Sunday, July 7, 2013

மரணித்து விட்டதா மனிதம்???

சமீபத்தில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யு வில்  நிகழ்ந்த தற்கொலை காணொளியை பார்க்க  நேரிட்டது. சண்முகம் என்ற இளைஞர்  மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தார்.  சுயநலம் பிடித்த மால் நிர்வாகம் அதை செய்து முடித்து விட்டது .  

என்னதொரு கொடூரம். கீழே  விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதனை காப்பாற்ற முயற்சி செய்யாமல் வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது ?

இதுவே தனது மாமனோ அல்லது மச்சானாகவோ இருந்தால் இதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்குமா ?? மனசாட்சி உள்ளவர்கள் சிலர் சேர்ந்து சிகிச்சை அளிக்க எடுத்துச் செல்ல வற்புறுத்தியும் ,பார்மாலிட்டிஸ்   என்று கூறி மறுத்துவிட்டதாம் மால் நிர்வாகம், குறைந்த பட்ச முதலுதவியைக்கூட செய்ய வில்லை நிர்வாகம்.

ஆம்பூலன்ஸ் மற்றும் கடமை தவறாத காவல்துறை வந்து  உயிரற்ற சடலத்தை எடுத்து சென்றார்களாம் சிகிச்சைக்கு !!!!

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் "  என்ற வள்ளலார் பிறந்த மண் இது .. ஆனால் நாம் தான்  ஒரு மனித உயிர்  துள்ளத் துடிக்கப்  போராடும் போது  கவைக்குதவாத சட்டத்தையும் பார்மாலிட்டிஸ் பற்றி பேசி ஒரு மனித உயிரை கொன்று விட்டோம். 

இன்னும் சிலரோ ஏன் திமிரெடுத்து தற்கொலை செய்து கொண்டான் என்கின்றனர். வாழ்க்கையை லாவகமாக  வளைத்தோ  அல்லது வளைந்தோ   வாழும்  கலை எல்லோருக்கும் வருவது இல்லை. கணப்பொழுது தடுமாற்றம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது என்ன செய்வது ??

அற்ப விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத சமூகத்தை தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். பணம் காய்க்கும்  இயந்திரங்களாகத்தான் நாம் அடுத்த தலைமுறையை உருவாக்கி வருகிறோமே  தவிர வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து  வாழ  கற்றுத்தரவோ, கற்றுத்கொள்ளவோ விரும்புவதில்லை நாம் என்பதே நிதர்சனம்  .

ஒளி படைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சுமாய் அடுத்த தலைமுறையை உருவாக்கும்  உறுதியோடு உங்களில் ஒருவன்.


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!










Thursday, July 4, 2013

420 ஏர்டிக்கெட்டும், அடிபொலி அக்கௌன்டன்ட்டும்!!

என்னோட நண்பன் ஒரு மன்னாரன்   கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தான்  (பின்னே நம்மளோட  ப்ரண்டு மலேசியா கம்பெனிலையா   வேல பார்ப்பான்) அப்படி ஒரு டுபாக்கூர் கம்பெனி அது. எப்படின்னா,

வெக்கேஷன்ல ஊருக்கு போயிருக்கவனுக்கெல்லாம் சம்பளம் போட்டு இருப்பானுங்க. இங்க வேல பார்க்குறவனுக்கு சம்பளம் போட்டு இருக்க மாட்டாங்க  கேட்டா , 

ஓ, நீ  நாட்டிலேருந்து திறுச்சி வந்தோ ?? எப்போ ? 
அப்படின்னு கேட்டு நம்மளை கொலைகாரன் ஆக்கப் பார்ப்பாங்க. 

நாமளும், திருச்சியும் வரல்ல, திண்டிவனமும் வரல்ல நான்தான் துபாய் வந்தேன்னு  சொல்லி கதறி  நம்மளோட சம்பளத்தை கேட்டா, 

இன்னும் டைம் ஷீட் வந்திட்டில்லை பாய் அப்படிப்பாங்க!!!!

