சமீபத்தில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யு வில் நிகழ்ந்த தற்கொலை காணொளியை பார்க்க நேரிட்டது. சண்முகம் என்ற இளைஞர் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தார். சுயநலம் பிடித்த மால் நிர்வாகம் அதை செய்து முடித்து விட்டது .
என்னதொரு கொடூரம். கீழே விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதனை காப்பாற்ற முயற்சி செய்யாமல் வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது ?
இதுவே தனது மாமனோ அல்லது மச்சானாகவோ இருந்தால் இதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்குமா ?? மனசாட்சி உள்ளவர்கள் சிலர் சேர்ந்து சிகிச்சை அளிக்க எடுத்துச் செல்ல வற்புறுத்தியும் ,பார்மாலிட்டிஸ் என்று கூறி மறுத்துவிட்டதாம் மால் நிர்வாகம், குறைந்த பட்ச முதலுதவியைக்கூட செய்ய வில்லை நிர்வாகம்.
ஆம்பூலன்ஸ் மற்றும் கடமை தவறாத காவல்துறை வந்து உயிரற்ற சடலத்தை எடுத்து சென்றார்களாம் சிகிச்சைக்கு !!!!
"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் " என்ற வள்ளலார் பிறந்த மண் இது .. ஆனால் நாம் தான் ஒரு மனித உயிர் துள்ளத் துடிக்கப் போராடும் போது கவைக்குதவாத சட்டத்தையும் பார்மாலிட்டிஸ் பற்றி பேசி ஒரு மனித உயிரை கொன்று விட்டோம்.
இன்னும் சிலரோ ஏன் திமிரெடுத்து தற்கொலை செய்து கொண்டான் என்கின்றனர். வாழ்க்கையை லாவகமாக வளைத்தோ அல்லது வளைந்தோ வாழும் கலை எல்லோருக்கும் வருவது இல்லை. கணப்பொழுது தடுமாற்றம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது என்ன செய்வது ??
அற்ப விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத சமூகத்தை தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். பணம் காய்க்கும் இயந்திரங்களாகத்தான் நாம் அடுத்த தலைமுறையை உருவாக்கி வருகிறோமே தவிர வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து வாழ கற்றுத்தரவோ, கற்றுத்கொள்ளவோ விரும்புவதில்லை நாம் என்பதே நிதர்சனம் .
ஒளி படைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சுமாய் அடுத்த தலைமுறையை உருவாக்கும் உறுதியோடு உங்களில் ஒருவன்.
வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!