Sunday, May 19, 2013

மனதைப் பிசையும் சில விடை தெரியா கேள்விகள்!!


குல்மொஹர் மரம். பூக்கும்  பருவத்தில் இலை  எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு வெறும் பூக்களுடன் மட்டுமே தனக்கான  சகவாசம் என்பதாய் நினைத்துக் கொண்டு இருக்குமே அந்த மரம்தான். அந்த பூக்கள் பூப்பது, பின்  நிறம் மாறுவது  எல்லாமே அழகுதான். முதலில் அடர் சிவப்பாய் கூடவே பச்சையான சில மொட்டுகளுடன், பின் அந்த மொட்டுகளும் பூவாகி,  பின் மெல்ல நிறமிழந்து ஆரஞ்சு சிவப்பாய் கடைசியில் மஞ்சளாய், பிறகு வெளிர் மஞ்சளாய் மாறுவது வெகு அழகு.

எனது அலுவலகத்தின் முன் உள்ள சாலையில் இந்த மரங்கள் வரிசையாக நடப்பட்டு இருக்கும். பூத்து இருக்கும் அவற்றை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பார் அந்த ஓட்டுனர். யாரையோ  இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வருகைக்காக வண்டியிலேயே காத்துக் கொண்டிருந்தார் ஒரு குல்மொஹர்  மர  நிழலின் கீழ். வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார் போல, அவ்வப்போது கீழிறங்குவதும், அலைபேசியில் பேசுவதுமாக இருந்தார்.

சட்டென்று வந்து நின்றது துபாயின் போலிஸ் வாகனம். வரிசையாக அங்கு சாலையை ஒட்டி நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு அபராதம் எழுதியவர். தொடர்ச்சியாய் இந்த வண்டிக்கும் எழுத, பதறிப்போன அந்த பெரியவர் கீழிறங்கி அந்த போலீசிடம் மன்றாட, எதையும் பொருட்படுத்தாத  அந்த போலிஸ், அபராதம் எழுதி நீட்ட, சட்டென்று அந்த பெரியவர் அந்த போலிஸின் காலில் விழுந்து விட்டார்.

சகலமும் ஆடிப் போய்விட்டது எனக்கு. அதுவரை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, மனதில் பெரிய பாராங்கல்லை வைத்தது  போலாகிவிட்டது. என் தந்தை வயதிருக்கலாம் அவருக்கு . 
பிழைப்புக்கு வழி தேடி வந்த வெளிநாட்டில், தன்மானத்தை விட்டு தன் மகன் வயதே உடைய ஒருவரிடம், காலில் விழ வேண்டிய நிர்பந்தம் என்னவாயிருக்கும்?   எது அவ்வாறு  செய்யத்தூண்டி  இருக்கும்? அந்த நாளின் இரவுப் பொழுது எவ்வாறு இருந்திருக்கும் அவருக்கு? இது போன்ற விடை தெரியாக்  கேள்விகள் மனதை பிசைந்து  கொண்டே இருந்தன.

இருக்கலாம் கல்யாண வயதில் உள்ள மகளுக்கு சேர்க்க வேண்டிய பணமாகவோ  , இல்லை அவர்களது கல்விக் கட்டணமாகவோ , இல்லை குடும்பத்தின் மருத்துவ செலவாகவோ, இல்லையேல் அந்த குடும்பத்தின் உணவாகவோ மாற  இருந்திருக்கலாம் அந்த பணம்.

நன்றாகத்தான் போகிறது வாழ்கை. மனதை பிசையும் சில  விடை தெரியா  கேள்விகள் தோன்றாத வரை. 

அழகாய் பூத்ததுதான் இருக்கிறது அந்த குல்மொஹர் மரம். ஆனால் எனக்குத்தான் ரசிக்க மனமில்லை.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!










  

Tuesday, May 7, 2013

படிப்பது ஒரு பாவச்செயலா ??

