Monday, June 10, 2013

வாழ்வில் வரக்கூடாத நாள் .

மனதிற்குள்  அழுகை ,பயம், வெறுப்பு மற்றும் இன்ன பிற உணர்ச்சிகளும் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கும் நாள்.

விடுமுறை முடியும் சமயங்களில், நினைத்து நினைத்து பயந்து வெறுத்துக்  கொண்டிருக்கும் ஒரு நாள்.

கடந்த வருட நோட்டுகளின் எழுதப்படாத பக்கங்கள், கிழிபட்டு  ரஃப்  நோட்டாக உருமாறி பையினுள் ரெடியாக இருக்கும் நாள்.

பழைய யூனிபார்ம் துவைத்து மிகச்சரியாக  அயர்ன் செய்து வைக்கப் பட்டிருக்கும் நாள்.

 


புது வகுப்பில் யார் லீடராவது முதல்,கணக்கு டீச்சராக வருவது யார் என்று மனம் குமைய ஆரம்பிக்கும் நாள்.

எந்த ஆசிரியர்  வந்தாலும் கீறல் விழுந்த ரெக்கார்டாய் சொல்லும் "போன  வருஷம் மாதிரி விளையாட்டுத்தனமாய் இருக்கக்கூடாது". ஒழுங்கா படிக்கணும் என்று சொல்லும் நாள்.

நம்மை விட மோசமாய் படிப்பவன் (!!!) கொண்டு வரும் புது ஜாமென்ட்ரி பாக்சும்,அதை வைத்து அவன் செய்யும் அலம்பல்களை பார்த்து வயிறு எரியும் நாள் .

பாட்டி வீட்டு விடுமுறைக்கால குதூகலக் கொண்டாட்டங்கள் ,அத்தை மகள்கள் மற்றும்  சொந்தங்களுடன் அடித்த கும்மாளங்கள்   அனைத்தையும் ஒரு வாக்கியத்தில் போக்கடித்து விடும் அந்த நாள் ...

"இன்று  பள்ளி மறு திறப்பு நாள் "


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!