Thursday, January 30, 2014

அம்மாவின் பிறந்தநாள் !

"அம்மா"  மூன்றெழுத்து  கவிதை 
ஒரு வார்த்தை அத்தியாயம் 
வரையரைக்குள் அடக்க இயலா பேரன்பு 
உயிரெழுத்தும்  மெய்யெழுத்தும் சேர்ந்து
உயிர் மெய்யாய் நம்முன் நடமாடும் தெய்வம்.

இன்னும் அடுக்கிக்கொண்டே   போகலாம் அம்மாவின் அருமைகளை. என் அம்மாவும் அப்படிப்பட்ட ஒரு தெய்வம்தான்.வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொடுத்தவர். கடுமுகமோ சுடுசொல்லோ காட்டாதவர்.பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஒரு  ஜீவன். எவ்வளவோ செய்ய நினைத்து செய்தாலும் அவை அனைத்தும் அம்மாவின் அன்புக்கு முன்னால்  சிறியதாகவே பட்டது .

அம்மாவின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படி ஒன்று செய்ய வேண்டுமென நினைத்தேன். கடவுளின் ஆசிர்வாதமாக நான் கருதும் எனது நண்பர்களின் உதவியுடன் சிறப்பாக நடந்தேறியது அது அம்மாவின் பிறந்தநாள்  கொண்டாட்டம், அம்மாவின்  இந்த வருட பிறந்தநாள் வார விடுமுறையான   வெள்ளிக்கிழமையன்று வர, 

எனது நண்பர்கள் அனைவரிடமும்  இதனை சர்ப்ரைஸாக கொண்டாட வேண்டுமென கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன்.வெகு சாதாரணமாக தொடங்கிய அந்த நாளில் ,இன்று  அம்மாவின் பிறந்தநாள் என அப்பா நினைவூட்ட, நானோ எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வாழ்த்துகளை கூறிவிட்டு அமைதியாக இருந்து விட்டேன். 

பக்கத்து வீடும் எனது நண்பனின் வீடாகிப் போனதால், அனைத்து நண்பர்களையும் அங்கு வரவழைத்து விட , அவர்கள்  வீடு முழுவதையும் அலங்கரித்து  அசத்திகொண்டு இருக்க, நானோ மதியம் லஞ்சுக்கு வெளியில் போகலாம் என்று சொல்லிவிட்டு அவ்வப்போது பக்கத்து வீடு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.  

எல்லாம் தயாராகி விட்டது, வீட்டை  நன்றாய் அலங்கரித்து, கேக்கில் மெழுவர்த்தி  எல்லாம் ரெடியாய் வைத்து விட்டு அம்மாவை அழைத்து வர சென்றேன். குடும்பத்துடன் அனைவரும் வெளிவருகையில், அம்மாவிடம்  எதார்த்தமாய் நண்பனது பக்கத்து  வீட்டில் சொல்லிவிட்டு போகலாம் என்று அம்மாவையே கதவை திறக்க சொல்ல  ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பூம். பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாட, அம்மாவோ ஆச்சர்யம் மற்றும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய்விட  நெகிழ்ச்சியாய் என் கையைப்  பிடித்துக் கொண்டார்கள் . பிறகு கேக் வெட்டி, மதிய சாப்பாட்டுடன் இனிமையாக முடிந்தது கொண்டாட்டம்.

அன்று முழுவதும் ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியது  அம்மாவின் முகம். அப்படி ஒரு மனம்  கொள்ளா  மகிழ்ச்சி என் அம்மாவின் முகத்தில்,  ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டார்கள். அவ்வளவு சந்தோஷம்  அவர்களுக்கு. பார்க்க நிறைவாக இருந்தது எனக்கு .

மூன்றாவது பத்தியின் ஆரம்பத்தில் சொன்னது நிறைவேறியது போன்ற எண்ணம் வந்தது  எனக்கு!! உங்களுக்கு ?

டிஸ்கி 1:  நம்ம கோவை நேரம் எழுதிய  இந்த பதிவும் ஒரு காரணம்.

மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.


டிஸ்கி 2 : முகநூலில் இதனை பகிர்ந்த போது என்   நண்பன் ஒருவன் தானும் இது  போல செய்ய வேண்டும் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பதிவினால் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் அம்மாவின் முகத்தில் சந்தோஷம் கிடைப்பின் அது  இந்த பதிவுக்கு கிடைத்த பெரிய வெகுமதியாக கருதுகிறேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Sunday, December 1, 2013

குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்சது!!!

