Wednesday, December 18, 2019

கான்க்ரீட் காடு


பொட்டல் பெருவெளியான பாலையில் 
உருவாகிக் கொண்டிருந்தது அந்த
கான்க்ரீட் காடு.
வெயிலாடிய மதியமொன்றில்
தன் கூடு  தொலைத்த பறவை ஒன்று  
அலைந்தோடியது  அதன் கூட்டைத்  தேடி
அப்பெயர் தெரியா  பறவை போலவே 
தன் வீடு  தொலைத்த  தச்சனின் 
கருணையில் கிடைத்தது ஒரு
தற்காலிகக் கூடு.

மருங்கிய கண்களும் ஒட்டிய வயிறுமாய் 
பசித்து  ஒடுங்கியிருந்த அப்பறவைக்கு 
வங்கனும், தமிழனும்  சிதறிய பருக்கைகளே 
போதுமென்றானது முதலில்.
நாள்பட நாள்பட மதிய சோற்றின் 
முதல் கவளமே அப்பறவைக் கென்றானது.

வங்கனும், தமிழனும் காட்டிய கருணையில்  
கொழுத்திருந்தது அப்பறவை.
வெயில் கரைந்தோடிய
பிறகொருநாளில் 
வந்திறங்கிய வெள்ளைக்கார முதலாளிக்கு 
தெரிந்திருக்க வாய்ப்பில்லை 
அன்பினால் பின்னப்பட்ட 
அப்பறவையின் கூடு.
பிய்த்தெறியப்பட்ட  கூட்டின் குச்சிகளுக்கு 
இடையில் சிதறிக் கிடக்கிறது 
" தொழிலாளிகளின் கருணை."


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


Tuesday, March 21, 2017

பெய்யெனப் பெய்யும் மழை

இலக்கின்றி பெரு  வெளிப் பரப்பில்  நடந்துகொண்டிருந்த எனக்கு  சில்லென்று வீசிய காற்று மழை வரப்போவதை கட்டியங்கூறியது . அந்த காற்றில் இருந்த ஈரப்பதம் மனதை இலகுவாக்க ஆரம்பித்தது . 

கோடைமழை பிடித்தால் விடாது என்பதற்கேற்ப கருங்கும்மென்ற மழை மேகங்கள்    குவிய ஆரம்பித்தன. மழையை எதிர்பார்த்து  தானாகவே கால்கள் நடையின் வேகத்தை குறைத்தன.

சொட்டென்று முகத்தில் விழுந்து தெறித்தது முதல் துளி. என்னதொரு  ஆனந்தம்,அடுத்தடுத்த மழைச்  சொட்டுகளுக்காக  இன்னும் மழைத்துளிகளை எதிர்பார்த்து முகம் தன்னிச்சையாய் ஆகாயம் நோக்கியது.

தரையில் விழுந்த துளிகள் மண்ணுடன் கலந்து ஒரு சுகந்தத்தை எங்கும்   பரப்ப  ஆரம்பித்திருந்தது. அது ஒரு வாசனை.வேறேதிலும் நுகர்ந்தறியா வாசனை.   மெதுவாய் நாசி தொட்டு,  நாடி நரம்பெல்லாம் வியாபித்து, என்னுடன் இரண்டறக் கலந்து  என்னைக் கிறங்கடிக்கும் இந்த வாசனை.
கொஞ்ச நேரம்தான், கொஞ்ச நேரமேதான் ஆனால்  மனதை பரவசமாக்கி, கணநேரம் பிரபஞ்ச கவலை  மறக்கடித்து,  ஆகாயத்தில் பறக்க விட்டு  சட்டென்று அதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லாதவாறு நிறுத்திவிடுவதில் இந்த மண்வாசனைக்கு நிகர் வேறேதுமில்லை . 

ஒன்றாய், இரண்டாய்,  நூறாய், ஆயிராயிரமாய்  வானத்துக்கும் பூமிக்குமான மெல்லிய கம்பித் தொடர்பு ஆரம்பித்திருந்தது. இப்படி உயிர்ப்பிக்கும் மழையில் நனைந்து எத்தனை நாளாகி விட்டன. இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையில் அவ்வப்போது நடக்கும் இது போன்ற ஓரிரு விஷயங்கள் தான் வாழ்க்கையை   இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

கோடை வெயிலில் தகதகத்துப்  போயிருந்த  வெப்ப பூமி ஆவலுடன் மழையை உள்வாங்க ஆரம்பித்தது   பசித்திருக்கும் குழந்தை பசியாறுவதை நினைவு படுத்தியது.மனம் மெதுவாய் மழைக்கான காரணிகளில் லயித்திட ஆரம்பித்தது .

சில சமயங்களில்  கடமை ஏதுமற்ற அந்த கணங்கள் அற்புதமானவை. அதுவும் யாருமற்ற பெரு வெளியில் பெய்யும் பெருமழையில் கரைவதென்பது  ஒரு சுகானுபவம்.  மழை ஒன்றும் பேதம் பார்ப்பதில்லை மனிதனைப் போல,   விருப்பமிருப்பின் வாருங்களேன் மழையில் நனைய !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Tuesday, July 12, 2016

முதல் முத்தம் !


நாம் காதலிக்க ஆரம்பித்த கால கட்டத்தில் நீதான் எப்பொழுதுமே  பேசிக்கொண்டிருப்பாய்.  நான் புன்னகையுடன்  கேட்டுக்கொண்டே இருப்பேன் . நான் பேசிய  வார்த்தைகள் கொஞ்சமே .அதிலும் நானாய்  பேசிய வார்த்தைகள்  கொஞ்சத்திலும் கொஞ்சமே . 

பேசக்  கூடாது என்றெதுவுமில்லை. உன்னருகில் இருக்கையில்  ஒரு வித கிறக்கத்தில் , ஒரு தேவதையிடம் வரம் கேட்கும் ஒரு உபாசகனைப்  போலிருப்பேன் நான்.

ஒரு மழைக்கால மாலைப்பொழுதில் உங்களுக்கு பிடிச்சது பத்தி சொல்லுங்களேன்  என்று  செல்ல சிணுங்கலுடன் ஆரம்பித்தாய்  நீ .

என்ன பிடிக்கும் எனக்கு  ??  சற்றே  யோசனையாய் ஆரம்பித்தேன் ,

முற்றம் வைத்த
வீடு பிடிக்கும்.
முழு நிலா பிடிக்கும்
மொட்டை மாடியில் வானம்
பார்த்து படுக்க பிடிக்கும்.
நட்சத்திரம் எண்ணி
தோற்கப் பிடிக்கும்.
பெரு வெளிப்பரப்பில்
இலக்கின்றி நடக்கப் பிடிக்கும் .

