Sunday, December 1, 2013

குருட்டுப் பூனை விட்டத்துல பாய்ஞ்சது!!!

சாயந்திர  டீயை குடிச்சிகிட்டே வழக்கம் போல ஒவ்வொரு  டிவி சேனலா தாவிக்கிட்டு இருக்கும் போதுதான் அந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க நேரிட்டது.

அது கேப்டன் டிவி நியுஸ். சாதாரண நியுஸ் கிடையாது கேப்டன் டெல்லில தேர்தல் பிரச்சாரம் பண்ணுற நியுஸ். படிக்கும் போதே லெப்ட் லெக்கை  சுவத்துல வச்சி, ரைட் லெக்கால நெஞ்சுல மிதிச்ச மாதிரி இருக்குல்ல அப்போ அதை பார்த்த என்னோட நிலைமையை யோசிச்சிக்கிட்டே கீழ படிங்க,

எத்தனை ரவுண்டு போச்சோ தெரியல,கேப்டன் பொளந்து கட்டுறாரு!!!
துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ?

துமாரா கேண்டிடேட் நாம் கியா ஹை ? 

அப்புடின்னு  அவருக்கு தெரிஞ்ச இங்கிலிஷ்ல ஒரு நாப்பது தடவை கேக்குறாரு. என்னடா இதைப் போயி இங்க்லீஷ் ன்னு சொல்றானேன்னு  நீங்க நெனைச்சிங்கன்னா, அப்புடியே கீழ இருக்குற இந்த வீடியோவை பாருங்க ,


              

டெல்லியில் அலைகடலென திரண்டு இருக்கும் மக்கள் வெள்ளத்தில் கேப்டன் அடிக்கடி இங்கிலீஷ் ஹிந்தின்னு பேசி  டங் சிலிப் ஆகி   நம்மள  தெறிக்க விட்டாரு. டரியலாகி அப்புடியே சேனல் சேனலா  தாவி மேல போயிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு கீழ எறங்கி வரும் போது பார்த்தா, அட நம்ம பிரேமலதா அண்ணி கேண்டிடேட் ஜெயிச்சா என்ன பண்ணுவாங்கன்னு  சொல்லிகிட்டு இருந்தாங்க , அது என்னன்னா 

ரோடு போடுவாங்களாம் ,
சாதி சான்றிதழ் வாங்கி தருவாங்களாம் 
ரேசன் கார்டு வாங்கி தருவாங்களாம்.
பிரதமர்கிட்ட பேசுவாங்களாம்.

இத்தனை "களாம்"களுக்கு மத்தியில் ஒரு ஆள் கல்யாண வீட்டு வாசல்ல வச்ச பொம்மை மாதிரி வேன்ல  நின்னு கும்புட்டுக்கிட்டே   சுத்தி, சுத்தி வந்தாரு அவர்தான் நம்ம கேண்டிடேட்டாம்.
ஸ்ஸ்ப்ப்பா கண்ணைக் கட்டிடுச்சு போங்க.  

கேப்டன் நம்மளுக்கு தமிழே தகராறு, எழவு வீட்டுல போய் ஆழ்ந்த நன்றி சொல்ற பார்ட்டிங்க, நம்மளுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? ரெண்டு ரவுண்ட போட்டோமா, நாலு தீவிரவாதிகளைப் புடிச்சோமான்னு, கண்ணு செவக்க நாக்கை துருத்தி எங்கள மாதிரி நிறையப் பேரை என்டர்டெயின் பண்ணுனோமான்னு இல்லாம சின்னப்புள்ள தனமா என்ன என்னவோ செய்றீங்க ??

இதெல்லாம் பார்த்த பிறகு எனக்கு ஒன்னே ஒண்ணுதான் தோணிச்சு கேப்டன் அதுதான் , அதுதான் 
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அதைத்தான் இந்த பதிவுக்கு  தலைப்பா வச்சு தொலைஞ்சிருக்கேன் கேப்டன் :-)


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Wednesday, November 27, 2013

EXPO 2020

இது தோனியோட 20:20 இல்ல துபாயோட 2020.UAE ல் உள்ள அனைவரும் சமீப காலமாக அடிக்கடி சொல்லும் வார்த்தை இந்த 2020 எக்ஸ்போ தான்.