பள்ளிக்கூடத்துல நல்ல விஷயம் எதுலயும் நம்ம பேர் வந்ததா வரலாறு,புவியியல் எதுவும் கிடையாது. நம்மளுக்கு சீனியரா ஒரு அண்ணன் இருந்தார். சீனியர்ன்னா ஒவ்வொரு வகுப்பிலும் ரெண்டு வருசமா படிச்சு அஸ்திவாரத்தை ரொம்ப பலமா போட்டுகிட்டு இருந்தார். அவருக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை "படிப்பு "

அண்ணன் படிப்பைத் தவிர மற்ற விஷயத்துல ரொம்ப கெட்டி. எந்த வாத்தியார்  இன்னைக்கு லீவுங்கிறதுல ஆரம்பிச்சு, என்னைக்கு   சத்துணவுல முட்டை போடுறாங்க  வரைக்கும்  அத்துபடி.

எங்களோட அறிவியல் வாத்தியார்  யாரையாவது ஒருத்தனை வாசிக்கச் சொல்லிட்டு நல்ல தூங்கி  பொழுதை போக்குவார். அந்த மாதிரி சமயங்களில் நம்ம அண்ணன் தான் கைகால் புடிச்சு விடுவார். குருபக்தின்னா அப்புடி ஒரு குருபக்தி ஹி ஹி .

தூக்கம் வராத நேரத்துல  அவர்  வகுப்பும் எடுப்பார் . இடையில ஏதாவது பேசினா,சேட்டை செய்தா அடி வெளுத்து விட்டுடுவார். பள்ளிக்கூடமே அவருக்கு பயப்படும்.ஒருநாள் வகுப்புக்கு வந்த அவர் நம்ம அண்ணனை பார்த்து, புத்தகத்தை எடுத்து வாசிக்க சொல்ல, அவன் அங்கும் இங்குமா புத்தகத்தை தேட, புத்தகம் எடுத்துட்டு வரலைன்னு அடி பிரிச்சுட்டாரு.

 அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவர், என்னடா இன்னைக்கு புத்தகம் கொண்டு வந்தியான்னு கேட்டுட்டு, அவனிடமிருந்தே  புத்தகத்தை வாங்கி வகுப்பெடுக்க, திடீரென சாமி வந்தவர் போல ஆவேசம் கொண்டு நம்ம அண்ணனை அடி வெளு வெளுன்னு வெளுத்துட்டார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாப் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு ஒரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லி  ரெண்டு மூணு வாத்தியார்கிட்ட கூடுதலா அடி கொடுத்து  அனுப்பி வைச்சாரு.

 கண்ணீர்க் கரையோட அழுதுகிட்டே வந்தவனிடம் என்னாச்சு ? எதுக்கு உன்னைய அடிச்சாங்கன்னு கேட்டதுக்கு,  அவன்  புத்தகத்தோட கடைசி பக்க  அட்டையை காமிச்சான். அதுல  இப்படி  திருத்தம் பண்ணி   வைச்சிருந்தான் பாவிப்பய..

 படிப்பது
தீண்டாமை ஒரு பாவச் செயல்.
பள்ளிசெல்வது
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
 பரீட்சை வைப்பது
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.
 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் ..






Sunday, April 21, 2013

பசுமை நிறைந்த பால்யம் - 4

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் - 1
பசுமை நிறைந்த பால்யம் -2
பசுமை நிறைந்த பால்யம் -3 

பால்யத்தின்   விடியற்காலைப் பொழுதுகள்  சுகமானவை . அதிலும் விடுமுறை நாளின்  காலைப்பொழுதுகள்  எந்தவித நெருக்கடிகளும் இல்லாதவை. புத்தகத்தை விரித்து வைத்தவாறே படிப்பதாய் பாவனை செய்யும்  காலைப் பொழுதுகளும், அதிலிருந்து தப்பிப்பதற்கென்றே அமைந்து விடும்  வேலைகளும்,   சில நாட்களில்  நெல் அவிப்பதும்,  அதற்கான  ஆயத்தங்களும், அவித்த நெல்லை வாசலில் கொட்டும் போது வெளிவரும் நெல்மனமும்,  குவியலாக கொட்டி காலால் பரவலாக்கப்பட்ட விதங்களும்,  காய்ந்து கொண்டிருக்கும் நெல்லை அடிக்கடி பதம்  பார்த்துகொண்டிருக்கும் ஆயாவும், விளையாட செல்கையில்  எதிர்பாராமல் காய்ந்து கொண்டிருக்கும் நெல்லுக்கு  காக்கா  விரட்ட காவலாக ஆக்கபடுவதும் அதனை தவிர்க்க போராடுவதும்,   இப்போது நினைத்தாலும் அவ்வளவு பிடித்தமானதாக இருக்கிறது.