மழை  பிடிக்கும்,
அதனால் கிளர்ந்தெழும்
மண்வாசனை பிடிக்கும்.
மழைக்குப் பின் வெக்காளித்த
வானம் பிடிக்கும்.


நிறைவாய்த்  தளும்பி  இருக்கும்
நீர்நிலை பிடிக்கும்
உழுதுண்டு வாழப்பிடிக்கும்.
கதிர் முற்றி நிலம் நோக்கும்
நெல்வயல் பிடிக்கும்.
பச்சை புல்வெளியில்  கசங்கிய புல்லின்
வாசனை பிடிக்கும்

அந்தி வானம் பிடிக்கும்
அதிலும்
புதுப்பெண் பூசிய வெட்கமாய்
சிவந்து, கலைந்து கிடக்கும்
செக்கர் வானம் பிடிக்கும்
மார்கழி மாதம் பிடிக்கும்

அடர் கானகம் பிடிக்கும்
கடலலைக்கும் கரைக்குமான கொஞ்சல்  பிடிக்கும்
இயல் இசை நாடகமாய் இருக்கும்
முத்தமிழும் மொத்தமாய் பிடிக்கும் .

சுயநலமில்லா  அன்பு பிடிக்கும்
அதன் மறு உருவான
அம்மா பிடிக்கும்
அம்மாக்களுக்கு  பிடித்தமான
குழந்தைகள் பிடிக்கும்.

முத்தாய்ப்பாய்
என் குழந்தையை சுமக்கப் போகும்
உன்னை ரொம்ப  பிடிக்கும் .


என்றேன். காதல் சொட்டும் பார்வையுடன்  என் கன்னத்தில் சட்டென்று உன் இதழ் பதித்து முதல் முத்தத்தை தந்தாய். காதல் கிறக்கத்துடன் முணுமுணுத்தேன், அடி கள்ளி! இது முன்பே கிடைத்திருந்தால்  எனக்கு பிடித்தவைகளின்  பட்டியலில் உன் முத்தமே முதலாவதாய்  இருந்திருக்குமென்றேன். 

வெட்கத்தால் சிவந்திருந்த உன் முகம் இன்னும் சிவப்பாக ஆரம்பித்தது !!!.



வாழ்க வளமுடன் , தமிழ் தந்த புகழுடன் !!!.








Wednesday, December 3, 2014

நாதனும் குருவும் !!!!!!!

நெறைய நாள் காலேஜுக்கு வெளியேயும்  கொஞ்ச நாள் காலேஜுக்கு  உள்ளேயும் படிக்கிறோம்ன்னு  சொல்லிட்டு சுத்திகிட்டு இருந்த அந்த நாள்ல, எங்கள கொஞ்சம் தெறிக்க விடுற ஆள் யாருன்னா எங்க காலேஜ் வாட்ச்மேன்கள் ,
#1:நாதன் :
அவரு பேரு நாதன். மெல்லிசா ஊதினா பறக்குற மாதிரி இருப்பார், ஆனா டூட்டில ரொம்ப வெறைப்பா இருப்பாரு.   காலையில  எட்டரைக்கு மேல மெயின் கேட்டை பூட்டிருவாங்க.  அதுக்கு காவலா  இந்த ஆளு உட்கார்ந்து   லேட்டானதுக்கு   காரணம்   கேப்பார் . காரணம் கேக்குறது பெருசு இல்ல அதை  இங்கிலிஷ்ல கேப்பார். அதான் பிரச்சினையே.

 நம்மளுக்கு இங்கிலீஷ்  எல்லாம் இன்கமிங் மட்டும்தான் .நோ அவுட் கோயிங். அதுனால அவரு கேக்குற அத்தனை கேள்விக்கும் சளைக்காம டக்கு டக்குன்னு   தமிழ்லயே பதில்  சொல்லி ரொம்ப சில நாள்  மட்டும் உள்ளேயும் பலநாள் வெளியே "அக்கா கடை" இல்லன்னா "மாமா கடை"யில  இருந்து எங்க காலேஜை பத்திரமா பார்த்துக்குவோம் . 

இப்புடி எங்களப் போன்ற அவுட்ஸ்டேண்டிங் ஸ்டுடண்ட்ஸ கடுப்பேத்துற 
"வெள்ளைக்கார நாதன்" எங்க ப்ளாக்ல இருந்த பாத்ரூமுக்கு  போக, இதைப்  பார்த்த நாங்க, அந்த ரூமை வெளிய பூட்டிட்டோம் . கொஞ்ச நேரம் கழிச்சு அவரு கதவ தட்ட, நாங்க யாருன்னு கேட்க,  அவரு மெதுவா "நாதன்" ன்னு சொல்ல நாங்க "நாந்தான்னா" யாருய்யா ? உன் பேர  சொல்லுன்னு சொல்லி ரொம்ப   நேரம் சத்தெடுத்தோம் .இடைக்கு இடையில அந்த கதவு நாதங்கிய புடிச்சு தொறக்கிற மாதிரி நாங்க  பாவ்லா  பண்ணுறதும் , அவரும் வேகமா கதவைத் தொறக்க முயற்சி பண்ணுறதுமா ரொம்ப சுவாரஸ்யமா போச்சு எங்களுக்கு. 
அப்புறம்  போனா போகட்டும்ன்னு  அவரு வயசு, காலேஜ்க்கு அவர் பண்ணின சர்வீஸ் எல்லாத்தையும் மனசுல வச்சி கடைசி வரைக்கும் கதவை  தொறக்காமலே அப்புடியே விட்டுட்டு போய்ட்டோம். 

 அப்புறம் என்ன  அவரு டூட்டில  இருந்தாருன்னா , நாங்க கேட்டை மட்டும் பார்த்து தொட்டு கும்பிட்டுட்டு,13வரியில உள்ளதை செய்ய ஆரம்பிச்சுடுவோம் .
#2:குரு :
இவர் பேர் குரு, அவரு ஊதினா நாம பறந்திடுற மாதிரி நல்லா ஓங்கு  தாங்கா இருப்பார். இவரும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுதான்.ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்குற குரு கையில ரெண்டு, மூணு சிகரெட்டை  அவர் கையில வச்சு அழுத்துனா போதும் கேட்டு திறந்திடும். உள்ளே போக, வெளியே வர ரெண்டுக்கும் இதுதான் ப்ரொஸீஜர்.         

