Tuesday, March 21, 2017

பெய்யெனப் பெய்யும் மழை

இலக்கின்றி பெரு  வெளிப் பரப்பில்  நடந்துகொண்டிருந்த எனக்கு  சில்லென்று வீசிய காற்று மழை வரப்போவதை கட்டியங்கூறியது . அந்த காற்றில் இருந்த ஈரப்பதம் மனதை இலகுவாக்க ஆரம்பித்தது . 

கோடைமழை பிடித்தால் விடாது என்பதற்கேற்ப கருங்கும்மென்ற மழை மேகங்கள்    குவிய ஆரம்பித்தன. மழையை எதிர்பார்த்து  தானாகவே கால்கள் நடையின் வேகத்தை குறைத்தன.

சொட்டென்று முகத்தில் விழுந்து தெறித்தது முதல் துளி. என்னதொரு  ஆனந்தம்,அடுத்தடுத்த மழைச்  சொட்டுகளுக்காக  இன்னும் மழைத்துளிகளை எதிர்பார்த்து முகம் தன்னிச்சையாய் ஆகாயம் நோக்கியது.

தரையில் விழுந்த துளிகள் மண்ணுடன் கலந்து ஒரு சுகந்தத்தை எங்கும்   பரப்ப  ஆரம்பித்திருந்தது. அது ஒரு வாசனை.வேறேதிலும் நுகர்ந்தறியா வாசனை.   மெதுவாய் நாசி தொட்டு,  நாடி நரம்பெல்லாம் வியாபித்து, என்னுடன் இரண்டறக் கலந்து  என்னைக் கிறங்கடிக்கும் இந்த வாசனை.
கொஞ்ச நேரம்தான், கொஞ்ச நேரமேதான் ஆனால்  மனதை பரவசமாக்கி, கணநேரம் பிரபஞ்ச கவலை  மறக்கடித்து,  ஆகாயத்தில் பறக்க விட்டு  சட்டென்று அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதவாறு நிறுத்திவிடுவதில் இந்த மண்வாசனைக்கு நிகர் வேறேதுமில்லை . 

ஒன்றாய், இரண்டாய்,  நூறாய், ஆயிராயிரமாய்  வானத்துக்கும் பூமிக்குமான மெல்லிய கம்பித் தொடர்பு ஆரம்பித்திருந்தது. இப்படி உயிர்ப்பிக்கும் மழையில் நனைந்து எத்தனை நாளாகி விட்டன. இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும் இது போன்ற ஓரிரு விஷயங்கள் தான் வாழ்க்கையை   இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கோடை வெயிலில் தகதகத்துப்  போயிருந்த  வெப்ப பூமி ஆவலுடன் மழையை உள்வாங்க ஆரம்பித்தது   பசித்திருக்கும் குழந்தை பசியாறுவதை நினைவு படுத்தியது.மனம் மெதுவாய் மழைக்கான காரணிகளில் லயித்திட ஆரம்பித்தது .

சில சமயங்களில்  கடமை ஏதுமற்ற அந்த கணங்கள் அற்புதமானவை. அதுவும் யாருமற்ற பெரு வெளியில் பெய்யும் பெருமழையில் கரைவதென்பது  ஒரு சுகானுபவம்.  மழை ஒன்றும் பேதம் பார்ப்பதில்லை மனிதனைப் போல,   விருப்பமிருப்பின் வாருங்களேன் மழையில் நனைய !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Tuesday, July 12, 2016

முதல் முத்தம் !


நாம் காதலிக்க ஆரம்பித்த கால கட்டத்தில் நீதான் எப்பொழுதுமே  பேசிக்கொண்டிருப்பாய்.  நான் புன்னகையுடன்  கேட்டுக்கொண்டே இருப்பேன் . நான் பேசிய  வார்த்தைகள் கொஞ்சமே .அதிலும் நானாய்  பேசிய வார்த்தைகள்  கொஞ்சத்திலும் கொஞ்சமே . 

பேசக்  கூடாது என்றெதுவுமில்லை. உன்னருகில் இருக்கையில்  ஒரு வித கிறக்கத்தில் , ஒரு தேவதையிடம் வரம் கேட்கும் ஒரு உபாசகனைப்  போலிருப்பேன் நான்.

ஒரு மழைக்கால மாலைப்பொழுதில் உங்களுக்கு பிடிச்சது பத்தி சொல்லுங்களேன்  என்று  செல்ல சிணுங்கலுடன் ஆரம்பித்தாய்  நீ .

