இன்று காலை என்ன செய்தான் தெரியுமா?
இப்பொழுது என்ன செய்கிறான் தெரியுமா ?
என்று
உன்னைப்பற்றிய குற்றச்சாட்டுகளுடன்
தொடங்குகின்றன உன் அம்மாவின்
உரையாடல்கள் சற்றே பெருமையுடன்,
வெகு சீக்கிரமாய் எழுந்து
விழித்திடாத உன் அம்மாவின்
முகம் பார்த்து சிரித்து கிடந்தது,
வெளியே செல்லும் தாத்தாவுடன்
கிளம்பிட துடித்த உன் தாவல்கள்,
சாப்பிட மறுத்து நீ மாற்றும்
முகபாவனைகளும்,
பிடிவாதமாய் ஊட்டியதால்
உதடு துடிக்க வெடித்து கிளம்ப
காத்திருக்கும் உன் அழுகையும்,
பொய்க்கோபம் கொண்டு அதட்டும்
உன் அம்மாவும், அதை நேர்செய்யும்
விதமாய் உன் மந்தகாசப் புன்னகையும்
உன் ஒவ்வொரு அசைவையும்
துளித்துளியாய்
ரசித்துக்கொண்டிருக்கின்றனர் வீட்டில்.
"குழலினிது யாழினிது" என்னும் வள்ளுவன்
வாக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் அப்பா அந்நிய தேசத்தில் .
அங்கு நீ தவழ்ந்து கொண்டிருக்கிறாய்
உன் பிரிவால்
நான் இங்கு தவித்துகொண்டிருக்கின்றேன் .
சில வார்த்தைகளை படிக்கும் போது
உணராத அர்த்தங்களை
வாழ்வின் பக்கங்கள்
அவற்றை கடக்கும் போது
அழகாய் உணர்த்திவிடுகின்றன
சில நேரங்களில் வலியுடன் !!!
வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!