Thursday, October 11, 2012

மரம்தான் மறந்தான்!!!

                                                         நம்மில் எத்தனை பேருக்கு  ஏழூர்  அய்யாசாமி அல்லது  ஜாதவ் பயாங் பற்றி தெரியும். நமக்கு ஒருவரை பற்றி தெரியவேண்டுமானால்   அவர்கள்  ஒரு  அரசியல்வாதியாகவோ, சினிமா பிரபலமாகவோ  அல்லது கிரிக்கெட் வீரராகவோ இருக்க வேண்டும். இவர்கள் அப்படி கிடையாது ஆனால் அதை விட மேலானவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

அசாமை  சேர்ந்த ஜாதவ் பயாங் ஒரு தனி மனிதனாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கியவர் . மரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக இல்லை என்று     வனத்துறையால்  கைவிடப்பட்ட     இடத்தில்தான்  இவர் இதை உருவாக்கி காட்டியுள்ளார். நினைத்து பாருங்கள் ஒரு எளிய,  தனி  மனிதனின் முயற்சி எப்பேர்பட்ட காரியத்தை சாதித்துள்ளது .
 

 இன்னொருவர் நம்ம ஊர்க்காரர் ஏழூர்  அய்யாசாமி சத்தியமங்கலம் அருகே   இவர் கிட்டத்தட்ட ஒரு 10000 மரங்களை பொது நல நோக்கோடு  வளர்த்துள்ளார் . இவரும் ஒரு  எளியவர் . தண்ணீர் தட்டுப் பாடு உள்ள கோடைகாலத்திலும் வீட்டிலிருந்து  தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார்.  நாம் என்ன செய்தோம் அவர் வளர்த்ததில் 7000 மரங்களை திட்டமிட்டு வெட்டினோம்.

இத்தகைய செய்திகளை பார்க்கும் போது படிக்க நேரமில்லாமல் கடந்து விடுகிறோம் அல்லது படித்துவிட்டு  அதிகபட்சமாக அவரை மனதிற்குள் பாராட்டுகிறோம்  அவ்வளவுதான்.

நிற்க நேரமில்லாமல் நாம் ஓடி உழைத்துக் கொண்டிருப்பது யாருக்காக ? நமது அடுத்த தலைமுறைக்காகத்தானே! நம்மை விட மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்கத்தானே நாம் இவ்வளவு போராடுகிறோம் . ஆனால்  உண்மையில்  நாம் அவர்களுக்கு என்ன கொடுக்க போகிறோம் தெரியுமா?

மலடாக்கப்பட்ட மண்.
ஓட்டையிடப்பட்ட  ஆகாயம்.
ஆழ்துளையிட்டாலும் கிடைக்காத நிலத்தடி நீர்.
கற்பழிக்கப்பட்ட காற்று .

என பஞ்ச பூதங்களையும் நாசமாக்கிவிட்டோம்  நெருப்பைத்தவிர . சொல்லுங்கள்  இதை கொடுக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ? 
முன்பு இலவசமாய் ,சாதாரணமாய் கிடைத்தவை எல்லாமே இப்போது காசு கொடுத்து வாங்குகிறோம். சொல்லமுடியாது நமது அடுத்த சந்ததி காற்றை கூட காசு கொடுத்து வாங்கும் நிலை வந்தாலும்  வரலாம்.

 இவை அனைத்தையும் மரம் வளர்ப்பதின் மூலமாக சரி செய்ய இயலும். நகரத்தில் வாழ்கிறேன் என்னால் இங்கு செய்ய இயலாது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், நாம் நினைத்தால் சாதிக்க இயலாது ஒன்றும் இல்லை நண்பர்களே . நமக்கெல்லாம் ஒரு வேர்பிடிப்பாய் கட்டாயம் நமது கிராமங்கள் இன்னமும்  இருந்து கொண்டுதான் இருக்கின்றன.  அங்கு செய்யுங்கள். எதுவுமே செய்ய இயலாது என்றால்  குறைந்த பட்சம் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.
முடிந்தவர்கள் செய்யட்டும்.முடியாதவர்கள் உதவட்டும்.