சாயந்திர  டீயை குடிச்சிகிட்டே வழக்கம் போல ஒவ்வொரு  டிவி சேனலா தாவிக்கிட்டு இருக்கும் போதுதான் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க நேரிட்டது.

அது கேப்டன் டிவி நியுஸ். சாதாரண நியுஸ் கிடையாது கேப்டன் டெல்லில தேர்தல் பிரச்சாரம் பண்ணுற நியுஸ். படிக்கும் போதே லெப்ட் லெக்கை  சுவத்துல வச்சி, ரைட் லெக்கால நெஞ்சுல மிதிச்ச மாதிரி இருக்குல்ல அப்போ அதை பார்த்த என்னோட நிலைமையை யோசிச்சிக்கிட்டே கீழ படிங்க,

எத்தனை ரவுண்டு போச்சோ தெரியல,கேப்டன் பொளந்து கட்டுறாரு!!!
துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ?

துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ? 

அப்புடின்னு  அவருக்கு தெரிஞ்ச இங்கிலிஷ்ல ஒரு நாப்பது தடவை கேக்குறாரு. என்னடா இதைப் போயி இங்க்லீஷ் ன்னு சொல்றானேன்னு  நீங்க நெனைச்சிங்கன்னா, அப்புடியே கீழ இருக்குற இந்த வீடியோவை பாருங்க ,


              

டெல்லியில் அலைகடலென திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளத்தில் கேப்டன் அடிக்கடி இங்கிலீஷ் ஹிந்தின்னு பேசி  டங் சிலிப் ஆகி   நம்மள  தெறிக்க விட்டாரு. டரியலாகி அப்புடியே சேனல் சேனலா  தாவி மேல போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கீழ எறங்கி வரும் போது பார்த்தா, அட நம்ம பிரேமலதா அண்ணி கேண்டிடேட் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்கன்னு  சொல்லிகிட்டு இருந்தாங்க , அது என்னன்னா 

ரோடு போடுவாங்களாம் ,
சாதி சான்றிதழ் வாங்கி தருவாங்களாம் 
ரேசன் கார்டு வாங்கி தருவாங்களாம்.
பிரதமர்கிட்ட பேசுவாங்களாம்.

இத்தனை "களாம்"களுக்கு மத்தியில் ஒரு ஆள் கல்யாண வீட்டு வாசல்ல வச்ச பொம்மை மாதிரி வேன்ல  நின்னு கும்புட்டுக்கிட்டே   சுத்தி, சுத்தி வந்தாரு அவர்தான் நம்ம கேண்டிடேட்டாம்.
ஸ்ஸ்ப்ப்பா கண்ணைக் கட்டிடுச்சு போங்க.  

கேப்டன் நம்மளுக்கு தமிழே தகராறு, எழவு வீட்டுல போய் ஆழ்ந்த நன்றி சொல்ற பார்ட்டிங்க, நம்மளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ரெண்டு ரவுண்ட போட்டோமா, நாலு தீவிரவாதிகளைப் புடிச்சோமான்னு, கண்ணு செவக்க நாக்கை துருத்தி எங்கள மாதிரி நிறையப் பேரை என்டர்டெயின் பண்ணுனோமான்னு இல்லாம சின்னப்புள்ள தனமா என்ன என்னவோ செய்றீங்க ??

இதெல்லாம் பார்த்த பிறகு எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தோணிச்சு கேப்டன் அதுதான் , அதுதான் 
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அதைத்தான் இந்த பதிவுக்கு  தலைப்பா வச்சு தொலைஞ்சிருக்கேன் கேப்டன் :-)


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Wednesday, November 27, 2013

EXPO 2020

இது தோனியோட 20:20 இல்ல துபாயோட 2020.UAE ல் உள்ள அனைவரும் சமீப காலமாக அடிக்கடி சொல்லும் வார்த்தை இந்த 2020 எக்ஸ்போ தான்.

என்ன இந்த எக்ஸ்போ 2020?

ஏழு வருடத்திற்கு அப்புறம் 2020ல் நடக்கவிருக்கும் ஒரு எக்ஸ்சிபிஷன் ட்ரேட்பேரை  குறிப்பதுதான் இந்த எக்ஸ்போ 2020.