வகுப்பிலிருந்து வெளிநடப்பு செஞ்ச ஒரு மதியம், ரூமுக்கு போகலாமுன்னு வந்தா கேட்டுல நம்ம "குரு". சரி சிகரெட்டு ஏதாவது இருக்கான்னு பார்த்தா யார்கிட்டயும் இல்ல. கீழ கிடந்த ஒருகிங்க்ஸ்  சிகரெட்டு பாக்கெட்டுல , அக்கம் பக்கம்  கிடந்த ஒட்டு பீடிய பொருக்கி போட்டு கொண்டு போயி குடுத்தோம்.  சிரிச்சிகிட்டே உள்ள பார்க்காம வேகமா  வாங்கி பேன்ட் பாக்கெட்டுல சொருகிக்கிட்டு கதவை தொறந்து விட்டுட்டாரு.

அடுத்த முறை அவரைப் பார்த்த போது, அவர் திட்டிய திட்டெல்லாம் எழுதினால் அது கெட்ட  வார்த்தைகளின் அகராதியாக இருந்திருக்கும்.
இப்படியாக ரெண்டு வாட்ச்மேன்களிடமும் பஞ்சாயத்து ஆகிவிட்டதால் நாங்க திருந்தி ,  

"காலேஜுக்கு லேட்டா   போறதை படிப்படியா  குறைச்சிக்கிட்டோம்.!!! அவ்வ்வ்வ் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



Monday, June 30, 2014

சலாலா போகலாம் வாரீகளா - 2

சலாலா போகலாம் வாரீகளா -1

நம்ம கம்பெனி கிட்டத்தட்ட ஒரு மன்னாரன் கம்பெனி மாதிரி, இஞ்சினியர்  விசா கிடைக்கலைன்னா கொஞ்சம் கூட கூச்சப் படாம லேபர் விசாவை  அடிச்சு தந்திடுவாங்க.  அதுல என்ன பிரச்சனைன்னா பேமிலி விசா எடுக்க தலைகீழா நின்னு தண்ணி குடிக்கணும். அது மாதிரி போற பத்து பேருல ரெண்டு  பேருக்கு லேபர் விசா.  அல் அய்ன் பார்டர் கேட்டுல விசாரிச்சதுல  லேபர் விசா என்ட்ரி இல்லன்னு சொல்லிட்டாங்க.

நாங்க  உடனே புத்திசாலித்தனமா,  இஞ்சினியர்  விசா இருக்கிற பாஸ்போர்ட்ட முதல்லயும், லேபர் விசா இருக்கிற நண்பர்களோட பாஸ்போர்ட்ட கடைசியாவும்  வச்சி நீட்ட,  நம்ம நேரம் மொத்தமா எல்லா பாஸ்போர்ட்டையும் வாங்கின அந்த ஆபிசர்  அதை நேரா வைக்காம அப்புடியே குப்புற கவுத்தி வைக்க, எனக்கோ  அது எங்களையே கவுத்த மாதிரி ஆயிடுச்சு.

அந்த ஸ்ட்ரிக்ட் ஆப்பிசர் கிட்ட  எவ்வளவோ கெஞ்சி கேட்டும், கால்ல விழுந்து கதறி கேட்டும் வன்மையா மறுத்துட்டாறு அந்த லேபர் விசா உள்ள நண்பர்களுக்கு விசா தர,

நினைச்ச மாதிரியே எட்டு பேருக்கு விசா கிடைச்சிருச்சி அந்த இருவரைத் தவிர்த்து, கொஞ்சம் எதிர்பார்த்து இருந்ததால அவங்களும் பெருசா ஒன்னும் பீல் பண்ணல. ஆனா ஒருத்தன்  மட்டும் வேகமா வெளியில வந்து இன்னொரு நண்பனை கோபமா திட்ட அவனும் ரொம்ப அமைதியா இருந்தான். விஷயம் என்னன்னா விசா வாங்க உள்ள போகும் போதுதான் இவன்  சொல்லி இருக்கான் ஒரு வண்டியில 5 பேரு போறது கொஞ்சம் கஷ்டம் 4 பேருன்னா  நல்ல தாராளமா  போகலாம்ன்னு !!!! "நல்ல வாய் "

அப்புறம் அந்த 8 பேரும்  பயணத்தை தொடர்ந்தோம்.  நீ இனிமே திங்கிறத தவிர வேற  எதுக்கும் வாய தொறக்க கூடாதுங்குற கண்டிஷனோட !!!

 ஆரம்பமே அமர்க்களமா இருக்கேன்னுட்டு ஒமானுக்குள்ள நுழைஞ்சா ஆச்சர்யம்!!!  நல்ல தென்றல் காத்தும் மிதமான வெயிலுமா ரொம்ப இதமா  இருந்துச்சு  அந்த மக்களைப்போலவே. நானும் கேள்விப்பட்டதுண்டு அந்த நாட்டு  குடிமகன்களுக்கு நிறைய உதவும் மனப்பான்மை உண்டுன்னு, அதை  உணர்ந்து  கொள்ள ஒரு வாய்ப்பாக இந்த பயணம் அமைந்தது. எதுக்காகவேனும்  வழியில்  வண்டியை நிறுத்தி நின்றாலும்,   நம்மை கடந்து செல்லும் வாகனம் சற்று வேகம் குறைந்து நாம் பிரச்சினை ஏதும்  இல்லையென சைகை செய்தவுடன்  தான் கடந்தார்கள்.

எட்டு மணிக்கு ஒரு பெட்ரோல் பம்ப்பில் வண்டியை நிறுத்தி டேங்க் பில் பண்ணிட்டு, அங்க இருந்தவன்கிட்ட  ஏதாவது  டிபன் பார்சல் வாங்க ஹோட்டல் இருக்கான்னு  கேட்டது தான் தாமதம், கிரகம் எங்களைப் பிடிக்க ஆரம்பித்தது ,
                                                                                                               இன்னும் போவோம் ....

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Wednesday, March 5, 2014

வெட்கங்களின் தேவதை!!!

உன்னை முதலில் பார்த்தது கிராமத்து   நண்பனின் வீட்டு விஷேசத்தின் போதுதான். நட்சத்திர பரிவாரங்களுடன் வெளிவரும் வெண்மதியாய்,இளஞ்சிவப்பு நிற தாவணியில்  தேவதையாய்  உன் தோழிகளுடன்   தரிசனம் தந்தாய்  அன்று.