என்ன பிடிக்கும் எனக்கு  ??  சற்றே  யோசனையாய் ஆரம்பித்தேன் ,

முற்றம் வைத்த
வீடு பிடிக்கும்.
முழு நிலா பிடிக்கும்
மொட்டை மாடியில் வானம்
பார்த்து படுக்க பிடிக்கும்.
நட்சத்திரம் எண்ணி
தோற்கப் பிடிக்கும்.
பெரு வெளிப்பரப்பில்
இலக்கின்றி நடக்கப் பிடிக்கும் .

மழை  பிடிக்கும்,
அதனால் கிளர்ந்தெழும்
மண்வாசனை பிடிக்கும்.
மழைக்குப் பின் வெக்காளித்த
வானம் பிடிக்கும்.


நிறைவாய்த்  தளும்பி  இருக்கும்
நீர்நிலை பிடிக்கும்
உழுதுண்டு வாழப்பிடிக்கும்.
கதிர் முற்றி நிலம் நோக்கும்
நெல்வயல் பிடிக்கும்.
பச்சை புல்வெளியில்  கசங்கிய புல்லின்
வாசனை பிடிக்கும்

அந்தி வானம் பிடிக்கும்
அதிலும்
புதுப்பெண் பூசிய வெட்கமாய்
சிவந்து, கலைந்து கிடக்கும்
செக்கர் வானம் பிடிக்கும்
மார்கழி மாதம் பிடிக்கும்

அடர் கானகம் பிடிக்கும்
கடலலைக்கும் கரைக்குமான கொஞ்சல்  பிடிக்கும்
இயல் இசை நாடகமாய் இருக்கும்
முத்தமிழும் மொத்தமாய் பிடிக்கும் .

சுயநலமில்லா  அன்பு பிடிக்கும்
அதன் மறு உருவான
அம்மா பிடிக்கும்
அம்மாக்களுக்கு  பிடித்தமான
குழந்தைகள் பிடிக்கும்.

முத்தாய்ப்பாய்
என் குழந்தையை சுமக்கப் போகும்
உன்னை ரொம்ப  பிடிக்கும் .


என்றேன். காதல் சொட்டும் பார்வையுடன்  என் கன்னத்தில் சட்டென்று உன் இதழ் பதித்து முதல் முத்தத்தை தந்தாய். காதல் கிறக்கத்துடன் முணுமுணுத்தேன், அடி கள்ளி! இது முன்பே கிடைத்திருந்தால்  எனக்கு பிடித்தவைகளின்  பட்டியலில் உன் முத்தமே முதலாவதாய்  இருந்திருக்குமென்றேன். 

வெட்கத்தால் சிவந்திருந்த உன் முகம் இன்னும் சிவப்பாக ஆரம்பித்தது !!!.



வாழ்க வளமுடன் , தமிழ் தந்த புகழுடன் !!!.








Wednesday, December 3, 2014

நாதனும் குருவும் !!!!!!!

நெறைய நாள் காலேஜுக்கு வெளியேயும்  கொஞ்ச நாள் காலேஜுக்கு  உள்ளேயும் படிக்கிறோம்ன்னு  சொல்லிட்டு சுத்திகிட்டு இருந்த அந்த நாள்ல, எங்கள கொஞ்சம் தெறிக்க விடுற ஆள் யாருன்னா எங்க காலேஜ் வாட்ச்மேன்கள் ,
#1:நாதன் :
அவரு பேரு நாதன். மெல்லிசா ஊதினா பறக்குற மாதிரி இருப்பார், ஆனா டூட்டில ரொம்ப வெறைப்பா இருப்பாரு.   காலையில  எட்டரைக்கு மேல மெயின் கேட்டை பூட்டிருவாங்க.  அதுக்கு காவலா  இந்த ஆளு உட்கார்ந்து   லேட்டானதுக்கு   காரணம்   கேப்பார் . காரணம் கேக்குறது பெருசு இல்ல அதை  இங்கிலிஷ்ல கேப்பார். அதான் பிரச்சினையே.

 நம்மளுக்கு இங்கிலீஷ்  எல்லாம் இன்கமிங் மட்டும்தான் .நோ அவுட் கோயிங். அதுனால அவரு கேக்குற அத்தனை கேள்விக்கும் சளைக்காம டக்கு டக்குன்னு   தமிழ்லயே பதில்  சொல்லி ரொம்ப சில நாள்  மட்டும் உள்ளேயும் பலநாள் வெளியே "அக்கா கடை" இல்லன்னா "மாமா கடை"யில  இருந்து எங்க காலேஜை பத்திரமா பார்த்துக்குவோம் . 