ஆறுமாத காலத்திற்கு நடக்கும் இந்த எக்ஸ்போவிற்கு 2.5 கோடி நபர்கள் வருவார்கள் எனவும், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரி 2020 ல் நடக்கும் விஷயத்திற்கு இப்போ என்ன என்றால், அந்த எக்ஸ்சிபிஷன் நடத்துவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதுதான்   பாரீஸில்  இன்று நடந்து கொண்டிருக்கிறது.பீரோ ஆப்  இன்டர்நேஷனல் எக்ஸ்போசிஷன் (BIE )என்னும் அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சேர்ந்துதான்  இதனை  நடத்தும் இடத்தினை தீர்மானிப்பது மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும்.

சிம்பிளாக சொல்வதென்றால் எக்ஸ்போ நடத்த விருப்பமுள்ள நாடுகள், தங்களிடமுள்ள சிறப்பம்சங்களை குறிப்பிட்டு  இதில் கலந்து கொள்ளும். BIE  அமைப்பால்  அவர்களுடைய பொருளாதார தகுதி,தரை மற்றும்  வான்வழி போக்குவரத்து வசதிகள், இதனை நடத்துவற்கான உள்கட்டமைப்பு வசதிகள்  பரிசீலனை செய்யப்படும்.போட்டியில் பங்கு பெரும்  நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்வது உண்டு.

கடைசி நாளான இன்று   இது குறித்த 20 நிமிட வீடியோ இன்று ஓட்டெடுப்பிற்கு முன்னர் BIE  மெம்பர்களுக்கு திரையிடப்படும் பின்னர்   BIE -ல் உள்ள 163 நாட்டு  மெம்பர்கள் ஓட்டெடுப்பின் மூலம் அந்த நாடு தேர்ந்தெடுக்கப்படும்.

இதனால் என்ன உபயோகம்?

சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். இதனை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு,
  • அந்நிய முதலீடு பெருமளவில் ஈர்க்கப்படும்.
  • நேரடியாக கட்டுமானம், மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் .
  •  வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில்  தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பெரும்.
  • ஹோட்டல், டூரிசம் கணிசமாக வளர்ச்சியடையும்.
  • பொருளாதாரம்,தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
(இவை எல்லாவற்றையும் விட கேரளாவுல மிச்சமீதி இருக்கும் நம்ம சேட்டன்கள்  வரவு ரொம்ப ரொம்ப அதிகரிக்கும் )

இந்த ரேசில் ஜெயிக்கத்தான் துபாய் படு மும்முரமாக செயல் படுகிறது. இதனை நடத்துவதன் மூலம் 2009-11 களில் இருந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து முற்றிலுமாக வெளிவர இதனை ஒரு அறிய வாய்ப்பாக துபாய் கருதுகிறது.
இதற்கான போட்டியும் கணிசமாக இருக்கிறது.

ரேசில் இருக்கும் நாடுகள் 
1.துபாய் 
2.துருக்கி 
3.பிரேசில் 
4.ரஷ்யா .

 மொத்தமாக போட்டியிடும் நான்கு நாடுகளில் கடும் சவாலாக இருப்பது துருக்கி என்கிறார்கள். பழைய பாரம்பரியத்தை பின் பற்றி வரும் நாடுகளில் இதுவும் ஒன்று என்பதால் முன்னுரிமை சற்று கூடுதலாக உள்ளது.ஆனால் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகளும் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களும் இதற்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கின்றன.

எல்லா காரணிகளிலும்  அதிக முன்னிலையோடு துபாய் இருப்பது இதற்கான வாய்ப்பை சற்று பிரகாசமாக வைத்துள்ளன. இது நடைபெறும் இடம் குறித்த சில புகைப்படங்கள் ,








இது குறித்த இறுதி முடிவு இன்று இரவு துபாய் நேரப்படி 8.30மணிக்கு பாரீஸில் இருந்து   அறிவிக்கப்படும்.

பார்க்கலாம் பூங்கொத்தா அல்லது  புஸ்வாணமா என்று !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!



Tuesday, November 5, 2013

பொய்யாய்க் கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா.