தேவதை சிரிப்பதையும்,பேசுவதையும்,  தரையில் கால் பாவாமல் நடப்பதையும் அன்றுதான் நேரில் கண்டேன். கண்டவுடன் காதல் என்பதில் எல்லாம் நம்பிக்கையற்று இருந்த எனது உறுதியை அசைத்து போட்டு விட்டது நீ தவற விட்ட கைக்குட்டை .

காதல்,  பெண்கள் என எதிலும் சுவாரஸ்யமற்று இருந்த எனக்கு நீயே மிகுந்த சுவாரஸ்யமானாய்.சற்றே அலுப்பு தட்டின எனது வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாக்கியது  உனது வருகை.

நண்பனின் தங்கையும்,அவளது தோழிகளும் அண்ணா என்றே என்னை அழைக்க, வெறும் வாங்க போங்கவுடன் நிறுத்திக் கொண்ட உனது செம்மொழியும், உன் பார்வை என்மேல்  பட்டபோது தெரிவித்த விழிமொழியும்,  எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த ரசவாதம் உன்னிலும் நிகழ்வதை எனக்கு உணர்த்தியது.

யாருடா அந்தப் பொண்ணு? என்று கேட்ட என்னை அதிசயமாய் பார்த்தவாறே   உன்னைப் பற்றி ஒப்பித்தான் என் நண்பன் . அவ்வப்போது உன்னைப் பற்றிய தகவல்களை என்னிடம் சொல்வதும் அவன்தான்.

நான் விசாரித்ததைப்  போலவே நீயும் என்னைக்குறித்து விசாரித்ததை பின்னாளில் அறிந்தவுடன் கண்டவுடன் காதல் என்பதில் எனக்கு அதீத  நம்பிக்கை பிறந்தது.காதல் தேவதையின் ஆசிர்வாதமோ என்னவோ, உனக்கான வேலையும் எனது ஊரிலேயே கிடைத்து விட எனக்கோ கொண்டாட்டமாகிப் போனது.

அவ்வப்போது கிடைக்கும் தேவதையின் தரிசனமே மீண்டும் மீண்டும் என்னை காதலோகத்தில் சஞ்சரிக்க வைத்தது. எதிர்ப்படுகையில் வழக்கமான நல விசாரிப்புகளுடன் என்னைக் கடந்து போய்விடுவாய்.  தயக்கம் கலைத்த ஒரு மாலையொன்றில் அலைபேசினாய், எனக்கோஅது குயிலின் கீதம்.

ஏதோ கனவில் பேசுவது  போல இருந்தது. அதன் பின்னர்  தினமும் என்னை எழுப்புவதே உனது குட்மார்னிங்  குறுந்தகவல்கள்தான்.

உடன் வேலை செய்யும் பெண்களுடன் எத்தனையோ பேசினாலும், உன்னுடனான வார்த்தைகள் சொற்பமே.   எனக்கும் சேர்த்து  நீதான் எல்லாம் பேசுவாய்.
ஏன் ஒன்னும் பேச மாட்டேங்கிறீங்க ? என்ற உன் கேள்விக்கும்  வழக்கம் போல் என் புன்னகையே  மௌனமாய் பதில் சொல்லும்.

காதலை சொல்லிக் கொள்ளவில்லை நாமிருவரும் அவ்வளவுதான்.இருவருக்குமான மனவோட்டங்களை குறித்து  மனதளவில்  புரிந்துணர்வு இருந்தாலும் கூடவே ஒரு தயக்கமும் இருந்தது.  திருமணம் செய்து வைக்க எனது  வீட்டில் காட்டிய தீவிரம் எனது தயக்கத்தை தூரப்போட வைத்தது.

உனக்கு மிகவும் பிடித்த தினமான   கார்த்திகை தீபத்தன்று  உன்னை என்  வீட்டிற்கு அழைத்தேன். நிறைய பரவசமும் கொஞ்சம் தயக்கமுமாய் என் வீட்டில் அடியெடுத்து வைத்தாய். அமர்க்களப்பட்டது வீடு.

சிரிப்பும் சந்தோஷமுமாய் இருந்து விட்டு, நமக்கென வாய்த்த ஒரு தருணத்தில் தீபங்களுக்கிடையில்  ஒரு மகா  தீபமாய், படர்த்திய பெரிய விழிகளுடன் என்னை பார்த்து, உன் அம்மாவிடம்  என்னை யாரென்று  கூறினாய்? எனக் கேட்டாய் .

வழக்கம் போல மொழியறியா  என்  புன்னகையை கண்வழியே கடத்தி   உன் விழியுடன் நன்றாக உறவாட விட்டு    "இன்று உன் மருமகளை கூட்டி வருவதாகச் சொன்னேன் " என்றவுடன், குறுகுறுத்த பார்வையும் , லேசாகத்  தெரியும் அந்த தெத்துப்பல்லுமாய் மெல்லிய  அதிர்ச்சி கலந்த சந்தோஷத்துடன் வெட்கப்பட்டாய் நீ.

அதுவரை  தேவதையாய் இருந்த  நீ,  அன்றுதான் "வெட்கங்களின் தேவதை" ஆனாய். நானோ கொண்ட  காதல் கைகூடிய மகிழ்ச்சியில்  தீபங்களின் ஒளியில் கரையலானேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, January 30, 2014

அம்மாவின் பிறந்தநாள் !

"அம்மா"  மூன்றெழுத்து  கவிதை 
ஒரு வார்த்தை அத்தியாயம் 
வரையரைக்குள் அடக்க இயலா பேரன்பு 
உயிரெழுத்தும்  மெய்யெழுத்தும் சேர்ந்து
உயிர் மெய்யாய் நம்முன் நடமாடும் தெய்வம்.

இன்னும் அடுக்கிக்கொண்டே   போகலாம் அம்மாவின் அருமைகளை. என் அம்மாவும் அப்படிப்பட்ட ஒரு தெய்வம்தான்.வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொடுத்தவர். கடுமுகமோ சுடுசொல்லோ காட்டாதவர்.பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஒரு  ஜீவன். எவ்வளவோ செய்ய நினைத்து செய்தாலும் அவை அனைத்தும் அம்மாவின் அன்புக்கு முன்னால்  சிறியதாகவே பட்டது .

அம்மாவின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படி ஒன்று செய்ய வேண்டுமென நினைத்தேன். கடவுளின் ஆசிர்வாதமாக நான் கருதும் எனது நண்பர்களின் உதவியுடன் சிறப்பாக நடந்தேறியது அது அம்மாவின் பிறந்தநாள்  கொண்டாட்டம், அம்மாவின்  இந்த வருட பிறந்தநாள் வார விடுமுறையான   வெள்ளிக்கிழமையன்று வர, 

எனது நண்பர்கள் அனைவரிடமும்  இதனை சர்ப்ரைஸாக கொண்டாட வேண்டுமென கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன்.வெகு சாதாரணமாக தொடங்கிய அந்த நாளில் ,இன்று  அம்மாவின் பிறந்தநாள் என அப்பா நினைவூட்ட, நானோ எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வாழ்த்துகளை கூறிவிட்டு அமைதியாக இருந்து விட்டேன். 

