Thursday, January 30, 2014

அம்மாவின் பிறந்தநாள் !

"அம்மா"  மூன்றெழுத்து  கவிதை 
ஒரு வார்த்தை அத்தியாயம் 
வரையரைக்குள் அடக்க இயலா பேரன்பு 
உயிரெழுத்தும்  மெய்யெழுத்தும் சேர்ந்து
உயிர் மெய்யாய் நம்முன் நடமாடும் தெய்வம்.

இன்னும் அடுக்கிக்கொண்டே   போகலாம் அம்மாவின் அருமைகளை. என் அம்மாவும் அப்படிப்பட்ட ஒரு தெய்வம்தான்.வாழ்க்கையை சிறப்பாக வாழ கற்றுக்கொடுத்தவர். கடுமுகமோ சுடுசொல்லோ காட்டாதவர்.பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காத ஒரு  ஜீவன். எவ்வளவோ செய்ய நினைத்து செய்தாலும் அவை அனைத்தும் அம்மாவின் அன்புக்கு முன்னால்  சிறியதாகவே பட்டது .

அம்மாவின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்படி ஒன்று செய்ய வேண்டுமென நினைத்தேன். கடவுளின் ஆசிர்வாதமாக நான் கருதும் எனது நண்பர்களின் உதவியுடன் சிறப்பாக நடந்தேறியது அது அம்மாவின் பிறந்தநாள்  கொண்டாட்டம், அம்மாவின்  இந்த வருட பிறந்தநாள் வார விடுமுறையான   வெள்ளிக்கிழமையன்று வர, 

எனது நண்பர்கள் அனைவரிடமும்  இதனை சர்ப்ரைஸாக கொண்டாட வேண்டுமென கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டேன்.வெகு சாதாரணமாக தொடங்கிய அந்த நாளில் ,இன்று  அம்மாவின் பிறந்தநாள் என அப்பா நினைவூட்ட, நானோ எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி வாழ்த்துகளை கூறிவிட்டு அமைதியாக இருந்து விட்டேன். 

பக்கத்து வீடும் எனது நண்பனின் வீடாகிப் போனதால், அனைத்து நண்பர்களையும் அங்கு வரவழைத்து விட , அவர்கள்  வீடு முழுவதையும் அலங்கரித்து  அசத்திகொண்டு இருக்க, நானோ மதியம் லஞ்சுக்கு வெளியில் போகலாம் என்று சொல்லிவிட்டு அவ்வப்போது பக்கத்து வீடு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன்.  

எல்லாம் தயாராகி விட்டது, வீட்டை  நன்றாய் அலங்கரித்து, கேக்கில் மெழுவர்த்தி  எல்லாம் ரெடியாய் வைத்து விட்டு அம்மாவை அழைத்து வர சென்றேன். குடும்பத்துடன் அனைவரும் வெளிவருகையில், அம்மாவிடம்  எதார்த்தமாய் நண்பனது பக்கத்து  வீட்டில் சொல்லிவிட்டு போகலாம் என்று அம்மாவையே கதவை திறக்க சொல்ல  ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் பூம். பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாட, அம்மாவோ ஆச்சர்யம் மற்றும் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போய்விட  நெகிழ்ச்சியாய் என் கையைப்  பிடித்துக் கொண்டார்கள் . பிறகு கேக் வெட்டி, மதிய சாப்பாட்டுடன் இனிமையாக முடிந்தது கொண்டாட்டம்.

அன்று முழுவதும் ஆச்சர்யமும்,மகிழ்ச்சியும் கலந்த ஒரு கலவையான உணர்வுகளை வெளிப்படுத்தியது  அம்மாவின் முகம். அப்படி ஒரு மனம்  கொள்ளா  மகிழ்ச்சி என் அம்மாவின் முகத்தில்,  ஊரில் உள்ள அனைவரிடமும் சொல்லி விட்டார்கள். அவ்வளவு சந்தோஷம்  அவர்களுக்கு. பார்க்க நிறைவாக இருந்தது எனக்கு .

மூன்றாவது பத்தியின் ஆரம்பத்தில் சொன்னது நிறைவேறியது போன்ற எண்ணம் வந்தது  எனக்கு!! உங்களுக்கு ?

டிஸ்கி 1:  நம்ம கோவை நேரம் எழுதிய  இந்த பதிவும் ஒரு காரணம்.

மலரும் நினைவுகள் - அம்மா - பிறந்தநாள் வாழ்த்து.


டிஸ்கி 2 : முகநூலில் இதனை பகிர்ந்த போது என்   நண்பன் ஒருவன் தானும் இது  போல செய்ய வேண்டும் என்று சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த பதிவினால் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரின் அம்மாவின் முகத்தில் சந்தோஷம் கிடைப்பின் அது  இந்த பதிவுக்கு கிடைத்த பெரிய வெகுமதியாக கருதுகிறேன்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!