"டேய் நாங்க வேலை பார்க்குறோமோ  இல்லையோ டைம் ஷீட்டை   சரியா அனுப்பிடுவோமேடான்னு" சொல்லிட்டு
கொஞ்சம் ட்ரேஸ் பண்ணினா, அந்த பேப்பரை கீழ விரிச்சி சாப்பாடு சாப்பிட்டு இருப்பான் அந்த புண்ணியவான்.
மொத்தத்துல  சம்பளம் வாங்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்.

இப்படியெல்லாம் நன்கு  அனுபவப்பட்ட  நம்மாளு, ஒருமுறை ஊருக்கு போக   ஒருவாரம் மட்டுமே  அனுமதி கிடைக்க, சொன்ன தேதிக்கு திரும்பி வர்ற  ப்ரூப்புக்கு டூ வே  டிக்கெட்டையும் குடுக்கச் சொல்லிட்டாரு அவனோட டேமேஜர் ,  

லீவை எக்ஸ்டென்ட் பண்ற ஐடியால இருந்த நம்மாளு  ஒன் வே டிக்கெட்டை    டூ வே டிக்கெட்டா  வோர்டுல மாத்தி அவனோட டேமேஜர்கிட்ட கையெழுத்தை  வாங்கி   அக்கவுன்ட்ஸ்  க்ளைமுக்கு  அனுப்பிச்சுட்டான்.

எங்கே குட்டு வெளியாயிருமோன்னு கொஞ்சம் டென்ஷன்ல நம்மாளு  இருக்கும் போது,  அடுத்த நாள் சைட்ல அவனோட நண்பன் ஒருத்தன் வந்து அக்கவுன்ட்ஸ்லேருந்து போன்  பண்ணாங்க, உனக்கு  சிக்னல் கிடைக்கலயாம் (பேஸ்மென்ட் ல  சிலநேரம் சிக்னல் கிடைக்காது )  ஏர் டிக்கெட் சம்மந்தமா ஏதோ பேசணுமாம்  உன்னைய உடனே போன்  பண்ண சொன்னாங்கன்னு சொல்ல,  

அவ்வளவுதான்.தெறிச்சிட்டான் நம்மாளு.ரொம்ப கலவரத்தோட அக்கவுண்டண்டுக்கு  போன் பண்ண, 

அவரோ, சாரே  நிண்ட ஏர் டிக்கெட்டுல வல்லிய தட்டாயி (உன்னோட ஏர்  டிக்கெட்ல பெரிய தப்பு நடந்து போச்சி )  , ரிடர்ன் டிக்கெட்டுல  அதே பிளைட்  நம்பர் ,துபாய் டு திருச்சின்னு இருக்கு அப்படின்னாரே  பார்க்கலாம். நண்பனும்  மிக சாமர்த்தியமாக பாருங்க சார் எவ்வளோ பொறுப்பில்லாம ட்ராவல் ஏஜென்சி இப்படி  தப்பு பண்ணிட்டான்  சொல்லி  எஸ்கேப் ஆயிட்டான்.

நடந்தது இதுதான், வேர்டுல காப்பி  பேஸ்ட் பண்ண நம்மாளு திரும்பி வர்ற பிளைட்  நம்பர், ஊரை  எடிட் பண்ண மறந்துட்டான் . ஆனாலும் அந்த அடிபொலி அக்கௌவுண்டன்ட்  இப்பவும் எங்களுக்கு ஊறுகாய் தான்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!! 

















Monday, June 10, 2013

வாழ்வில் வரக்கூடாத நாள் .

மனதிற்குள்  அழுகை ,பயம், வெறுப்பு மற்றும் இன்ன பிற உணர்ச்சிகளும் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கும் நாள்.

விடுமுறை முடியும் சமயங்களில், நினைத்து நினைத்து பயந்து வெறுத்துக்  கொண்டிருக்கும் ஒரு நாள்.

கடந்த வருட நோட்டுகளின் எழுதப்படாத பக்கங்கள், கிழிபட்டு  ரஃப்  நோட்டாக உருமாறி பையினுள் ரெடியாக இருக்கும் நாள்.

பழைய யூனிபார்ம் துவைத்து மிகச்சரியாக  அயர்ன் செய்து வைக்கப் பட்டிருக்கும் நாள்.