பக்கத்து வீடும் எனது நண்பனின் வீடாகிப் போனதால், அனைத்து நண்பர்களையும் அங்கு வரவழைத்து விட , அவர்கள்  வீடு முழுவதையும் அலங்கரித்து  அசத்திகொண்டு இருக்க, நானோ மதியம் லஞ்சுக்கு வெளியில் போகலாம் என்று சொல்லிவிட்டு அவ்வப்போது பக்கத்து வீடு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.  

எல்லாம் தயாராகி விட்டது, வீட்டை  நன்றாய் அலங்கரித்து, கேக்கில் மெழுவர்த்தி  எல்லாம் ரெடியாய் வைத்து விட்டு அம்மாவை அழைத்து வர சென்றேன். குடும்பத்துடன் அனைவரும் வெளிவருகையில், அம்மாவிடம்  எதார்த்தமாய் நண்பனது பக்கத்து  வீட்டில் சொல்லிவிட்டு போகலாம் என்று அம்மாவையே கதவை திறக்க சொல்ல  ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பூம். பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாட, அம்மாவோ ஆச்சர்யம் மற்றும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய்விட  நெகிழ்ச்சியாய் என் கையைப்  பிடித்துக் கொண்டார்கள் . பிறகு கேக் வெட்டி, மதிய சாப்பாட்டுடன் இனிமையாக முடிந்தது கொண்டாட்டம்.

அன்று முழுவதும் ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியது  அம்மாவின் முகம். அப்படி ஒரு மனம்  கொள்ளா  மகிழ்ச்சி என் அம்மாவின் முகத்தில்,  ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டார்கள். அவ்வளவு சந்தோஷம்  அவர்களுக்கு. பார்க்க நிறைவாக இருந்தது எனக்கு .

மூன்றாவது பத்தியின் ஆரம்பத்தில் சொன்னது நிறைவேறியது போன்ற எண்ணம் வந்தது  எனக்கு!! உங்களுக்கு ?

டிஸ்கி 1:  நம்ம கோவை நேரம் எழுதிய  இந்த பதிவும் ஒரு காரணம்.

மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.


டிஸ்கி 2 : முகநூலில் இதனை பகிர்ந்த போது என்   நண்பன் ஒருவன் தானும் இது  போல செய்ய வேண்டும் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பதிவினால் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் அம்மாவின் முகத்தில் சந்தோஷம் கிடைப்பின் அது  இந்த பதிவுக்கு கிடைத்த பெரிய வெகுமதியாக கருதுகிறேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Sunday, December 1, 2013

குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்சது!!!

சாயந்திர  டீயை குடிச்சிகிட்டே வழக்கம் போல ஒவ்வொரு  டிவி சேனலா தாவிக்கிட்டு இருக்கும் போதுதான் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க நேரிட்டது.

அது கேப்டன் டிவி நியுஸ். சாதாரண நியுஸ் கிடையாது கேப்டன் டெல்லில தேர்தல் பிரச்சாரம் பண்ணுற நியுஸ். படிக்கும் போதே லெப்ட் லெக்கை  சுவத்துல வச்சி, ரைட் லெக்கால நெஞ்சுல மிதிச்ச மாதிரி இருக்குல்ல அப்போ அதை பார்த்த என்னோட நிலைமையை யோசிச்சிக்கிட்டே கீழ படிங்க,

எத்தனை ரவுண்டு போச்சோ தெரியல,கேப்டன் பொளந்து கட்டுறாரு!!!
துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ?

துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ? 

அப்புடின்னு  அவருக்கு தெரிஞ்ச இங்கிலிஷ்ல ஒரு நாப்பது தடவை கேக்குறாரு. என்னடா இதைப் போயி இங்க்லீஷ் ன்னு சொல்றானேன்னு  நீங்க நெனைச்சிங்கன்னா, அப்புடியே கீழ இருக்குற இந்த வீடியோவை பாருங்க ,


              

டெல்லியில் அலைகடலென திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளத்தில் கேப்டன் அடிக்கடி இங்கிலீஷ் ஹிந்தின்னு பேசி  டங் சிலிப் ஆகி   நம்மள  தெறிக்க விட்டாரு. டரியலாகி அப்புடியே சேனல் சேனலா  தாவி மேல போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கீழ எறங்கி வரும் போது பார்த்தா, அட நம்ம பிரேமலதா அண்ணி கேண்டிடேட் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்கன்னு  சொல்லிகிட்டு இருந்தாங்க , அது என்னன்னா 

ரோடு போடுவாங்களாம் ,
சாதி சான்றிதழ் வாங்கி தருவாங்களாம் 
ரேசன் கார்டு வாங்கி தருவாங்களாம்.
பிரதமர்கிட்ட பேசுவாங்களாம்.

இத்தனை "களாம்"களுக்கு மத்தியில் ஒரு ஆள் கல்யாண வீட்டு வாசல்ல வச்ச பொம்மை மாதிரி வேன்ல  நின்னு கும்புட்டுக்கிட்டே   சுத்தி, சுத்தி வந்தாரு அவர்தான் நம்ம கேண்டிடேட்டாம்.
ஸ்ஸ்ப்ப்பா கண்ணைக் கட்டிடுச்சு போங்க.  

கேப்டன் நம்மளுக்கு தமிழே தகராறு, எழவு வீட்டுல போய் ஆழ்ந்த நன்றி சொல்ற பார்ட்டிங்க, நம்மளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ரெண்டு ரவுண்ட போட்டோமா, நாலு தீவிரவாதிகளைப் புடிச்சோமான்னு, கண்ணு செவக்க நாக்கை துருத்தி எங்கள மாதிரி நிறையப் பேரை என்டர்டெயின் பண்ணுனோமான்னு இல்லாம சின்னப்புள்ள தனமா என்ன என்னவோ செய்றீங்க ??

இதெல்லாம் பார்த்த பிறகு எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தோணிச்சு கேப்டன் அதுதான் , அதுதான் 
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அதைத்தான் இந்த பதிவுக்கு  தலைப்பா வச்சு தொலைஞ்சிருக்கேன் கேப்டன் :-)


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Wednesday, November 27, 2013

EXPO 2020

இது தோனியோட 20:20 இல்ல துபாயோட 2020.UAE ல் உள்ள அனைவரும் சமீப காலமாக அடிக்கடி சொல்லும் வார்த்தை இந்த 2020 எக்ஸ்போ தான்.

