்க இயலவிலா
கேள்விகள்.

எத்தனையோ முறை
எத்தனித்த கோபத்தை
நீர்க்குமிழியாய்
உடைத்துவிட்ட உன்
பொக்கைவாய் புன்னகைகள் ,

வாழ்வின் அர்த்தத்தையே
உணர்த்திவிடும்
எனக்கான  உனது தருணங்கள் !!!!!!!















Wednesday, August 8, 2012

எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க !!!


திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது அதை சட்டம் போட்டு தடுக்குற  கூட்டம் வேடிக்கை தான்  பார்க்குது. இதை நிரூபிப்பது போல ரெண்டு சம்பவம் நடந்தது,
சம்பவம் #1
போன வாரத்துல என்னோட  நண்பனிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அதாவது அவர்  லண்டனுக்கு   ஒரு வேலை விஷயமா போனப்ப  அங்க எதோ ஒரு  பிரச்சினையில மாட்டிகிட்டதாகவும், அதை தீர்க்க ஒரு ரெண்டு லட்சம் அனுப்ப சொல்லி இருந்தான் . உன்கிட்ட அவ்வளவு  பணம் இல்லாட்டி பரவாயில்ல உன்கிட்ட எவ்வளோ இருக்கோ அதை அனுப்பு. மீதிய நான் மத்த நண்பர்களிடம் இருந்து வாங்கிக்கிறேன். உன் பணத்த ஊருக்கு வந்த உடனே  எப்படியாவது திருப்பி தந்துடுறேன்னு  உறுதிமொழி வேற.லண்டன்ல ஒரு தெளிவான முகவரி மட்டும் இருந்தது ஆனால் அலைபேசி எண் எதுவும் இல்லை. எனக்கு  கொஞ்சம் சந்தேகம் வர   அவனோட துபாய் அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்ட போது சாட்சாத் அவனே எடுத்து பேசினான். அவனோட மின்னஞ்சலை யாரோ ஹாக் செய்து விட்டதாகவும், இதே போன்ற பல மின்னஞ்சல்களை பலருக்கும் அனுப்பி விட்டதாகவும்  கூறினான். அப்போது அவன் கேட்டான் மச்சான் உனக்கு சந்தேகம் எப்படி வந்ததுன்னு? கடுப்பில் இருந்த நான் கூறினேன் “தக்காளி இந்த மூஞ்சி எல்லாம் போற அளவுக்கு லண்டன் ஒன்னும் அவ்வளவு மோசமாகலைன்னு”

சம்பவம் #2
நண்பன் ஒருவனை வேலையில் இருந்து நீக்கி விட்டார்கள். ரொம்ப மும்முரமாக வேலை தேடிக்கொண்டிருந்தான். பாரபட்சமில்லாமல் கிடைக்கும் எல்லா  நாடுகளுக்கும், எல்லாவிதமான வேலைக்கும் விண்ணப்பித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மிகவும் சந்தோஷமாக பேசினான். மச்சான் லண்டன்ல ஒரு வேலை கிடைச்சிருக்கு, நியமனக் கடிதம் இன்னும் ஒரு வாரத்தில் கிடைப்பதாகவும் கூறினான். மாத சம்பளம் 8000 பவுண்டு கிடைக்கும் என்றும் கூறினான். ரெண்டு நாள் கழித்து ஒரு நியமனக் கடிதத்தை எனக்கு அனுப்பி இருந்தான். அதில் கூறப்படாத சலுகைகளே இல்லை எனலாம். நின்னா பவுண்டு, நடந்தா பவுண்டுதான். அப்புறமா உங்களோட சான்றிதழ், கடவுச்சீட்டு நகல் எல்லாம் அனுப்ப சொல்லி இருந்தாங்க. எங்களுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தாலும் எல்லாமே நகல்தானே கேட்கிறான்னு அதையும் அனுப்பினான்.
அப்புறம் கேட்டான் பாருங்க உங்களுக்கு விசா  எடுக்கனும். தங்குமிடம் ஏற்பாடு செய்யனும், டவுசர கழட்டனும் அப்படி இப்படின்னு சொல்லி கொஞ்சமே கொஞ்சமா ஒரு 1000 பவுண்டு கேட்டுட்டு, அடைப்பு குறிக்குள்ள இதையும் நீங்க இங்க வந்த உடனே  திரும்ப வாங்கிக்கலாம்ன்னு சொல்லி, ஒரு வங்கி கணக்கு எண் அனுப்பி அவனொரு திருட்டுபயல் என்பதை உறுதி செய்து இருந்தான்.  கடுப்பான நண்பன் அவனை திட்டி  எவ்வளவு கெட்ட வார்த்தை கொண்டு எழுத முடியுமோ அவ்வளவையும் எழுதி அவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான்.