அன்பாயிருந்த மகனுக்கு,

ஒரு மழைக்கால ராத்திரியில்தான் நீ பிறந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினாய்.என் கைச்சூடு கண்டுகொண்டதால்   என்னவோ பிறந்த சில மாதங்களுக்கு  என்னைத்தவிர யாரிடமும் சென்றதில்லை நீ. ஒருநாளில்  எனக்காக நான் ஒதுக்கிய நேரம் சில  நிமிடங்கள்  மட்டுமே.

மழைக்  காலமாகையால் நீ ஈரமாக்கிய துணிகளை துவைத்து   வெளியில் காய வைக்க இயலாமல் விறகு அடுப்பின் வெம்மையில் உலர்த்தி  தருவார்  உனது அம்மாச்சி.  

"முந்தித்  தவமிருந்து
முன்னூறு நாட்  சுமந்து
அந்திப் பகலாய் இறைவனை வந்தித்து" 

பெற்றெடுத்த உன்னை, உடலால் தோளிலும், மனதால் நெஞ்சிலும் சுமந்து திரிந்தார் உனது தந்தை.உனது மழலைச்  சொல் தான்  எங்கள் வேதமாகியது.நீ இருக்கும் இடம்தான் எங்களுக்கு விருப்பிடமானது.   உலகினை பொறுத்தமட்டிலும் நீ வளர்ந்து கொண்டே இருந்தாய் நானோ சிறுபிள்ளையாகிக் கொண்டிருந்தேன்.

நடைவண்டியோட்டி நீ  நடை பழகிய காலத்தில் கொல்லைப்புற வாசல்  ஓரமாய் இருந்த கல் தடுக்கி  நீ விழுந்து விட்டாய். உனக்கு அடிபட்டு விட்ட ஆதங்கத்தில் உன் தந்தை பெயர்த்து எறிந்த அந்தக் கல்,எல்லைக் கல் ஆனதால்  பங்காளி வீட்டு  பகையாகி காவல் நிலையம் வரை சென்றது தனிக்கதை.

நீ பள்ளி சென்ற முதல் நாளின் வெறுமையை  தாங்க இயலாமல், நாள் முழுவதும் பித்து பிடித்தாற்  போல இருந்தது உனக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கும் உன் தந்தைக்குமான கருத்து வேறுபாடுகள் மிக சொற்பமே. உன்னால்,  உன் பருவ வயதில் நீ செய்த தவறுகளால்  எனக்கும் உன் தந்தைக்குமான மனஸ்தாபங்கள் ஏராளம்.

நீ உடுத்திய  உடை முதல்  படித்த  கல்லூரி மற்றும் கட்டிய மனைவி  வரை உனது விருப்பமே பிரதானமாக இருந்தது. நீயும் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உனக்குத்தான் நான் மிகவும் வேண்டாதவளாகிப் போய்விட்டேன். தளர்ந்த உடலும்,  சுருக்கம் விழுந்த முகமுமாக நான்தான்  அந்நியப்பட்டுப் போய்விட்டேன்.

முன்பொரு காலத்தில் முழு வீட்டையுமே ஆக்கிரமித்து இருந்தாய் நீ.  அதில்  எனக்கொரு ஒட்டுத்திண்ணை கூட கிடைக்காதது எனது துரதிர்ஷ்டமே. எனக்கு வசதியாய் இருக்கட்டும் என்று,  என்னைப்போல அனாதைகள் நிரம்ப உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளாய்.

 நன்றாகத்தான் இருக்கிறது மகனே நீ சேர்த்து விட்டிருக்கும் முதியோர் இல்லம்,  என் போன்ற அனாதைகளின் ஏக்கப் பெருமூச்சோடு. எதற்கும் இருக்கட்டும் இந்த அறையையும் முன்பதிவு செய்து கொள். உன் காலத்தில் இதற்கும் வரலாம் இடப்பற்றாக்குறை!!!.  

இப்படிக்கு 
பொய்யாய்க்   கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா .


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, September 23, 2013

நிக்கோடினா ஒரோல்ஸ்.