இப்புடி எங்களப் போன்ற அவுட்ஸ்டேண்டிங் ஸ்டுடண்ட்ஸ கடுப்பேத்துற 
"வெள்ளைக்கார நாதன்" எங்க ப்ளாக்ல இருந்த பாத்ரூமுக்கு  போக, இதைப்  பார்த்த நாங்க, அந்த ரூமை வெளிய பூட்டிட்டோம் . கொஞ்ச நேரம் கழிச்சு அவரு கதவ தட்ட, நாங்க யாருன்னு கேட்க,  அவரு மெதுவா "நாதன்" ன்னு சொல்ல நாங்க "நாந்தான்னா" யாருய்யா ? உன் பேர  சொல்லுன்னு சொல்லி ரொம்ப   நேரம் சத்தெடுத்தோம் .இடைக்கு இடையில அந்த கதவு நாதங்கிய புடிச்சு தொறக்கிற மாதிரி நாங்க  பாவ்லா  பண்ணுறதும் , அவரும் வேகமா கதவைத் தொறக்க முயற்சி பண்ணுறதுமா ரொம்ப சுவாரஸ்யமா போச்சு எங்களுக்கு. 
அப்புறம்  போனா போகட்டும்ன்னு  அவரு வயசு, காலேஜ்க்கு அவர் பண்ணின சர்வீஸ் எல்லாத்தையும் மனசுல வச்சி கடைசி வரைக்கும் கதவை  தொறக்காமலே அப்புடியே விட்டுட்டு போய்ட்டோம். 

 அப்புறம் என்ன  அவரு டூட்டில  இருந்தாருன்னா , நாங்க கேட்டை மட்டும் பார்த்து தொட்டு கும்பிட்டுட்டு,13வரியில உள்ளதை செய்ய ஆரம்பிச்சுடுவோம் .
#2:குரு :
இவர் பேர் குரு, அவரு ஊதினா நாம பறந்திடுற மாதிரி நல்லா ஓங்கு  தாங்கா இருப்பார். இவரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுதான்.ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்குற குரு கையில ரெண்டு, மூணு சிகரெட்டை  அவர் கையில வச்சு அழுத்துனா போதும் கேட்டு திறந்திடும். உள்ளே போக, வெளியே வர ரெண்டுக்கும் இதுதான் ப்ரொஸீஜர்.         

வகுப்பிலிருந்து வெளிநடப்பு செஞ்ச ஒரு மதியம், ரூமுக்கு போகலாமுன்னு வந்தா கேட்டுல நம்ம "குரு". சரி சிகரெட்டு ஏதாவது இருக்கான்னு பார்த்தா யார்கிட்டயும் இல்ல. கீழ கிடந்த ஒருகிங்க்ஸ்  சிகரெட்டு பாக்கெட்டுல , அக்கம் பக்கம்  கிடந்த ஒட்டு பீடிய பொருக்கி போட்டு கொண்டு போயி குடுத்தோம்.  சிரிச்சிகிட்டே உள்ள பார்க்காம வேகமா  வாங்கி பேன்ட் பாக்கெட்டுல சொருகிக்கிட்டு கதவை தொறந்து விட்டுட்டாரு.

அடுத்த முறை அவரைப் பார்த்த போது, அவர் திட்டிய திட்டெல்லாம் எழுதினால் அது கெட்ட  வார்த்தைகளின் அகராதியாக இருந்திருக்கும்.
இப்படியாக ரெண்டு வாட்ச்மேன்களிடமும் பஞ்சாயத்து ஆகிவிட்டதால் நாங்க திருந்தி ,  

"காலேஜுக்கு லேட்டா   போறதை படிப்படியா  குறைச்சிக்கிட்டோம்.!!! அவ்வ்வ்வ் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



Monday, June 30, 2014

சலாலா போகலாம் வாரீகளா - 2

சலாலா போகலாம் வாரீகளா -1

நம்ம கம்பெனி கிட்டத்தட்ட ஒரு மன்னாரன் கம்பெனி மாதிரி, இஞ்சினியர்  விசா கிடைக்கலைன்னா கொஞ்சம் கூட கூச்சப் படாம லேபர் விசாவை  அடிச்சு தந்திடுவாங்க.  அதுல என்ன பிரச்சனைன்னா பேமிலி விசா எடுக்க தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும். அது மாதிரி போற பத்து பேருல ரெண்டு  பேருக்கு லேபர் விசா.  அல் அய்ன் பார்டர் கேட்டுல விசாரிச்சதுல  லேபர் விசா என்ட்ரி இல்லன்னு சொல்லிட்டாங்க.