ஒன்று ஒன்றாய் தான்  நூறு.
சிறு துளி  பெரு  வெள்ளம்.
சிறு விதை பெரு விருட்சம் !!!

தனிமரமும்  தோப்பாகும்  நண்பர்களே நாம் மனது வைத்தால்  !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, October 8, 2012

மறைந்து விட்ட திண்ணைகள் !!!

                                        திண்ணைக்கும் நமக்குமான தொடர்பு அலாதியானது.   வீட்டின் எத்தனையோ இடங்கள் நமக்கு  பிடித்தமான ஒன்றாக இருந்த போதிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் எதோ ஒருவிதமான நெருக்கத்தை , அன்யோன்யத்தை  தந்திருக்கும் இந்த திண்ணைகள்.
சிறுவயதில் வெளியில் விளையாடி விட்டு தாமதமாய் வீடு திரும்பும் போதோ, அல்லது அனுமதி இல்லாமல்  பஞ்சாயத்து டி.வியில் படம் பார்த்துவிட்டு, தாமதமாய்  ஒருவித கலக்கமான மனநிலையில் வீடு திரும்பும் போதோ  வீட்டின் நிலவரத்தை நிசப்தத்தின் வாயிலாக  அறிவிப்பது   இந்த  திண்ணைகள் தாம்.
                          
ரேங்க் கார்டை அப்பாவிடம் கொடுத்துவிட்டு   நேர்கொண்டு பேச இயலாமல் தவித்த எத்தனையோ பொழுதுகளில் தாய்க்கோழியாய்  அடைகாத்த  அந்த தூண்களும்,  போட்டி போட்டு கொண்டு சுண்ணாம்பு அடித்த தூண்களில் கிறுக்கிய பெயர்களும், பொங்கலன்று புதிதாய் உடுத்திகொள்ளும்  காவி பார்டர்களும்,    திண்ணையில் உள்ள உத்திரத்தை எட்டி தொட்டு பார்த்து எனது    உயரத்தை அளந்த விதங்களும்,
 உச்சிவெயிலில் ஊர்சுற்றிவிட்டு வர, மிளகாயும், வற்றலையும் காய  வைத்து விட்டு , வாகாய்  தூணில் சாய்ந்து கொண்டு அம்மாவும், அக்காக்களும் பேசிக்    கொண்டிருக்கும் இடமாய் , கோபம் கொண்ட இரவுகளில் சாப்பிடாமல் வீம்பாய் சுருண்டு    படுத்துக்கொள்ளும் இடமாய்,  விடுமுறை நாட்களின் உச்சி வெயில் போதுகளில் தாயமோ, பரமபதமோ  விளையாடும்  இடமாய், யாருமற்ற  தனிமையில் மல்லாந்து  படுத்து ஓடுகளையும், குறுக்கு சட்டங்களையும் எண்ணிக்கொண்டு இருக்கும் இடமாய்  இருந்தது இந்த திண்ணைகள் தாம். 

படம் பார்க்கவோ, ஆற்றில் குளிப்பதற்கோ அனுமதி கிடைத்த   சந்தோஷத்தில்  துள்ளி குதித்து கொண்டு வெளி வரும் போது  எனக்கு சொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிபந்தனைகளின்  கடைசி  வார்த்தைகளின் சாட்சியாக நின்றவை  இந்த தூண்களும், திண்ணைகளும்  தான் .

வெவ்வேறு கால உருமாற்றங்களின் சாட்சியான திண்ணை   தாழ்வாரமாகி, பிறகு மரச்சட்டமிடப்பட்ட தட்டிக்குள்  அடைந்து, இன்று வழக்கொழிந்து போய்விட்டன.