என்ன இந்த எக்ஸ்போ 2020?

ஏழு வருடத்திற்கு அப்புறம் 2020ல் நடக்கவிருக்கும் ஒரு எக்ஸ்சிபிஷன் ட்ரேட்பேரை  குறிப்பதுதான் இந்த எக்ஸ்போ 2020.

ஆறுமாத காலத்திற்கு நடக்கும் இந்த எக்ஸ்போவிற்கு 2.5 கோடி நபர்கள் வருவார்கள் எனவும், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரி 2020 ல் நடக்கும் விஷயத்திற்கு இப்போ என்ன என்றால், அந்த எக்ஸ்சிபிஷன் நடத்துவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதுதான்   பாரீஸில்  இன்று நடந்து கொண்டிருக்கிறது.பீரோ ஆப்  இன்டர்நேஷனல் எக்ஸ்போசிஷன் (BIE )என்னும் அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சேர்ந்துதான்  இதனை  நடத்தும் இடத்தினை தீர்மானிப்பது மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும்.

சிம்பிளாக சொல்வதென்றால் எக்ஸ்போ நடத்த விருப்பமுள்ள நாடுகள், தங்களிடமுள்ள சிறப்பம்சங்களை குறிப்பிட்டு  இதில் கலந்து கொள்ளும். BIE  அமைப்பால்  அவர்களுடைய பொருளாதார தகுதி,தரை மற்றும்  வான்வழி போக்குவரத்து வசதிகள், இதனை நடத்துவற்கான உள்கட்டமைப்பு வசதிகள்  பரிசீலனை செய்யப்படும்.போட்டியில் பங்கு பெரும்  நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்வது உண்டு.

கடைசி நாளான இன்று   இது குறித்த 20 நிமிட வீடியோ இன்று ஓட்டெடுப்பிற்கு முன்னர் BIE  மெம்பர்களுக்கு திரையிடப்படும் பின்னர்   BIE -ல் உள்ள 163 நாட்டு  மெம்பர்கள் ஓட்டெடுப்பின் மூலம் அந்த நாடு தேர்ந்தெடுக்கப்படும்.

இதனால் என்ன உபயோகம்?

சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். இதனை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு,
  • அந்நிய முதலீடு பெருமளவில் ஈர்க்கப்படும்.
  • நேரடியாக கட்டுமானம், மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் .
  •  வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில்  தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பெரும்.
  • ஹோட்டல், டூரிசம் கணிசமாக வளர்ச்சியடையும்.
  • பொருளாதாரம்,தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
(இவை எல்லாவற்றையும் விட கேரளாவுல மிச்சமீதி இருக்கும் நம்ம சேட்டன்கள்  வரவு ரொம்ப ரொம்ப அதிகரிக்கும் )

இந்த ரேசில் ஜெயிக்கத்தான் துபாய் படு மும்முரமாக செயல் படுகிறது. இதனை நடத்துவதன் மூலம் 2009-11 களில் இருந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து முற்றிலுமாக வெளிவர இதனை ஒரு அறிய வாய்ப்பாக துபாய் கருதுகிறது.
இதற்கான போட்டியும் கணிசமாக இருக்கிறது.

ரேசில் இருக்கும் நாடுகள் 
1.துபாய் 
2.துருக்கி 
3.பிரேசில் 
4.ரஷ்யா .

 மொத்தமாக போட்டியிடும் நான்கு நாடுகளில் கடும் சவாலாக இருப்பது துருக்கி என்கிறார்கள். பழைய பாரம்பரியத்தை பின் பற்றி வரும் நாடுகளில் இதுவும் ஒன்று என்பதால் முன்னுரிமை சற்று கூடுதலாக உள்ளது.ஆனால் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகளும் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களும் இதற்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கின்றன.

எல்லா காரணிகளிலும்  அதிக முன்னிலையோடு துபாய் இருப்பது இதற்கான வாய்ப்பை சற்று பிரகாசமாக வைத்துள்ளன. இது நடைபெறும் இடம் குறித்த சில புகைப்படங்கள் ,








இது குறித்த இறுதி முடிவு இன்று இரவு துபாய் நேரப்படி 8.30மணிக்கு பாரீஸில் இருந்து   அறிவிக்கப்படும்.

பார்க்கலாம் பூங்கொத்தா அல்லது  புஸ்வாணமா என்று !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!



Tuesday, November 5, 2013

பொய்யாய்க் கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா.

அன்பாயிருந்த மகனுக்கு,

ஒரு மழைக்கால ராத்திரியில்தான் நீ பிறந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினாய்.என் கைச்சூடு கண்டுகொண்டதால்   என்னவோ பிறந்த சில மாதங்களுக்கு  என்னைத்தவிர யாரிடமும் சென்றதில்லை நீ. ஒருநாளில்  எனக்காக நான் ஒதுக்கிய நேரம் சில  நிமிடங்கள்  மட்டுமே.

மழைக்  காலமாகையால் நீ ஈரமாக்கிய துணிகளை துவைத்து   வெளியில் காய வைக்க இயலாமல் விறகு அடுப்பின் வெம்மையில் உலர்த்தி  தருவார்  உனது அம்மாச்சி.  

"முந்தித்  தவமிருந்து
முன்னூறு நாட்  சுமந்து
அந்திப் பகலாய் இறைவனை வந்தித்து" 

பெற்றெடுத்த உன்னை, உடலால் தோளிலும், மனதால் நெஞ்சிலும் சுமந்து திரிந்தார் உனது தந்தை.உனது மழலைச்  சொல் தான்  எங்கள் வேதமாகியது.நீ இருக்கும் இடம்தான் எங்களுக்கு விருப்பிடமானது.   உலகினை பொறுத்தமட்டிலும் நீ வளர்ந்து கொண்டே இருந்தாய் நானோ சிறுபிள்ளையாகிக் கொண்டிருந்தேன்.

நடைவண்டியோட்டி நீ  நடை பழகிய காலத்தில் கொல்லைப்புற வாசல்  ஓரமாய் இருந்த கல் தடுக்கி  நீ விழுந்து விட்டாய். உனக்கு அடிபட்டு விட்ட ஆதங்கத்தில் உன் தந்தை பெயர்த்து எறிந்த அந்தக் கல்,எல்லைக் கல் ஆனதால்  பங்காளி வீட்டு  பகையாகி காவல் நிலையம் வரை சென்றது தனிக்கதை.