அந்த திட்டுதலின் ஆரம்பம் மூன்று தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த அவனுடைய கொள்ளு பாட்டியில் நடத்தையில் சந்தேகப்படுவதில் இருந்து ஆரம்பித்து இருந்தது!!! 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Saturday, August 4, 2012

கொண்டவனின் கோபம் ...

 
கோபத்தில் கொந்தளிக்கிறது உன்  தேகம்
வார்த்தைகளால் காயப்படுத்த
துடித்து கொண்டே இருக்கிறது உன் குரூர மனம்  
உன் உதட்டு சூட்டின் வெப்பம் தாளாமல் 
ஒளிந்து கொள்கிறது ஆறாவது அறிவு
கொல்லும் குரூரம் வார்த்தைகளில்
தவிர்க்கவோ, தடுக்கவோ இயலாமல்
 நிராயுதபாணியாய் நான்,
 விஷமாய் இருக்கும் உடலில் இருந்து 
வரும் வார்த்தைகளில்  மட்டும்
அமிர்தமா சொட்டப்போகிறது ???
வார்த்தை கத்திகளில்  விஷம் தோய்த்து
லாவகமாக   வீசத்தெரிந்த உனக்குத்
தெரியவில்லை இப்போதெல்லாம் 
நீ காயப்படுத்துவது என்  உடலைத்தான்
உணர்வுகளை அல்ல என்று  
ஏனென்றால்
அவைதான் மரணித்து மாதங்களாகி விட்டதே.!!!







Tuesday, July 31, 2012

கரைமேல் பிறக்க வைத்தான் ...

"சங்கறுப்பதெங்கள் குலம்என்று பெருமையாக  பாடப்பட்ட பரதவரின் சங்கு தான்  இன்று இனவெறி பிடித்த சிங்கள நாய்களால் அறுக்கப்படுகின்றன.
போராட்டமே வாழ்க்கையாகிப் போன நம் மீனவர்களுக்கு, கடலோரப் பாதுகாப்பு என்ற  பெயரில் சிங்கள கடலோர காவற்படையால் அனுதினமும் சித்திரவதைக்கோ, உளவியல் ரீதியாக  துன்புறுத்தப்பட்டோதான்   இந்த தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள் . தினமும் மீன்பிடி வலைகள்  அறுபட்டோ, படகுகள் சேதப்படுதப்பட்டோ, உடமைகள் இழக்கப்பட்டோ சமயங்களில் உயிர் இழக்கப்பட்டோதான் மீனவர்களின் பிழைப்பு நடைபெறுகிறது. அதுவும் தமிழன்  ரத்தத்தை  குடிப்பதில் சிங்கள தோட்டாக்களுக்கு ஒரு அலாதி பிரியம்.
"சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்"
என்ற முண்டாசுக்கவியின் கனவு நம் தமிழனின் சவங்களின் மேல்தான் அமையும் போலிருக்கிறது.

 பிழைப்பு சம்மந்தமாக ஒரு ஒப்பீடு செய்து பாருங்கள் நமக்கும் அவர்களுக்கும் உள்ள மலையளவு வித்தியாசம் புரியும்

  • அனுதினமும் உருமாறும் குணாதிசயங்களை கொண்டது இல்லை நமது  பிழைப்புக்கான தளம்.
  • நமது  மனதைரியமும், வாழ்வாதரத்திற்கான  அடிப்படையும் தினமும் சோதிக்கப்படுவது இல்லை.
  • உழைப்பின் அளவுகோலை தவிர்த்துவிட்டுநமது  அதிர்ஷ்டத்தை நினைத்து பார்க்கவேண்டிய அவசியம்  இல்லை .
  • எல்லாவற்றிற்கும்  மேலாக நாம்  துப்பாக்கி முனையிலோ அல்லது எப்போது சுடப்படுவோம் என்று தெரியாமலோ வேலை பார்ப்பது இல்லை.
 