விருந்தோம்பலின் அடையாளமாய் ஒரு காலத்தில் திகழ்ந்த இந்த திண்ணைகள் இன்று நமது நினைவுகளிலும், புகைப்படங்களிலும் மட்டுமே இருக்கின்றன,                        
கால எந்திரம் சுழற்றிய சுழற்சிகளின் மௌன சாட்சியாய் !!!


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!! 








Saturday, September 29, 2012

தாண்டவம் தண்டனையா !!!

நம்ம சீயான்  விக்ரம், அனுஷ்கா வோட சோடி போட்டு நடிக்க, படம் பட்டைய கிளப்பும்ன்னு பார்த்தா நம்மளுக்கு கடுப்பதான் கிளப்புது.
தாண்டவம் படத்தோட கதை என்னன்னா நண்பனோட துரோகத்தால  "ரா" ல   இந்தியாவின் டாப்  அஞ்சு  பேருல ஒருத்தரா இருக்குர விக்ரம் அவரு     பொண்டாட்டியையும் , கண்ணையும் ஒரு குண்டு வெடிப்புல பறிகொடுத்த கடுப்புலஅதுக்கு காரணமான எல்லாரையும்  பழிவாங்குறது தான் கதை.  
 
கண்ணு தெரியாமல் நம்ம விக்ரம் அசால்ட்டா போய் , நாயர் கடையில டீ குடிக்கிறமாதிரி  கொலைகளை பண்றாரு கூடவே நம்மளையும். இதெல்லாம் அவரு எப்படி செய்ராருன்னு நாம தண்ணிய குடிச்சு குடிச்சு யோசிக்கும் போது படத்துல சொல்றாங்க அது ஒரு " எக்கோ லொகேஷன்  டெக்னாலஜியாம்"   என்னமோ போடா மாதவா !!!
இடையில் எமி ஜாக்சன் வேறு, போட்டோ ஷூட்டுக்கு அப்புறம் கண்ணு தெரியாத விக்ரமை இம்ப்ரெஸ் பண்ண சர்ச்சில் சர்வீஸ் செய்வதும், கண்ணைக்கட்டி கொண்டு நடந்து மூஞ்சி,  முகரையை உடைத்து கொள்வதும் சகிக்கல. 
அடுத்ததா அத்தாச்சி லட்சுமிராய் , விக்ரமிடம்  கொல்லவேண்டியவனை பற்றி தகவல் தருவது ஏதோ CIA  ஏஜென்ட்  ரகசியம் காப்பது போல சொல்கிறார்கள் முகத்தயே காட்டாமல். பின்பு முகவரியை ஐ போனில் sms வேறு அனுப்புகிறார். கண்ணு தெரியாதவர் எப்படி படிப்பாருன்னு(ப்ரைலி எல்லாம் இதுல வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல) கேட்டா அதுக்கு  ஏதாவது   "தடவிங்  டெக்னாலஜி" என்று புது பெயர் சொன்னாலும் சொல்வார்கள்.

கல்யாண பொண்ணு  அனுஷ்கா மாப்பிள்ளை என்னாவா இருக்காருன்னு கூட தெரியாம அவர கல்யாணம் பண்ண சம்மதிச்சு டெல்லிலேருந்து  வர்ற அப்பாவி  கண் டாக்டர் . விக்ரம் சொல்ல நினைச்சிருக்கும் அதே மொக்கை காரணங்களை சொல்லி ( பார்க்கணும், பிடிக்கணும் ,பழகனும் , பிரண்ட்ஸ் , காதல் ,கல்யாணம் அப்புறம்தான்   லொட்டு லொசுக்காம்" )
இதையெல்லாம் "லொட்டு லொசுக்குக்கான"  ராத்திரியில  அனுஷ்கா சொல்றாங்க, கூடவே விக்ரம் மச்சினிச்சி (நல்ல பிகருங்க ) அக்காவின் அருமை பெருமைகளை சொல்ல  இதைகேட்டு விக்ரம் இம்ப்ரெஸ் ஆகி பியானோவும்,  கையுமா சுத்துறார் பொண்டாட்டிய  லவ் பண்ண !! புதுசா இருக்குல்ல!!!! ( மௌன ராகம் படத்துக்கும் இதுக்கும் சம்மந்தம்  இல்ல!!!!!! ) .