நாங்க  உடனே புத்திசாலித்தனமா,  இஞ்சினியர்  விசா இருக்கிற பாஸ்போர்ட்ட முதல்லயும், லேபர் விசா இருக்கிற நண்பர்களோட பாஸ்போர்ட்ட கடைசியாவும்  வச்சி நீட்ட,  நம்ம நேரம் மொத்தமா எல்லா பாஸ்போர்ட்டையும் வாங்கின அந்த ஆபிசர்  அதை நேரா வைக்காம அப்புடியே குப்புற கவுத்தி வைக்க, எனக்கோ  அது எங்களையே கவுத்த மாதிரி ஆயிடுச்சு.

அந்த ஸ்ட்ரிக்ட் ஆப்பிசர் கிட்ட  எவ்வளவோ கெஞ்சி கேட்டும், கால்ல விழுந்து கதறி கேட்டும் வன்மையா மறுத்துட்டாறு அந்த லேபர் விசா உள்ள நண்பர்களுக்கு விசா தர,

நினைச்ச மாதிரியே எட்டு பேருக்கு விசா கிடைச்சிருச்சி அந்த இருவரைத் தவிர்த்து, கொஞ்சம் எதிர்பார்த்து இருந்ததால அவங்களும் பெருசா ஒன்னும் பீல் பண்ணல. ஆனா ஒருத்தன்  மட்டும் வேகமா வெளியில வந்து இன்னொரு நண்பனை கோபமா திட்ட அவனும் ரொம்ப அமைதியா இருந்தான். விஷயம் என்னன்னா விசா வாங்க உள்ள போகும் போதுதான் இவன்  சொல்லி இருக்கான் ஒரு வண்டியில 5 பேரு போறது கொஞ்சம் கஷ்டம் 4 பேருன்னா  நல்ல தாராளமா  போகலாம்ன்னு !!!! "நல்ல வாய் "

அப்புறம் அந்த 8 பேரும்  பயணத்தை தொடர்ந்தோம்.  நீ இனிமே திங்கிறத தவிர வேற  எதுக்கும் வாய தொறக்க கூடாதுங்குற கண்டிஷனோட !!!

 ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னுட்டு ஒமானுக்குள்ள நுழைஞ்சா ஆச்சர்யம்!!!  நல்ல தென்றல் காத்தும் மிதமான வெயிலுமா ரொம்ப இதமா  இருந்துச்சு  அந்த மக்களைப்போலவே. நானும் கேள்விப்பட்டதுண்டு அந்த நாட்டு  குடிமகன்களுக்கு நிறைய உதவும் மனப்பான்மை உண்டுன்னு, அதை  உணர்ந்து  கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. எதுக்காகவேனும்  வழியில்  வண்டியை நிறுத்தி நின்றாலும்,   நம்மை கடந்து செல்லும் வாகனம் சற்று வேகம் குறைந்து நாம் பிரச்சினை ஏதும்  இல்லையென சைகை செய்தவுடன்  தான் கடந்தார்கள்.

எட்டு மணிக்கு ஒரு பெட்ரோல் பம்ப்பில் வண்டியை நிறுத்தி டேங்க் பில் பண்ணிட்டு, அங்க இருந்தவன்கிட்ட  ஏதாவது  டிபன் பார்சல் வாங்க ஹோட்டல் இருக்கான்னு  கேட்டது தான் தாமதம், கிரகம் எங்களைப் பிடிக்க ஆரம்பித்தது ,
                                                                                                               இன்னும் போவோம் ....

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Wednesday, March 5, 2014

வெட்கங்களின் தேவதை!!!

உன்னை முதலில் பார்த்தது கிராமத்து   நண்பனின் வீட்டு விஷேசத்தின் போதுதான். நட்சத்திர பரிவாரங்களுடன் வெளிவரும் வெண்மதியாய்,இளஞ்சிவப்பு நிற தாவணியில்  தேவதையாய்  உன் தோழிகளுடன்   தரிசனம் தந்தாய்  அன்று.

தேவதை சிரிப்பதையும்,பேசுவதையும்,  தரையில் கால் பாவாமல் நடப்பதையும் அன்றுதான் நேரில் கண்டேன். கண்டவுடன் காதல் என்பதில் எல்லாம் நம்பிக்கையற்று இருந்த எனது உறுதியை அசைத்து போட்டு விட்டது நீ தவற விட்ட கைக்குட்டை .