வெயில் பொழுதுகள் மிகவும் பிடித்தமானவை. வெளியில் சென்று விளையாடுவதற்கு எந்தவிதமான நிர்பந்தத்தையும்  தராதவை. உக்கிரமான வெயிலில் தெரு முழுவதும்  அலைந்து  திரிந்து விளையாடுவதும், வேர்த்து வழியும் உடம்பும், காலில் அப்பியுள்ள தெருப்புழுதியும்,    தாகமெடுத்த போது உடல் முழுவதும் வழிந்தோடுமாறு குடித்த தண்ணியும், களைத்த பொழுதுகளில் கூட விளையாடிய நண்பர்களுடன்    ஓய்வெடுக்கும் பெரிய  வேப்பமரத்து   நிழலும், தண்ணென்று வீசும் மெல்லிய காற்றின் குளிர்ச்சியும், தற்காலத்து எந்த காரணியாலும்  ஈடுகட்ட இயலாதவை.

பண்டிகை கால வீடு திரும்பல்கள் தித்திப்பானவை. எத்தனை நாள் விடுமுறையாயிருக்கும் என்று திரும்ப திரும்ப பார்க்கும் மாத  காலண்டரும், அடையாளமாய் மடித்து வைத்த தினசரி காலண்டரும், நண்பர்களுடனான பேச்சுகளே அந்தந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கு நிகரானவை. 

பொங்கலின் போது கரும்பு கடைகளுக்கு வருமுன்னே எங்களின் பேச்சு மூலம் அனைத்தும் சக்கையாக்கப் பட்டிருக்கும்.
தீபாவளின் போது  வெடிக்கும் வெடிகளை விட அதிக சந்தோஷத்தை தருபவை  அதை பற்றிய எங்களின்  பேச்சுகள். சற்றே மிகைப்படுத்தப்பட்ட பேச்சாயினும் அத்தனையையும் ரசிக்க வைத்த பண்டிகை கொண்டாட்டங்கள்.
                                               
இவை அனைத்துமே இப்பொழுதும் கிடைப்பவைதான், ஆனால்  நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவற்றை   எல்லாம் ரசிக்கும் மனநிலையை விட்டு  வெகு தூரத்திற்கு நம்மை கொண்டு வந்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத நிஜம்.

நிஜத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் போலி பிம்பத்துடன் இயைந்து இயல்பாய் இருக்கவும் இயலாமல் ஊசலாடி கொண்டிருக்கிறது எனது  பால்யம் குறித்த நினைவுகள். இந்த நினைவுகளின் மீட்சிதான் இன்னும் என்னை உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டிருக்கிறது.
நன்றாய்  இயக்கட்டும்  மீட்சிகளின் ஆளுமை ...

                                                                                                     பால்யம் மலரும் ...

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Wednesday, April 3, 2013

ப்ளஸ் டூ பொண்ணு . !!!

   தலையை துவட்டியவாறே குளியலறையில் இருந்து வெளிப்பட்டான் ரஞ்சன், 27 வயது  இளைஞன். பார்த்தவுடன் பிடித்து போகும் முகம் , நல்ல  உயரமும் அதற்கேற்ற உடம்புமாய்  இருந்தான். சாப்ட்வேர் கம்பெனியில் லண்டனில் இரண்டு வருடமாய் குப்பை கொட்டிவிட்டு அம்மாவின் வற்புறுத்தலால் தற்போது சென்னைவாசி

 இன்றைக்கு  அம்மாவிற்கு  ஆர்த்தோ டாக்டரிடம்  மூட்டு வலிக்கான அப்பாயின்மென்ட்  என்பது திடும்மென நினைவுக்கு வர , அவசர அவசரமாக கிளம்பத் தொடங்கினான். ப்ருட்டை உடலில் விசிறி விட்டு, டி சர்ட் , ஜீனுக்கு தாவி, தலைவாரியபடியே வெளியே வந்தான்.