படத்தில் கொஞ்சம் ஆறுதலான விஷயம் சந்தானம் வருமிடங்கள்.முதல் கொலையை சந்தானம் போலீசிடம் சொல்கையில்
 சார் திஸ் இஸ் டெட் பாடி, கம்மிங் ப்ரம் மொட்ட மாடி, கமிங் கமிங் அண்ட் டேமேஜிங் கார் பாடி என்று கிளாஸ் டம்ளரை உடைக்குமிடமாகட்டும், விபத்து நடந்தவுடன் டைமிங்காக வரும் "ஒளிமயமான எதிர்காலம் பாடலும்"  நாசருக்கு நக்கலாக பதில் சொல்வதாகட்டும் எல்லா இடங்களும் சரவெடி பட்டாசு.
 நீரவ் ஷா வோட ஒளிப்பதிவு அட்டகாசமா இருக்குது. அனுஷ்கா புறாக்களுக்கு இரை  போடுமிடமும், கல்யாணப் புடவையில் வருமிடமும்  அருமை. பின்ணணி இசை பொருந்தி இருக்கிறது  .இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம்.

கேள்வி கேட்கணும்னா கேட்டு கிட்டே இருக்கலாம் அவ்வளவு லாஜிக் ஓட்டைகள். வேற வழியே இல்லன்னா ஒரு படம் பார்த்தே தீரனும்னா, இல்லாட்டி ஓசி டிக்கெட்டுன்னா  பாருங்க படத்த, விக்ரம் படம், தெய்வதிருமகள் விசய் படம்ன்னு போனீங்கன்னா உங்க பர்சுக்கும், கடுப்பாகி உங்க உடம்புக்கும்   சேதாரம்தான்!!!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 27, 2012

கரண்ட மிச்சம் பண்ண சில யோச(ரோத ) னைகள் !!!


பின் விளைவுகளுக்கு  கம்பெனி பொறுப்பல்ல !!!!!

1. எங்கெங்க  ட்ரான்ஸ்பார்மர் இருக்கோ  அங்கெல்லாம் எதோ ரிப்பேர் வேல பார்க்குறமாதிரி  நல்லா சீன்  போடுங்க . 
நாங்களும் சரி சரி  இந்த வேல முடிஞ்சோன்ன சீசன்ல குற்றாலத்துல தண்ணி வந்து பாயுறமாதிரி  கரண்ட் வந்து பாயும்ன்னு நெனைச்சி நாங்களும் மனச தேத்திக்கிவோம் . ஒரு  ஏரியாவுல ஒரு   ட்ரான்ஸ்பார்மர்  வேலை முடிஞ்சதும் அதே ஏரியாவுல  அடுத்த நாள் அடுத்த ட்ரான்ஸ்பார்மர் வேல பார்க்க  ஆரம்பிக்கணும்.  (நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா  பண்ணனும் மங்குனியாரே !!!!)
2 . கரண்ட் எப்போ வரும்ன்னு  போட்டி ஒன்னு வைச்சு எல்லாரையும்  sms  அனுப்ப சொல்லலாம். யாரு சரியா கணிச்சு  சொல்றாங்களோ அவங்க வீட்டுக்கு  பன்னெண்ண்ண்ண்ண்ண்.............டு     மணி நேரம் கரண்ட் குடுப்பதாக சொல்லலாம். ஒரு நாளைக்கா, ஒரு வாரத்துக்கான்னு சொல்லிராதீங்க !!!

3 . டிவியும் இல்ல பொழுது போக, அதுனால  தெருமுனையில, ஜங்க்ஷன்ல  ஜோடி நம்பர் 1,   மானாட மயிலாட,  போட்டியில ஆடுனவுங்களை ஆட விட்டிங்கன்னா மக்களுக்கு பொழுதும் போகும், கொஞ்சம்  கோபமும் கொறையும்.