நீ பள்ளி சென்ற முதல் நாளின் வெறுமையை  தாங்க இயலாமல், நாள் முழுவதும் பித்து பிடித்தாற்  போல இருந்தது உனக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கும் உன் தந்தைக்குமான கருத்து வேறுபாடுகள் மிக சொற்பமே. உன்னால்,  உன் பருவ வயதில் நீ செய்த தவறுகளால்  எனக்கும் உன் தந்தைக்குமான மனஸ்தாபங்கள் ஏராளம்.

நீ உடுத்திய  உடை முதல்  படித்த  கல்லூரி மற்றும் கட்டிய மனைவி  வரை உனது விருப்பமே பிரதானமாக இருந்தது. நீயும் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உனக்குத்தான் நான் மிகவும் வேண்டாதவளாகிப் போய்விட்டேன். தளர்ந்த உடலும்,  சுருக்கம் விழுந்த முகமுமாக நான்தான்  அந்நியப்பட்டுப் போய்விட்டேன்.

முன்பொரு காலத்தில் முழு வீட்டையுமே ஆக்கிரமித்து இருந்தாய் நீ.  அதில்  எனக்கொரு ஒட்டுத்திண்ணை கூட கிடைக்காதது எனது துரதிர்ஷ்டமே. எனக்கு வசதியாய் இருக்கட்டும் என்று,  என்னைப்போல அனாதைகள் நிரம்ப உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளாய்.

 நன்றாகத்தான் இருக்கிறது மகனே நீ சேர்த்து விட்டிருக்கும் முதியோர் இல்லம்,  என் போன்ற அனாதைகளின் ஏக்கப் பெருமூச்சோடு. எதற்கும் இருக்கட்டும் இந்த அறையையும் முன்பதிவு செய்து கொள். உன் காலத்தில் இதற்கும் வரலாம் இடப்பற்றாக்குறை!!!.  

இப்படிக்கு 
பொய்யாய்க்   கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா .


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, September 23, 2013

நிக்கோடினா ஒரோல்ஸ்.

1999
காலேஜ் பர்ஸ்ட் இயர்  படிக்கும்(??!!) போது படிக்கிறத தவிர மத்த எல்லாத்தையும்  செய்யுறது.  எங்க பக்கத்து ரூம்ல ஒரு அஜீத் குமார் இருந்தான். அவன் எப்போதும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னுகிட்டே  வராத மீசையை வா வான்னுட்டு இருப்பான். ஒரு பரு வந்துடுச்சுன்னா  போதும் ரூம் புல்லா கலர் கலரா மருந்து வாங்கி வைச்சிருப்பான்,  நைட்டு படுக்க போறதுக்கு முன்னாடி  மூஞ்சில எதையாவது   அப்பிக்கிட்டு பக்கத்துல இருக்கிறவங்களை பயமுறுத்தி கிட்டு இருப்பான்.

வழக்கம் போல படிக்காம  பேசிக்கிட்டு இருக்கிற "சைலன்ஸ் அவர்ல" அவனைக் கலாய்க்கிறதுக்காக ஒரு ப்ளான் போட்டோம் . நம்மாளுதான் மூஞ்சுக்கு போடுற பவுடர் அல்லது  க்ரீம்ன்னா  உயிரை விடுவானே அதுனால அவனுக்காக ஒரு  பவுடர் தயார் பண்ணினோம், அதோட மூலப் பொருட்கள் என்னன்னா

1.சர்ப்  சோப் பவுடர்
2.பாண்ட்ஸ் பவுடர் (கொஞ்சம் )
3.ப்ளீச்சிங் பவுடர்   (கொஞ்சத்துல கொஞ்சமா)

நல்லா  மிக்ஸ் பண்ணிட்டு,  ஒரு சின்ன டப்பால போட்டு வச்சிட்டோம் . நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போது  ஒருத்தன் ரொம்ப கேஷுவலா கேக்குற மாதிரி மச்சான் ஜோதி, உங்க மாமா லண்டன்லேருந்து வாங்கி வந்த பேஸ்  வாஷ் நல்ல இருக்குடா அப்படின்னு சொன்ன உடனே,

"மசால் வடையை பார்த்த எலி மாதிரி'' பாஞ்சு வந்து எனக்கு எங்கடான்னு, எனக்கு எங்கடான்னு எக்கோ எபக்ட்டுல கேட்டுட்டு, கூடவே அதோட பேரு என்னடான்னு கேட்க, நாங்கள் திகைக்க  என் நண்பன் ஒருவனோ சட்டென்று வைச்சான் பாருங்க பேரு "நிக்கோடினா  ஒரோல்ஸ் ."

பேரே பாரின் பிகர் மாதிரி இருக்கதால நம்மாளுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
மச்சான் ரொம்ப காஸ்ட்லியான பவர்புல்  பவுடர் கொஞ்சமா தண்ணில கலந்து போடு, மூஞ்சில  அரிச்சா பவுடர் வேலை செய்யுறதா அர்த்தம்னு சொல்லிட்டு சபையை கலைச்சிட்டோம்.

நம்மாளும் அதை தொடர்ச்சியா நாலஞ்சு நாள்  போட்டு மூஞ்சில வெள்ளை வெள்ளையா சொறி வந்ததுதான் மிச்சம். மூஞ்சை சொறிஞ்சது சகிக்காம நண்பன் ஒருத்தன் "நிக்கோடினா  ஒரோல்ஸ்" சோட பார்முலாவை நம்ம அஜித்குமார்கிட்ட சொல்ல, அப்புறம் கேப்டன் விசயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு செவக்க  செவக்க  "செந்தமிழ்" ல ஒரு அரைமணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்தான் எங்களுக்கு .

2013
இப்போ அந்த அஜித்குமார் யு. எஸ் ல இருக்கான்.  கொஞ்ச நாளைக்கு முன்பு பேசியவன் ஊருக்கு போறப்போ ட்ரான்ஸிட்  துபாய் வர்றதாகவும் , கண்டிப்பா மீட் பண்ணுவோம்னு சொல்லிட்டு   வர்றப்போ   என்னடா வேணும்ன்னு   கேட்க,  யு .கேன்னா கிடைக்கும் மச்சான் ஆனா  யு. எஸ் ல கிடைக்குமான்னு தெரியலயேன்னு  சொல்ல அப்படி என்னடா இங்க கிடைக்காததுன்னு  கேட்க, நானோ "நிக்கோடினா  ஒரோல்ஸ் " ன்னு சொல்ல, டமார்ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு அது அவனோட மொபைலா இருக்குமோன்னு தோணுது!!! உங்களுக்கு என்ன  தோணுது ??



வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 5, 2013

ஆ "சிறந்தோர்" தினம்.

"டேய் மொட்டை நீ வந்து வாசி" .

போர்டில் டீச்சர் எழுதி போட்டிருப்பதை   வாசிக்க வேண்டும்.தவறாய் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் டீச்சருக்கு வாகாய்  இருக்கும்  இடத்தில் தலையிலோ, பின்பக்கத்திலோ  அடி விழும்.

"ஜ"வுக்கும்   " ஐ "க்கும் வித்தியாசம் தெரியாமல் தவறுதலாய் வாசிக்க, டீச்சரிடம்  இருந்த பிரம்புதான்  அந்த வித்தியாசத்தை உணர்த்தியது.
ஒரு நாள்  நீரில் மிதக்கும் பொருள்களை சொல்லுமாறு வகுப்பில் பொதுவாய் கேட்க நான் "கரித்துண்டு" என்று பட் டென்று சொல்லி வாங்கிய "முதல் கைத்தட்டலுடன்" ஆரம்பமானது எனது பள்ளிப்படிப்பு.

சராசரி மாணவனாக இருந்த என்னை  நன்கு படிக்கும் மாணவனாக  மாற்றியது அந்த மூணாப்பு  டீச்சரின் அன்பும் வழிகாட்டுதலும் தான்.

அதன்பின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு விதமான வழிகாட்டுதல்கள். ஐந்தாம் வகுப்பில் நடந்த க்விஸ் ப்ரோகிராமில் ஜெயித்தது.ஆறாம்  வகுப்பில் நடந்த  க்விஸ் ப்ரோகிராமில்  ஜோனல் லெவலில் முதல் பரிசு பெற்றது. இப்படி நிறைய ..
ஏழாம்  வகுப்பில்  தேசியப்பறவை வரைந்து அதனடியில் ஒரு கவிதை கட்டாயம் எழுதவேண்டும் என டீச்சர்  சொல்ல,எனக்குள்ள ஒரு கவிஞன் பார்ம் ஆனது அப்போதுதான்,

பெண் கூந்தல்  போன்ற 
தோகை உடைய மயிலே 
நீ 
அடைபட்டது  கூண்டிலே அல்ல 
எனது மனச் சிறையிலே!!

என்று எழுதி பாராட்டப் பெற்றது, என பள்ளிப்பருவத்தின்  ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு எதையோ  கற்றுத்தந்து என்னை செம்மைப்படுத்தியவைதான்.

நடை பழகும் குழந்தைக்கு  விரல் பிடித்து நடக்க கற்றுத்தரும் ஒரு அன்னை போல் அனைத்தையும் கற்றுத்தந்து, கூடவே
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது  உலகளவு" என்பதையும் சொல்லித்தந்து, அனுதினமும் கற்றல் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர வைத்த எனது ஆசிரியப் பெருமக்களுக்கு "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

டிஸ்கி :  இது கவிதையா என்று யாரும் கல்லெடுக்க வேண்டாம் ... அவ்வப்போது எனக்குள் வீறு கொண்டு எழும் கவிஞனை, பதிவுலகத்தின் நன்மை கருதி அண்ணன் "வெளங்காதவன்" கமெண்டை  காட்டி கட்டிப் போட்டுள்ளேன் .ஹிஹிஹி....     

Tuesday, July 30, 2013

கொல்லைப்புற கிணற்றடியும் பவள மல்லி மரத்தடியும்..

எத்தனையோ  முறை உன்னைக் கடந்து வந்திருப்பேன் அவசரமாகவோ, இல்லை கண்டும் காணாமலோ. ஆனால்  நான் வெறுமையை உணரும் போதெல்லாம் "தாய் மடி கண்ட சேய்" போல  தஞ்சமடையும் இடம் கொல்லைப்புறத்தில் உள்ள இந்த கிணற்றடியும், அந்த பவள மல்லி மரத்தடியும் தான்.

எப்போதிருந்து ஆரம்பித்தது இந்த சினேகிதமான  நெருக்கம்? பால்யத்தில் விளையாட ஒருவருமின்றி தனித்திருந்த சில பொழுதுகளை வாஞ்சையுடன்   அரவணைத்த போதா? இல்லை அம்மா துணி துவைக்க தண்ணீர் சேந்தி தரும் பொழுதுகளில், கிடைக்கும் இடைவெளியில் ஈரக்   கைகளுடன் அங்கு சிதறிக்கிடக்கும் பவளமல்லி மலர்களை சேகரித்து அதன் வாசனையை ஆழமாய் சுவாசித்து நுரையீரல்களில் நிரப்பிய தருணத்திலா?



அல்லது ,
சற்றே பெரியதாய், உயரமாய் அமைந்த துணி துவைக்கும் கல்லின் மேல் படுத்தவாறே சிதறிக்கிடக்கும் நட்சத்திர கூட்டங்களை ஆச்சர்யமாய் எண்ணிக்கொண்டிருந்த போதா?

அல்லது,
வீட்டில் சண்டையிட்டு கோபித்த இரவுகளின் நீட்சியாய் பசியுடனும், கண்ணீர்க் கரையோடிய கன்னங்களுடனும்  கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்த அந்தப் பொழுதிலா?

அல்லது,
வானம் வெளித்த மழை நாளில், கதிரவன் தன் பொன்மஞ்சள் கதிர்களை கலைந்தோடும் முகில்களுக்கிடையே சிதறடித்துக் கொண்டிருந்த மாலையொன்றில், மழைமுத்தை மடியில் ஏந்தியவாறு பச்சைப் புல்வெளிப் பரப்பில் சிதறிக்கிடந்த  பவளமல்லி மலர்களும், கொல்லைப்புறத்தையே தன் வாசனையால்  நிரப்பி வைத்திருந்த, மொட்டவிழ்ந்த சந்தன முல்லை மலர்களுமாய் காட்சியளித்தபோதா?

சரியாய்த் தெரியவில்லை எனக்கு. இருக்கலாம் இவற்றில் எதாவதொரு பொழுதிலோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்து என்னை ரசவாதம் செய்த ஒரு கலவையான பொழுதிலோ, என் மனதை முற்றிலுமாக  ஆக்கிரமித்திருக்கலாம், இந்த கொல்லைப்புற கிணற்றடியும் அந்த பவள மல்லி  மரத்தடியும்.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!