படிக்கட்டில் இறங்கி வரும்  மகனை  சற்றே பெருமிதமாய்  பார்த்த பூங்கோதை, தட்டில் இட்லியும் அவனுக்கு பிடித்த கொத்தமல்லி சட்னியை வைத்து நீட்ட , அவரசமாய் சாப்பிட ஆரம்பித்தவன்,  

அம்மா ஏதோ சொல்ல வருவது போல தோன்ற, சிரிப்புடன் என்னம்மா என்றான்தரகர் வந்துட்டு போனார், மூணு  ஜாதகம் நல்ல பொருத்தமா இருக்காம் நீ சரின்னு சொன்னா  பார்க்கலாம்.

கொஞ்ச நாள் போகட்டும்  என்று பொதுவாய் சொல்லிவிட்டு கைகழுவினான். அவ்வளவுதான் அதற்கு  மேல் எதுவும் கேட்க முடியாது.

எப்போது எதனால் கோபம் வருமென்று சொல்ல முடியாது,  அந்த கோபத்தின் உக்கிரத்தை தாங்க இயலாது, ஆனால் கோபம் தணிந்த அடுத்த நொடியில் குழந்தை போலாகிவிடுவான், இதை தவிர வேறு ஒன்றும் குறை சொல்ல முடியாது அவனிடம்

பூங்கோதையின் கவலை எல்லாம் வரப்போகும் பெண்ணை பற்றித்தான், வருபவள் அவனை புரிந்து நடந்து கொள்வாளா என்ற ஏக்கம் சில நாளாக அதிகரித்து இருந்தது.    

யாரையாவது காதலிக்கிறான்  என்றால் கூட  கல்யாணம் செய்து வைக்க அவள் தயார்தான், ஆனால் அவனோ பிடி கொடுத்து பேசுவேனா  என்கிறான்.

இதே நினைப்புடன் கிளம்பியவளை ரஞ்சனின் குரல் இவ்வுலகிற்கு கொண்டு வந்தது,    ஹாஸ்பிட்டல் பைலை  எடுத்துகிட்டிங்களா
என்றவாறு  பைக்கின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான் . 

ரஞ்சனுக்கு  காதல்  என்று இல்லாவிட்டாலும், உடனே  திருமணம் செய்ய வேண்டுமென தோன்றவில்லை. ஆனால் அம்மாவுக்கோ ஒரு பேரனையோ பேத்தியையோ பார்க்க வேண்டுமென ஆசை

 காதலிக்கும் நண்பர்கள் அவர்களின் முதல் சந்திப்பையோ அல்லது வேறேதை பற்றியோ  சொல்லும் போது மட்டும் ஒருவித ஏக்கம் மனசுக்குள் வந்தமரும். நமக்கு ஏதும் இது போன்று நடந்ததில்லையே என்று, பிறகு நமக்கா? என்றொரு  சிரிப்புடன் அந்த எண்ணம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ளும் .

வீட்டை பூட்டிவிட்டு அம்மா வர , ஹாஸ்பிட்டலை நோக்கி பைக்  அனிச்சையாய் ஓடியது. வழியில் அம்மா ஏதும் பேசவேயில்லை. மருத்துவமனையை அடைந்து, அம்மாவை பரிசோதனைக்கு உள்ளே  அழைத்து சென்று விட,

அவன்  மட்டும் வரவேற்பு அறையில் உட்கார்ந்து டி .வியில் ஓடிய குத்துபாட்டை ரசிக்க மனமின்றி   வேறெங்கோ  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்கல்லூரி மாணவி போல் தோற்றமுடைய  ஒரு பெண்  காலில் ஒரு சிறிய கட்டுடன் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தாள்.