காதல்,  பெண்கள் என எதிலும் சுவாரஸ்யமற்று இருந்த எனக்கு நீயே மிகுந்த சுவாரஸ்யமானாய்.சற்றே அலுப்பு தட்டின எனது வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாக்கியது  உனது வருகை.

நண்பனின் தங்கையும்,அவளது தோழிகளும் அண்ணா என்றே என்னை அழைக்க, வெறும் வாங்க போங்கவுடன் நிறுத்திக் கொண்ட உனது செம்மொழியும், உன் பார்வை என்மேல்  பட்டபோது தெரிவித்த விழிமொழியும்,  எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த ரசவாதம் உன்னிலும் நிகழ்வதை எனக்கு உணர்த்தியது.

யாருடா அந்தப் பொண்ணு? என்று கேட்ட என்னை அதிசயமாய் பார்த்தவாறே   உன்னைப் பற்றி ஒப்பித்தான் என் நண்பன் . அவ்வப்போது உன்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் சொல்வதும் அவன்தான்.

நான் விசாரித்ததைப்  போலவே நீயும் என்னைக்குறித்து விசாரித்ததை பின்னாளில் அறிந்தவுடன் கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு அதீத  நம்பிக்கை பிறந்தது.காதல் தேவதையின் ஆசிர்வாதமோ என்னவோ, உனக்கான வேலையும் எனது ஊரிலேயே கிடைத்து விட எனக்கோ கொண்டாட்டமாகிப் போனது.

அவ்வப்போது கிடைக்கும் தேவதையின் தரிசனமே மீண்டும் மீண்டும் என்னை காதலோகத்தில் சஞ்சரிக்க வைத்தது. எதிர்ப்படுகையில் வழக்கமான நல விசாரிப்புகளுடன் என்னைக் கடந்து போய்விடுவாய்.  தயக்கம் கலைத்த ஒரு மாலையொன்றில் அலைபேசினாய், எனக்கோஅது குயிலின் கீதம்.

ஏதோ கனவில் பேசுவது  போல இருந்தது. அதன் பின்னர்  தினமும் என்னை எழுப்புவதே உனது குட்மார்னிங்  குறுந்தகவல்கள்தான்.

உடன் வேலை செய்யும் பெண்களுடன் எத்தனையோ பேசினாலும், உன்னுடனான வார்த்தைகள் சொற்பமே.   எனக்கும் சேர்த்து  நீதான் எல்லாம் பேசுவாய்.
ஏன் ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க ? என்ற உன் கேள்விக்கும்  வழக்கம் போல் என் புன்னகையே  மௌனமாய் பதில் சொல்லும்.

காதலை சொல்லிக் கொள்ளவில்லை நாமிருவரும் அவ்வளவுதான்.இருவருக்குமான மனவோட்டங்களை குறித்து  மனதளவில்  புரிந்துணர்வு இருந்தாலும் கூடவே ஒரு தயக்கமும் இருந்தது.  திருமணம் செய்து வைக்க எனது  வீட்டில் காட்டிய தீவிரம் எனது தயக்கத்தை தூரப்போட வைத்தது.

உனக்கு மிகவும் பிடித்த தினமான   கார்த்திகை தீபத்தன்று  உன்னை என்  வீட்டிற்கு அழைத்தேன். நிறைய பரவசமும் கொஞ்சம் தயக்கமுமாய் என் வீட்டில் அடியெடுத்து வைத்தாய். அமர்க்களப்பட்டது வீடு.

சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்து விட்டு, நமக்கென வாய்த்த ஒரு தருணத்தில் தீபங்களுக்கிடையில்  ஒரு மகா  தீபமாய், படர்த்திய பெரிய விழிகளுடன் என்னை பார்த்து, உன் அம்மாவிடம்  என்னை யாரென்று  கூறினாய்? எனக் கேட்டாய் .

வழக்கம் போல மொழியறியா  என்  புன்னகையை கண்வழியே கடத்தி   உன் விழியுடன் நன்றாக உறவாட விட்டு    "இன்று உன் மருமகளை கூட்டி வருவதாகச் சொன்னேன் " என்றவுடன், குறுகுறுத்த பார்வையும் , லேசாகத்  தெரியும் அந்த தெத்துப்பல்லுமாய் மெல்லிய  அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் வெட்கப்பட்டாய் நீ.

அதுவரை  தேவதையாய் இருந்த  நீ,  அன்றுதான் "வெட்கங்களின் தேவதை" ஆனாய். நானோ கொண்ட  காதல் கைகூடிய மகிழ்ச்சியில்  தீபங்களின் ஒளியில் கரையலானேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!