4. எல்லா டிவியிலையும்  வீராசாமி,லத்திகா போன்ற உன்னத திரை  காவியங்களை திருப்பி திருப்பி போட சொல்லலாம், தப்பி தவறி உங்களுக்கு தெரியாம கரண்ட் இருந்துச்சின்னாலும், அந்த படத்த பாக்குறவங்களுக்கு  டிவி பார்க்குற ஆசையே போயிரும். உங்களுக்கும் கரண்ட் மிச்சமாகும். (சொல்ல முடியாது நம்ம பவர் ஸ்டார் புளகாங்கிதம் அடைஞ்சு கட்சிக்கு நிதி ஏதாவது குடுப்பாரு.)

5 . காலேஜ் டே, பஸ் டே மாதிரி "பவர் கட் டே" என்று புதுசா ஒன்ன ஆரம்பிச்சு பகல் நேரத்துல கொண்டாடலாம். சாக்லேட்டுக்கு பதிலா மெழுகுவர்த்தி குடுக்கலாம். என்ன  ஒன்னு இதை வாராவாரம்  கொண்டாடனும்.

6. அம்மா இலவசமா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி எல்லாம் இந்த ஆட்சியிலையும், கரண்ட அடுத்த ஆட்சியிலையும் தருவதா ப்ளான் பண்ணி இருக்காங்கலாம் . ஏம்மா நீங்க இதையெல்லாம் தர்றதை நிறுத்திட்டு, மெழுகுவர்த்தி, சிம்னி விளக்கு, பெட்ரோமாக்ஸ் லைட் , இதுகள தாங்களேன் எங்களுக்கு உபயோகமா இருக்கும். அப்புறம் யாராவது   கரண்ட் வேணும்ன்னு கேப்பாங்களா என்ன??

அய்யா அஞ்சு வெரலக்காட்டி ஓட்டு கேட்டப்ப நாங்களும் உதயசூரியனை  சொல்றாருன்னு நினைச்சு ஒட்டு போட்டோம்,  ஆனா  அவரு அஞ்சு மணிநேரம் பவர் கட் பண்ணினாரு.....

அதே மாதிரி அம்மா ரெண்டு விரல காட்டி ஓட்டு  கேட்டப்ப , நாம  கொஞ்சம் சுதாரிச்சு  சர்தான் அம்மா பவர் கட்ட ரெண்டு மணிநேரமா கொறைக்க போறாங்கன்னு அப்பாவியா நெனைச்சுகிட்டு அவங்களுக்கும் ஓட்டை போட்டு தொலைச்சிட்டோம். இப்பதான் புரியுது அந்த ரெண்டு வெரலுக்கு அர்த்தம், ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம்தான் பவர்ன்னு ...... என்ன கொடுமை சரவணா இது !!!!!!




ஒட்டு வாங்குறப்ப அஞ்சு விரலையும் , ரெண்டு விரலையும் மாத்தி மாத்தி காமிச்சி  இப்போ எங்களுக்கு நடு விரலை காமிச்சுட்டீங்களே இது நியாயமா ???!!!!!!!!!!!!

வாழ்க வளமுடன்!! தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 20, 2012

இலை கொழுக்கட்டையும், விநாயகர் சதுர்த்தியும் !!!

