விடியலில் இருள் கரையதொடங்குவது போல,
பால்யம் சுமந்த நினைவுகள் முழுவதும்
என்னுள் கரைந்து வியாபிக்கிறது. எனக்கு நினைவு தெரிந்து
பூனை படம் போட்ட நீலகலர்
பனியனை போட்டுக்கொண்டு அலைந்து திரிந்த நாட்கள் ஒரு
வசந்த காலம். பச்சைக் கம்பளம்
விரித்த பசிய வயல்களுக்கு நடுவே
தாத்தாவின் கைபிடித்து வரப்பில் நடந்ததும், வயலில் நடவு நடும்
வேலையாட்களின் குலவை சத்தமும், நாற்று
பறித்து லாவகமாக முடிச்சிடும் போது
பசுந்தளிர் சிறிதாக கசங்குவதால் ஏற்படும்
ஒருவித வாசமும் இன்னும் என் மனதை
விட்டு அகலாதவை.
எல்லோரும் பள்ளி செல்லும் நாளில், மட்டம் போடுவதைப் போல மகிழ்ச்சி தருவது வேறொன்றுமில்லை பால்யத்தில். பள்ளி செல்லா நாளொன்றின் முற்பொழுதுகளில் அலை அலையாய் இறங்கி கொண்டிருக்கும் வெயிலின் ஊடாக அலைந்து திரிவதும், கிரீச்சென்றும், மெல்லிய முனங்களுடனும் விதவிதமான ஒலிகளை எல்லாம் எழுப்பிகொண்டு சுற்றி வரும் செக்கடியும், அந்த செக்கு மரத்தண்டில் அமர்ந்து காலால் மணல் தரையில் கோடிழுத்து செல்வதும், அந்த வெம்மையிலும் வாணியொழுக செக்கிழுக்கும் மாடுகளுடன் சுற்றுவதுமாக கழியும் எனது பள்ளி செல்லா நாட்களின் பகல் பொழுதுகள்.
கோடைக்கால
வெயிலின் உக்கிரம் தணிந்த ஒரு சாயந்திரத்தின்,
வீட்டின் முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின் அடியில்
கழியும் எனது இரவுப் பொழுதுகள்.
வெயிலின் வெக்கை தெரியாமலிருக்க வாசலில்
தெளிக்கப்படும் தண்ணீரும், அதனால் கிளம்பும் மண்வாசனையும், சிறிது ஈரம் காயவிட்டு
அதில் ஒரு பாயை போட்டு
படுத்திருக்கும் போது வேப்பமரத்திலிருந்து வீசும் மிதமான இளந்தென்றலும்,
அவ்வப்போது ஆசிர்வதிப்பது போல உதிர்க்கப்படும் வேப்பம்பூக்களும்...
யப்பா அனுபவித்தறியா பேரானந்தம் இன்னும் என் நினைவுகளில்!!!.
எப்போது நினைத்தாலும் பெருமூச்சிட்டு ஏங்க வைத்த எனது பால்யம்
சுமந்த நினைவுகள் இப்போது பசுமையாய் எனது நினைவுகளில் மட்டும்.!!!
பால்யம் மலரும் .....
பால்யம் மலரும் .....
வாழ்க
வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!