1999
காலேஜ் பர்ஸ்ட் இயர்  படிக்கும்(??!!) போது படிக்கிறத தவிர மத்த எல்லாத்தையும்  செய்யுறது.  எங்க பக்கத்து ரூம்ல ஒரு அஜீத் குமார் இருந்தான். அவன் எப்போதும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னுகிட்டே  வராத மீசையை வா வான்னுட்டு இருப்பான். ஒரு பரு வந்துடுச்சுன்னா  போதும் ரூம் புல்லா கலர் கலரா மருந்து வாங்கி வைச்சிருப்பான்,  நைட்டு படுக்க போறதுக்கு முன்னாடி  மூஞ்சில எதையாவது   அப்பிக்கிட்டு பக்கத்துல இருக்கிறவங்களை பயமுறுத்தி கிட்டு இருப்பான்.

வழக்கம் போல படிக்காம  பேசிக்கிட்டு இருக்கிற "சைலன்ஸ் அவர்ல" அவனைக் கலாய்க்கிறதுக்காக ஒரு ப்ளான் போட்டோம் . நம்மாளுதான் மூஞ்சுக்கு போடுற பவுடர் அல்லது  க்ரீம்ன்னா  உயிரை விடுவானே அதுனால அவனுக்காக ஒரு  பவுடர் தயார் பண்ணினோம், அதோட மூலப் பொருட்கள் என்னன்னா

1.சர்ப்  சோப் பவுடர்
2.பாண்ட்ஸ் பவுடர் (கொஞ்சம் )
3.ப்ளீச்சிங் பவுடர்   (கொஞ்சத்துல கொஞ்சமா)

நல்லா  மிக்ஸ் பண்ணிட்டு,  ஒரு சின்ன டப்பால போட்டு வச்சிட்டோம் . நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போது  ஒருத்தன் ரொம்ப கேஷுவலா கேக்குற மாதிரி மச்சான் ஜோதி, உங்க மாமா லண்டன்லேருந்து வாங்கி வந்த பேஸ்  வாஷ் நல்ல இருக்குடா அப்படின்னு சொன்ன உடனே,

"மசால் வடையை பார்த்த எலி மாதிரி'' பாஞ்சு வந்து எனக்கு எங்கடான்னு, எனக்கு எங்கடான்னு எக்கோ எபக்ட்டுல கேட்டுட்டு, கூடவே அதோட பேரு என்னடான்னு கேட்க, நாங்கள் திகைக்க  என் நண்பன் ஒருவனோ சட்டென்று வைச்சான் பாருங்க பேரு "நிக்கோடினா  ஒரோல்ஸ் ."

பேரே பாரின் பிகர் மாதிரி இருக்கதால நம்மாளுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
மச்சான் ரொம்ப காஸ்ட்லியான பவர்புல்  பவுடர் கொஞ்சமா தண்ணில கலந்து போடு, மூஞ்சில  அரிச்சா பவுடர் வேலை செய்யுறதா அர்த்தம்னு சொல்லிட்டு சபையை கலைச்சிட்டோம்.

நம்மாளும் அதை தொடர்ச்சியா நாலஞ்சு நாள்  போட்டு மூஞ்சில வெள்ளை வெள்ளையா சொறி வந்ததுதான் மிச்சம். மூஞ்சை சொறிஞ்சது சகிக்காம நண்பன் ஒருத்தன் "நிக்கோடினா  ஒரோல்ஸ்" சோட பார்முலாவை நம்ம அஜித்குமார்கிட்ட சொல்ல, அப்புறம் கேப்டன் விசயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு செவக்க  செவக்க  "செந்தமிழ்" ல ஒரு அரைமணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்தான் எங்களுக்கு .

2013
இப்போ அந்த அஜித்குமார் யு. எஸ் ல இருக்கான்.  கொஞ்ச நாளைக்கு முன்பு பேசியவன் ஊருக்கு போறப்போ ட்ரான்ஸிட்  துபாய் வர்றதாகவும் , கண்டிப்பா மீட் பண்ணுவோம்னு சொல்லிட்டு   வர்றப்போ   என்னடா வேணும்ன்னு   கேட்க,  யு .கேன்னா கிடைக்கும் மச்சான் ஆனா  யு. எஸ் ல கிடைக்குமான்னு தெரியலயேன்னு  சொல்ல அப்படி என்னடா இங்க கிடைக்காததுன்னு  கேட்க, நானோ "நிக்கோடினா  ஒரோல்ஸ் " ன்னு சொல்ல, டமார்ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு அது அவனோட மொபைலா இருக்குமோன்னு தோணுது!!! உங்களுக்கு என்ன  தோணுது ??



வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!