 


புது வகுப்பில் யார் லீடராவது முதல்,கணக்கு டீச்சராக வருவது யார் என்று மனம் குமைய ஆரம்பிக்கும் நாள்.

எந்த ஆசிரியர்  வந்தாலும் கீறல் விழுந்த ரெக்கார்டாய் சொல்லும் "போன  வருஷம் மாதிரி விளையாட்டுத்தனமாய் இருக்கக்கூடாது". ஒழுங்கா படிக்கணும் என்று சொல்லும் நாள்.

நம்மை விட மோசமாய் படிப்பவன் (!!!) கொண்டு வரும் புது ஜாமென்ட்ரி பாக்சும்,அதை வைத்து அவன் செய்யும் அலம்பல்களை பார்த்து வயிறு எரியும் நாள் .

பாட்டி வீட்டு விடுமுறைக்கால குதூகலக் கொண்டாட்டங்கள் ,அத்தை மகள்கள் மற்றும்  சொந்தங்களுடன் அடித்த கும்மாளங்கள்   அனைத்தையும் ஒரு வாக்கியத்தில் போக்கடித்து விடும் அந்த நாள் ...

"இன்று  பள்ளி மறு திறப்பு நாள் "


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!





Sunday, May 19, 2013

மனதைப் பிசையும் சில விடை தெரியா கேள்விகள்!!


குல்மொஹர் மரம். பூக்கும்  பருவத்தில் இலை  எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு வெறும் பூக்களுடன் மட்டுமே தனக்கான  சகவாசம் என்பதாய் நினைத்துக் கொண்டு இருக்குமே அந்த மரம்தான். அந்த பூக்கள் பூப்பது, பின்  நிறம் மாறுவது  எல்லாமே அழகுதான். முதலில் அடர் சிவப்பாய் கூடவே பச்சையான சில மொட்டுகளுடன், பின் அந்த மொட்டுகளும் பூவாகி,  பின் மெல்ல நிறமிழந்து ஆரஞ்சு சிவப்பாய் கடைசியில் மஞ்சளாய், பிறகு வெளிர் மஞ்சளாய் மாறுவது வெகு அழகு.

எனது அலுவலகத்தின் முன் உள்ள சாலையில் இந்த மரங்கள் வரிசையாக நடப்பட்டு இருக்கும். பூத்து இருக்கும் அவற்றை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பார் அந்த ஓட்டுனர். யாரையோ  இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வருகைக்காக வண்டியிலேயே காத்துக் கொண்டிருந்தார் ஒரு குல்மொஹர்  மர  நிழலின் கீழ். வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார் போல, அவ்வப்போது கீழிறங்குவதும், அலைபேசியில் பேசுவதுமாக இருந்தார்.

சட்டென்று வந்து நின்றது துபாயின் போலிஸ் வாகனம். வரிசையாக அங்கு சாலையை ஒட்டி நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு அபராதம் எழுதியவர். தொடர்ச்சியாய் இந்த வண்டிக்கும் எழுத, பதறிப்போன அந்த பெரியவர் கீழிறங்கி அந்த போலீசிடம் மன்றாட, எதையும் பொருட்படுத்தாத  அந்த போலிஸ், அபராதம் எழுதி நீட்ட, சட்டென்று அந்த பெரியவர் அந்த போலிஸின் காலில் விழுந்து விட்டார்.

சகலமும் ஆடிப் போய்விட்டது எனக்கு. அதுவரை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, மனதில் பெரிய பாராங்கல்லை வைத்தது  போலாகிவிட்டது. என் தந்தை வயதிருக்கலாம் அவருக்கு . 
பிழைப்புக்கு வழி தேடி வந்த வெளிநாட்டில், தன்மானத்தை விட்டு தன் மகன் வயதே உடைய ஒருவரிடம், காலில் விழ வேண்டிய நிர்பந்தம் என்னவாயிருக்கும்?   எது அவ்வாறு  செய்யத்தூண்டி  இருக்கும்? அந்த நாளின் இரவுப் பொழுது எவ்வாறு இருந்திருக்கும் அவருக்கு? இது போன்ற விடை தெரியாக்  கேள்விகள் மனதை பிசைந்து  கொண்டே இருந்தன.