ஏதேனும் நடைபயிற்சி என்று  நினைத்து கொண்டிருக்கும் போதே, அவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவாறு அருகில் வந்து,சில்லறை வேண்டுமென  கேட்க,  அவன் தனது வாலெட்டிலிருந்து  எடுத்து நீட்ட ,சின்ன சிரிப்புடன்  தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்தவாறு  நகர்ந்தாள் .

 சிறிது நேரம் கழித்து  திரும்பி வந்தவள் அவனது பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து  வெகுநாள் பழக்கம் போல பேச ஆரம்பித்தாள்

ரஞ்சனிடம் இயல்பாகவே இருந்த கூச்ச சுபாவத்தால் அவளின்  கேள்விகளுக்கு பதில் சொல்வதோட நிறுத்த  அவளோ   அவளின் அப்பா, அம்மா  வேலை செய்வதில்  இருந்து, அவளது  அக்காவின் பொறியியல் படிப்பு மற்றும் அக்காவின்  சமீபத்திய    காதல் வரைக்கும் சொல்லிக்கொண்டு  இருந்தாள்

ரஞ்சனுக்கு மிகவும்  வியப்பாக இருந்தது. இப்பொழுது பார்த்த ஒருவருடன் எப்படி இத்தனை இயல்பாக பேச முடிகிறது என்று நினைத்தவாறே ஒரு குறுகுறுப்புடன்  அவளின் காலில் எப்படி அடிபட்டது என்று கேட்க?

 ஸ்கூட்டியில  போகும் போது  இன்னொரு வண்டிக்காரன் வந்து இடித்ததாக   சொல்ல, ஒரு  சந்தேகத்துடன்  லைசென்ஸ் இருக்கா? என்றதற்கு வெறுமனே சிரித்து வைத்தாள்.   

 இப்ப   என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
 என்று  கேட்டதற்கு பதிலாய் ஒரு வெடிகுண்டை வீசினாள்  + 2 படிப்பதாக

பார்ப்பதற்கு காலேஜ்  பொண்ணு மாதிரி இருக்கிறாய் என்றான் அவன், அதற்கு அவளோ நான் எங்க அப்பா மாதிரி என்றாள்  வெகுளியாய் .அவள் இவ்வளவு நேரம் லொடலொடவென்று  பேசினதின்  அர்த்தம் புரிந்தது ரஞ்சனுக்கு .
  
 கொஞ்ச நேரத்துல அவனது அம்மாவும் வந்து விட, அந்தப்பெண்ணிடம் சொல்லிவிட்டு  அம்மாவிடம்  செல்ல, மருந்து சீட்டை அவனிடம் தந்தவாறே உன்னுடன் வேலை செய்யும் பெண்ணா? என்று கேட்க,
இல்லை அவள்  +2 என்று  சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு, ஆமாமென்று தலையசைத்துவிட்டு,  வண்டிக்கருகில் இருக்குமாறு சொல்லிவிட்டு  பார்மஸிக்கு  சென்றவன்,அவளின்  பெயரைக்கூட கேட்கவில்லையே  என்று நினைத்தவாறே   அவளை தேட, ரிசப்ஷன் அருகே அவள் இல்லை

 அவனது திறமையை அவனே மெச்சிக்கொண்டு  மாத்திரை வாங்கி வந்தால், அவனது வண்டியருகில் அவளும், அவனது  அம்மாவும் பேசிக்கொண்டு  இருக்க  அவனுக்கோ பகீரென்றது .

அவன் ஒன்றும் சொல்லாமல்   வண்டியை  ஸ்டார்ட் பண்ண,  பார்த்து போங்க என்று அவள் புன்னகைத்தவாறே  சொல்ல, எரிச்சலில்  இருந்த அவன்  என்னிடம்  லைசென்ஸ்  இருக்கு என்று சொல்லியவாறே கிளம்பினான்
மருத்துவமனை தாண்டியவுடன் அவனிடம் அம்மா கூறினாள்   ,

அந்த பொண்ணு பேரு "வெண்ணிலா"வாம்  +2 படிச்சிக்கிட்டு இருக்காம். அவன் காற்று வேகத்தில் காதில் விழாத பாவனையுடன்  வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!