Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Tuesday, July 12, 2016

முதல் முத்தம் !


நாம் காதலிக்க ஆரம்பித்த கால கட்டத்தில் நீதான் எப்பொழுதுமே  பேசிக்கொண்டிருப்பாய்.  நான் புன்னகையுடன்  கேட்டுக்கொண்டே இருப்பேன் . நான் பேசிய  வார்த்தைகள் கொஞ்சமே .அதிலும் நானாய்  பேசிய வார்த்தைகள்  கொஞ்சத்திலும் கொஞ்சமே . 

பேசக்  கூடாது என்றெதுவுமில்லை. உன்னருகில் இருக்கையில்  ஒரு வித கிறக்கத்தில் , ஒரு தேவதையிடம் வரம் கேட்கும் ஒரு உபாசகனைப்  போலிருப்பேன் நான்.

ஒரு மழைக்கால மாலைப்பொழுதில் உங்களுக்கு பிடிச்சது பத்தி சொல்லுங்களேன்  என்று  செல்ல சிணுங்கலுடன் ஆரம்பித்தாய்  நீ .

என்ன பிடிக்கும் எனக்கு  ??  சற்றே  யோசனையாய் ஆரம்பித்தேன் ,

முற்றம் வைத்த
வீடு பிடிக்கும்.
முழு நிலா பிடிக்கும்
மொட்டை மாடியில் வானம்
பார்த்து படுக்க பிடிக்கும்.
நட்சத்திரம் எண்ணி
தோற்கப் பிடிக்கும்.
பெரு வெளிப்பரப்பில்
இலக்கின்றி நடக்கப் பிடிக்கும் .

மழை  பிடிக்கும்,
அதனால் கிளர்ந்தெழும்
மண்வாசனை பிடிக்கும்.
மழைக்குப் பின் வெக்காளித்த
வானம் பிடிக்கும்.


நிறைவாய்த்  தளும்பி  இருக்கும்
நீர்நிலை பிடிக்கும்
உழுதுண்டு வாழப்பிடிக்கும்.
கதிர் முற்றி நிலம் நோக்கும்
நெல்வயல் பிடிக்கும்.
பச்சை புல்வெளியில்  கசங்கிய புல்லின்
வாசனை பிடிக்கும்

அந்தி வானம் பிடிக்கும்
அதிலும்
புதுப்பெண் பூசிய வெட்கமாய்
சிவந்து, கலைந்து கிடக்கும்
செக்கர் வானம் பிடிக்கும்
மார்கழி மாதம் பிடிக்கும்

அடர் கானகம் பிடிக்கும்
கடலலைக்கும் கரைக்குமான கொஞ்சல்  பிடிக்கும்
இயல் இசை நாடகமாய் இருக்கும்
முத்தமிழும் மொத்தமாய் பிடிக்கும் .

சுயநலமில்லா  அன்பு பிடிக்கும்
அதன் மறு உருவான
அம்மா பிடிக்கும்
அம்மாக்களுக்கு  பிடித்தமான
குழந்தைகள் பிடிக்கும்.

முத்தாய்ப்பாய்
என் குழந்தையை சுமக்கப் போகும்
உன்னை ரொம்ப  பிடிக்கும் .


என்றேன். காதல் சொட்டும் பார்வையுடன்  என் கன்னத்தில் சட்டென்று உன் இதழ் பதித்து முதல் முத்தத்தை தந்தாய். காதல் கிறக்கத்துடன் முணுமுணுத்தேன், அடி கள்ளி! இது முன்பே கிடைத்திருந்தால்  எனக்கு பிடித்தவைகளின்  பட்டியலில் உன் முத்தமே முதலாவதாய்  இருந்திருக்குமென்றேன். 

வெட்கத்தால் சிவந்திருந்த உன் முகம் இன்னும் சிவப்பாக ஆரம்பித்தது !!!.



வாழ்க வளமுடன் , தமிழ் தந்த புகழுடன் !!!.








Monday, August 27, 2012

எப்படி இருக்கிறாய் என் காதலியே ?

                                
  
                         நீ நன்றாக இருக்கின்றாய் என்று  எனது காதல்  எனக்கு சொன்னாலும், உன்னிடமிருந்து வரும் " ம் " ஒற்றை சொல்லில் பொதிந்துள்ள ஒராயிரம் அர்த்தத்தை இந்த பொல்லாத காதல் நீயின்றி உணர்த்திவிடுமா  என்ன?  அந்த காதலின் கர்வத்தை அடக்கவாவது என்னுடன் மறுமொழி பேசிவிடு.

 உன் மீதுள்ள காதலை உனக்கு உணர்த்த ஓராயிரம் முறை உன்னை அலைபேசியில் அழைத்திருப்பேன். எத்துனை முறையோ வாய் வரை வந்து விட்ட சொற்கள் ,   என் காதலின் ஆழத்தை உனக்கு உணர்த்தும் சரியான  வார்த்தைகள்  தெரியாமல்  உன்னுடன் பேசுவதற்கு முன்பே   ஓடி ஒளிந்து கொள்கின்றன. என்ன சொல்லி சமாளிப்பேன் உன்னிடம்?
ஆகவேதான்  அலைபேசி ஒலிப்பதற்குள் துண்டித்து விடுகிறேன் சமயத்தில் உதவாத இந்த சொற்களின் மீது பெருங்கோபம் கொண்டு !!!!

தேவதையிடம் காதலை சொல்ல இயலாமல் ஒளிந்து கொண்ட வார்த்தைகள் என்னிடம்  வந்து மன்னிப்பு கோரி சமரசம் செய்கின்றன. வார்த்தைகளால் சொல்ல இயலாத காதலை வரிகளாக்கி உன்னிடம் சமர்ப்பிப்பதாக!!! . எனது  மௌனத்தையே சம்மதமென கருதி விரைகின்றன வார்த்தைகள், உன் பேரழகையும், காதலையும்    ஒருங்கே எழுதிவிட! . 

அது என்ன அவ்வளவு சுலபமா என்ன ? இருவெளிகளில் வெவ்வேறு திசையை நோக்கி பயணிக்கும் முடிவிலி போன்றது அது.  இதுதான் மிகசிறந்தது என வார்த்தைகளால் வடித்து கொண்டுவரப்படும் அனைத்துமே  சாதாரணமாகத்  தான் தெரிகிறது எனக்கு.
 உனக்கு  அனுப்புவதற்காக காதலைக்கொண்டே  உருகி உருகி எழுதப்பட்ட அத்தனை      மின்னஞ்சல்களுக்கும் உன்  மேலுள்ள  என் காதலை முழுதாய் சொல்லிவிட திராணி இல்லாததால் அவை எனது சேமிப்பறையில் உனக்கான   என் காதலுடன் சுகமாய் உறங்குவது  உனக்கு தெரியுமா?

எனக்கு தெரியும்  உனக்கான என் காதல்  ஒருநாள் உன்னால் உணர்ந்து கொள்ளப்படுமென்று, அதுவரையில் தேவதையிடம் யாசிக்கும் ஓர் யாசகனைப் போல நான் ஒரு ஓரமாய்  காத்திருப்பேன்   என்றோ ஒருநாள்  மகுடமேறப்போகும்  என் காதலுடன் !!!


வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன் !!!