Wednesday, January 30, 2013

கேம்லின் பேனாவும், வெள்ளை சட்டையும்.






“கேம்லின் பேனா” இந்த பேனாவுக்கு பள்ளி பருவத்தில் எனக்கு இருந்த ஆசை அளவில்லாதது. நண்பர்களில் பெரும்பாலானோர் “ஹீரோ” பேனா மீது நாட்டம் செலுத்த எனக்கோ முழு ஆசையும் இதன் மீதுதான்.

அப்பாவுடன் வெளியில் செல்லுகையில்  என்ன வேண்டும் என்று கேட்கும் போதெல்லாம் நான் கேட்பது இந்த பேனாதான். சில சமயம் பேனாவும், சில சமயம் திட்டும் கிடைக்கும்.பேனா வாங்கும் ஒவ்வொரு முறையும் இதுதான் கடைசி, இதில்தான் பப்ளிக் எக்ஸாம் எழுத வேண்டும் என்ற தீர்மானங்கள் எல்லாம் அடுத்த மாடல் பேனாவை பார்க்கும் வரையே!!

புது பேனா வாங்கி இங்க் ஊற்றியவுடன் எதாவது சாமி பேரை எழுதி பார்த்துவிட்டு திருப்தியாய் சட்டைப் பையில் வைத்துக் கொள்வதுடன் அடிக்கடி அதை தொட்டுப் பார்த்துக் கொண்டு பள்ளிக்கு செல்வது. பள்ளியில் நண்பர்கள்  அதை வாங்கி எழுதி பார்த்து விட்டு சில சமயங்களில் “முள்ளு கீறுது” என்பார்கள், உடனே அதை மென்மையாக்க டிபன் பாக்ஸின் பின்புறம் வைத்து சர சரவென்று கிறுக்கி அதை சரிப்படுத்துவது. சமயங்களில் இங்க் சரியாக வராத போது ப்ளேடால் அந்த முள்ளில் சிறிதாக கீறி அதை சரியாக்குவது. அப்படியும் சரிவராத பேனாக்களின் நிஃப்பை ப்ளேடால் அழுத்தமாக கோடு போட்டு அதிக இங்க் வர வைப்பது இப்படியாக சில நாட்கள் செல்லும் எங்கள் ஆராய்ச்சி.

அது போல எனது ஒரு புது பேனாவை நண்பனொருவன் நன்றாக கீறி ஆப்பரேஷன் செய்யும் பொழுது, என்னுடைய தலைமை ஆசிரியர் என்னை அழைத்து பேங்குக்கு போயிருந்த இன்னொரு வாத்தியாரிடம் ஒரு செக்கை குடுத்துவிட்டு வருமாறு கூற நானும் வாங்கி அதை சட்டைப் பையில் வைத்து கொண்டு ஆப்பரேஷனில் இருந்த அந்த பேனாவையும் வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு (புதுப் பேனாவாச்சே!!!)

சைக்கிளில் வெகு வேகமாக பேங்குக்கு போயி அந்த வாத்தியாரிடம் தர செக்கை எடுத்தால் இண்டியன் பேங்க் செக் “இங்க் செக்” ஆகி விட்டது.. இதில் நமது வேர்வைத் துளிகள் வேறு… என் வெள்ளை சட்டை பாதி  ஊதா சட்டையாகி விட்டது. பள்ளிக்கு வந்தவுடன் தீபாவளி கொண்டாடி விட்டார் நம்ம தலைமை ஆசிரியர்.அப்புறம் தான் தெரிந்தது அது அவர்களின் சம்பள செக் என்று.

அழாக் குறையாக வகுப்புக்கு வந்த சற்று நேரத்தில் அந்த ஆப்பரேஷன் நண்பன் கேட்டான் “என்னடா இப்போ இங்க் நல்லா வருதான்னு?” கடுப்புடன் நான் சொன்னேன் ம்..ம்.. அடிவாங்கி குடுக்குற அளவுக்கு வருதுன்னு ..

இப்பொழுது பார்க்கர், க்ராஸ் என்று எத்தனையோ விதவிதமான விலை உயர்ந்த பேனா கொண்டு எழுதினாலும், அந்த கேம்லின் பேனா கொண்டு எழுதிய போது இருந்த மகிழ்ச்சியோ ஆர்வமோ இப்போது இல்லை. பழைய நினைவுகள் ஒரு பொக்கிஷம் தான். அது துக்கமோ, சந்தோஷமோ, வலி தந்தவை அனுபவமாகவும், உவப்பானவை மென்மையாய் மயிலிறகைப் போலவும் மனதை வருடிப் போகின்றன இதமாக.

வாழ்க வளமுடன்!!! தமிழ் தந்த புகழுடன்!!!


6 comments:

  1. அந்த பொக்கிஷ நினைவுகள் ஒரு நிமிடம் மனதில் மகிழ்ச்சியாக வந்து விட்டு சென்றன...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

      Delete
  2. Replies
    1. அண்ணே வணக்கம்ணே... :-):-)

      Delete
  3. பள்ளிப்பருவத்தில், பென் மிக முக்கியபாத்திரம் வகிக்கும்..அதன்மீது ஒருகாதலே உண்டாகும்..அதன் கலர், அமைப்பு என்று...அப்புறம் நீங்ககூறும் அத்தனை அப்பரேசனும் உண்டு..கண்ணாடித்துண்டில் உறசி சுமூத்தாக்குவோம்.நீங்கள் கூறிய சம்பள செக்கில் இன்க் கசிந்து...அய்யயோ மிகவும் டஞ்சரான ஒன்றல்லவா.எப்படி சமாளித்தீர்கள்...பள்ளி பருவமும் பயணமும் ஒரு மறக்க இயலா ஒன்றுதான்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..

      Delete