                                                                    விநாயகர் சதுர்த்தி  அதுவுமா பேஸ்புக்குல  நம்ம இரவுவானம் சுரேஷ் ஒரு   கொழுக்கட்டை போஸ்ட்டுல  "நச்" கமெண்டுகளா    போட்டு தாக்க, அந்த கொழுக்கட்டை படத்த பார்த்த   நம்மளுக்கும்  கொழுக்கட்டை சாப்பிடணும்ன்னு ஆசை வர,  "முதல் முறையாக நமது கிச்சன் வரலாற்றில்" அப்படீன்னு சன்  டி.வி எபெக்டோட,   விநாயகர் சதுர்த்தியை  இலைகொழுக்கட்டையோட கொண்டாட  முடிவு பண்ணியாச்சு. செய்முறையை அரை மணி  நேரமா அம்மாகிட்ட   விலாவரியா போன்ல  கேட்டு தெரிஞ்சுகிட்டாச்சு.
நம்ம பரிசோதனை எலிகள்கிட்ட (ஹி...ஹி.. நம்ம ரூம்மேட்ஸ் ) எல்லாம்  சொல்லிட்டு,  சாயந்திரம்  வெல்லம், அரிசிமாவு சகிதம் ரூமுக்கு போனா எந்த இலையில செய்யப் போறேன்னு?  நண்பன் கேட்க , அங்க ஒரு சத்திய சோதனை "இலை வடிவுல".  பூசர  இலைக்காக  துபாய் பூரா  தேடியாச்சு எங்கயும் கிடைக்கல. "மனமிருந்தா மார்க்க பந்துன்னு" சொல்லிட்டு வாழையிலை  வாங்கியாச்சு.

அரிசிமாவை பிசைஞ்சு இலையில தடவ சொல்லிட்டு,    பூர்ணம் செய்வதற்காக வெல்லப்பாகு காய்ச்சி, பருப்பை போட்டு கடைஞ்சா, பாயசம் கணக்கா இருக்குது!! அவ்ளோ தண்ணி, நானும்  மனசு  விடாம  தேங்காய் துருவலை எல்லாம் போட்டு கெட்டியாக்க  பார்க்குறேன் ஒண்ணும் வேலைக்கு ஆகல... அந்த நேரம் பார்த்து வந்த நண்பன் ஒருத்தன் பாயாசம் நல்லாருக்கேன்னு சொல்ல, மனசு ஒடைஞ்ச  நான் அந்த அரிசி மாவை தூக்கி கொட்டி கிளற  கொஞ்சம்  கெட்டியாக ஆரம்பிச்சது,அப்ப உள்ள வந்த இன்னொருத்தன் என்னடா  மச்சான் இலைகொழுக்கட்டை செய்யுறேன்னு சொல்லிட்டு சர்க்கரை பொங்கல் கிண்டிக்கிட்டு இருக்கேன்னு? கேட்க, எனக்கு வந்த கடுப்புல பொங்கலை   ச்சே.. அந்த பூர்ணத்தை  நல்லா  கிண்ட ஆரம்பிச்சேன்.

 இன்னொரு நண்பன் கொஞ்சம் கடலை மாவை போட்டு கிண்டுனா  கெட்டியாகும்னு சொல்ல, கொய்யால போடு அதையும்!!! எல்லாத்தையும்  போட்டு கிண்டி ஒருவழியா ஒரு பதத்துக்கு கொண்டுவந்தாச்சு.  இலைக்கொழுக்கட்டையை அவிச்சு எடுத்தவுடன் ஒருத்தன் சாப்பிட்டுட்டு சூப்பர்ன்னு சொல்லிட்டு  (உண்மையிலே நல்லா  தான் இருந்துச்சு ) சாப்பிட ஆரம்பிக்க, ஆனா செஞ்சு முடிச்ச   எனக்குதான் நாக்கு தள்ளிப்போச்சு .   ஆரம்பம் முதல் நான்  பட்ட கஷ்டத்தை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு  நண்பன் கேட்டான் என்ன, இனிமே இதுமாதிரி எல்லாம் செய்யவேண்டாம்ன்னு தானே நினைக்குறேன்னு கேட்க, சேச்சே அப்படி எல்லாம் இல்லைடா  மச்சான்,  
 

என்ன செய்யுறமோ அதோட பேரு சொல்லாம செஞ்சோம்னா , ரிசல்ட்டுக்கு தக்கமாதிரி பேரு வைச்சிருக்கலாமேன்னு யோசிச்சேன் என்றேன் நான்!!!.

வாழ்க வளமுடன்!!!தமிழ் தந்த புகழுடன் !!!