வெறுங்கையுடன்  உடலும் மனமும் வெறுத்து , உயிர் மீண்டுகரை திரும்புவது என்பது   எவ்வளவு கொடுமையான நிகழ்வு. இதே போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்ந்தன என்ற நிலை மாறி அனுதினமும் அவர்களை சாகடிப்பது போன்றதொரு நிலை வருவதற்கு மிக முக்கியமான காரணம் நமது அரசாங்கமும் அதன் மெத்தன போக்கும்தான்.  இதில் கட்சி பாகுபாடு எல்லாம் கிடையாது. எத்தனை பேரை சிறை பிடித்து சென்றாலும் அல்லது சுட்டு கொன்றாலும்  நமது அரசாங்கத்தின் அதிகபட்ச செயலாக்கம்  நமது நடுவண் அரசுக்கு ஒரு கடிதம் எழுதுவது, அல்லது காதலியுடன் உரையாடுவது போல தொலைபேசியில் கதைப்பது.  இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நம்மளை இப்படி  ஏமாற்றிக்கொண்டு இருக்கப்போகிறார்களோ  தெரியவில்லை? இதை எல்லாம் கேட்கிற நமக்கே இவ்வளவு வேகம் வருகிறதென்றால் பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு ஆற்றாமையினாலும்,இயலாமையால் வருகிற  கோபம்  எப்படி இருக்கும்? அந்த உணர்ச்சிகள்  எங்கனம் வெளிப்படும்?

இதெல்லாம் நமக்கு தொலைக்கட்சிகளிலோ அல்லது செய்தித்தாள்களிலோ வருகிற ஒரு செய்தி.இதில் நாமா  பாதிக்கப்படுகிறோம்எங்கோ ஒரு மூலையில் அழுகுரல் கேட்கும் அதுவும் சவலை பிள்ளையின்  அழுகுரல் போல . இதற்கெல்லாமா நாம் கவலைப்படுவது!!! நாம் கவலைப்படுவதற்கு  எத்தனையோ விஷயங்கள் ,
குஷ்புவின் இடுப்பை கிள்ளியது யார்நித்தியானந்தாவின் சிஷ்யையா கவுசல்யா? மகத் எனக்கு தம்பி மாதிரி டாப்சி  பேட்டி !!!

அடுத்தடுத்து நம்மளை சந்தோஷப்படுத்த நித்தியானந்தா சி.டி யோ அல்லது ஒரு நடிகையின் ஆபாச  சி.டி யோ வந்து சேரும். அந்த  சி.டி உண்மையா பொய்யா? என்று நீயா? நானா ?அளவுக்கு விவாதம் நடைபெறும்... ஏன்னா நம்மள யாரும் ஏமாத்திடக்கூடது இல்ல!!!.
 இவை எல்லாமே   நான்கு  நாட்களுக்குத்தான்.அதற்கப்புறம் அம்மணமாய் சி.டி யில்  இருந்தவன் வந்து அருள்வாக்கு சொல்வான் .அதற்கும் கூட்டம் கூடும் ஏனென்றால் மறதிதான்  நமது தேசிய சொத்தாயிற்றே !!!. 

"கடாரம் , ஸ்ரீ விஜயமும் கொண்டு" கீழ்த்திசை கடல்  முழுவதும் கோலோச்சிய பண்டைய தமிழனின்  வீரமும், விவேகமும் இன்று இத்தாலி நாட்டுக்காரியின் கண்ணசைவுக்கு காத்து இருக்கின்றன.

நமது மீனவர்களுக்கு   தொழில் ரீதியான வசதிகளை அதிகப் படுத்தி, மாநில அரசின் மூலம் அதிகப்படியான  அழுத்தத்தை  நடுவண் அரசிற்கு  கொடுத்து, "சீக்கியனின் மயிரை  விட தமிழ் மீனவனின் உயிர் மலிவானதல்ல" என்ற நிலையை உருவாக்காவிட்டால்   இத்துயரங்களுக்கு விடிவு கிடையாது.

தமிழ் மீனவரின் துயரை தீர்க்காமல்நாம் சாப்பிடும் மீன்கள் எல்லாம் கறை  படிந்த மீன்கள் .. ஆம்  நம் "தமிழ் மீனவர்களின் ரத்தக்கறை படிந்த மீன்கள்".!!!


வாழ்க வளமுடன்!!!  தமிழ் தந்த புகழுடன் !!!