இருக்கலாம் கல்யாண வயதில் உள்ள மகளுக்கு சேர்க்க வேண்டிய பணமாகவோ  , இல்லை அவர்களது கல்விக் கட்டணமாகவோ , இல்லை குடும்பத்தின் மருத்துவ செலவாகவோ, இல்லையேல் அந்த குடும்பத்தின் உணவாகவோ மாற  இருந்திருக்கலாம் அந்த பணம்.

நன்றாகத்தான் போகிறது வாழ்கை. மனதை பிசையும் சில  விடை தெரியா  கேள்விகள் தோன்றாத வரை. 

அழகாய் பூத்ததுதான் இருக்கிறது அந்த குல்மொஹர் மரம். ஆனால் எனக்குத்தான் ரசிக்க மனமில்லை.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!










  

Tuesday, May 7, 2013

படிப்பது ஒரு பாவச்செயலா ??

பள்ளிக்கூடத்துல நல்ல விஷயம் எதுலயும் நம்ம பேர் வந்ததா வரலாறு,புவியியல் எதுவும் கிடையாது. நம்மளுக்கு சீனியரா ஒரு அண்ணன் இருந்தார். சீனியர்ன்னா ஒவ்வொரு வகுப்பிலும் ரெண்டு வருசமா படிச்சு அஸ்திவாரத்தை ரொம்ப பலமா போட்டுகிட்டு இருந்தார். அவருக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை "படிப்பு "

அண்ணன் படிப்பைத் தவிர மற்ற விஷயத்துல ரொம்ப கெட்டி. எந்த வாத்தியார்  இன்னைக்கு லீவுங்கிறதுல ஆரம்பிச்சு, என்னைக்கு   சத்துணவுல முட்டை போடுறாங்க  வரைக்கும்  அத்துபடி.

எங்களோட அறிவியல் வாத்தியார்  யாரையாவது ஒருத்தனை வாசிக்கச் சொல்லிட்டு நல்ல தூங்கி  பொழுதை போக்குவார். அந்த மாதிரி சமயங்களில் நம்ம அண்ணன் தான் கைகால் புடிச்சு விடுவார். குருபக்தின்னா அப்புடி ஒரு குருபக்தி ஹி ஹி .

தூக்கம் வராத நேரத்துல  அவர்  வகுப்பும் எடுப்பார் . இடையில ஏதாவது பேசினா,சேட்டை செய்தா அடி வெளுத்து விட்டுடுவார். பள்ளிக்கூடமே அவருக்கு பயப்படும்.ஒருநாள் வகுப்புக்கு வந்த அவர் நம்ம அண்ணனை பார்த்து, புத்தகத்தை எடுத்து வாசிக்க சொல்ல, அவன் அங்கும் இங்குமா புத்தகத்தை தேட, புத்தகம் எடுத்துட்டு வரலைன்னு அடி பிரிச்சுட்டாரு.

 அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவர், என்னடா இன்னைக்கு புத்தகம் கொண்டு வந்தியான்னு கேட்டுட்டு, அவனிடமிருந்தே  புத்தகத்தை வாங்கி வகுப்பெடுக்க, திடீரென சாமி வந்தவர் போல ஆவேசம் கொண்டு நம்ம அண்ணனை அடி வெளு வெளுன்னு வெளுத்துட்டார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாப் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு ஒரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லி  ரெண்டு மூணு வாத்தியார்கிட்ட கூடுதலா அடி கொடுத்து  அனுப்பி வைச்சாரு.

 கண்ணீர்க் கரையோட அழுதுகிட்டே வந்தவனிடம் என்னாச்சு ? எதுக்கு உன்னைய அடிச்சாங்கன்னு கேட்டதுக்கு,  அவன்  புத்தகத்தோட கடைசி பக்க  அட்டையை காமிச்சான். அதுல  இப்படி  திருத்தம் பண்ணி   வைச்சிருந்தான் பாவிப்பய..

 படிப்பது
தீண்டாமை ஒரு பாவச் செயல்.
பள்ளிசெல்வது
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
 பரீட்சை வைப்பது
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.
 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் ..