என்ன இந்த எக்ஸ்போ 2020?

ஏழு வருடத்திற்கு அப்புறம் 2020ல் நடக்கவிருக்கும் ஒரு எக்ஸ்சிபிஷன் ட்ரேட்பேரை  குறிப்பதுதான் இந்த எக்ஸ்போ 2020.

ஆறுமாத காலத்திற்கு நடக்கும் இந்த எக்ஸ்போவிற்கு 2.5 கோடி நபர்கள் வருவார்கள் எனவும், 2 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சரி 2020 ல் நடக்கும் விஷயத்திற்கு இப்போ என்ன என்றால், அந்த எக்ஸ்சிபிஷன் நடத்துவதற்கான இடத்தை தேர்ந்தெடுப்பதுதான்   பாரீஸில்  இன்று நடந்து கொண்டிருக்கிறது.பீரோ ஆப்  இன்டர்நேஷனல் எக்ஸ்போசிஷன் (BIE )என்னும் அமைப்பு மற்றும் அதன் உறுப்பு நாடுகள் சேர்ந்துதான்  இதனை  நடத்தும் இடத்தினை தீர்மானிப்பது மற்றும் அதன் தொடர்பான நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதும்.

சிம்பிளாக சொல்வதென்றால் எக்ஸ்போ நடத்த விருப்பமுள்ள நாடுகள், தங்களிடமுள்ள சிறப்பம்சங்களை குறிப்பிட்டு  இதில் கலந்து கொள்ளும். BIE  அமைப்பால்  அவர்களுடைய பொருளாதார தகுதி,தரை மற்றும்  வான்வழி போக்குவரத்து வசதிகள், இதனை நடத்துவற்கான உள்கட்டமைப்பு வசதிகள்  பரிசீலனை செய்யப்படும்.போட்டியில் பங்கு பெரும்  நாடுகளுக்கு சென்று ஆய்வு செய்வது உண்டு.

கடைசி நாளான இன்று   இது குறித்த 20 நிமிட வீடியோ இன்று ஓட்டெடுப்பிற்கு முன்னர் BIE  மெம்பர்களுக்கு திரையிடப்படும் பின்னர்   BIE -ல் உள்ள 163 நாட்டு  மெம்பர்கள் ஓட்டெடுப்பின் மூலம் அந்த நாடு தேர்ந்தெடுக்கப்படும்.

இதனால் என்ன உபயோகம்?

சின்ன மீனை போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம் தான். இதனை நடத்துவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதன் மூலம் அடுத்த 5 வருடங்களுக்கு,
  • அந்நிய முதலீடு பெருமளவில் ஈர்க்கப்படும்.
  • நேரடியாக கட்டுமானம், மற்றும் அதனை சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் .
  •  வங்கிகள் மற்றும் பொதுத்துறைகளில்  தொடர்ச்சியாக வேலை வாய்ப்பு பெரும்.
  • ஹோட்டல், டூரிசம் கணிசமாக வளர்ச்சியடையும்.
  • பொருளாதாரம்,தொழில்நுட்ப வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
(இவை எல்லாவற்றையும் விட கேரளாவுல மிச்சமீதி இருக்கும் நம்ம சேட்டன்கள்  வரவு ரொம்ப ரொம்ப அதிகரிக்கும் )

இந்த ரேசில் ஜெயிக்கத்தான் துபாய் படு மும்முரமாக செயல் படுகிறது. இதனை நடத்துவதன் மூலம் 2009-11 களில் இருந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து முற்றிலுமாக வெளிவர இதனை ஒரு அறிய வாய்ப்பாக துபாய் கருதுகிறது.
இதற்கான போட்டியும் கணிசமாக இருக்கிறது.

ரேசில் இருக்கும் நாடுகள் 
1.துபாய் 
2.துருக்கி 
3.பிரேசில் 
4.ரஷ்யா .

 மொத்தமாக போட்டியிடும் நான்கு நாடுகளில் கடும் சவாலாக இருப்பது துருக்கி என்கிறார்கள். பழைய பாரம்பரியத்தை பின் பற்றி வரும் நாடுகளில் இதுவும் ஒன்று என்பதால் முன்னுரிமை சற்று கூடுதலாக உள்ளது.ஆனால் இவ்வாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சிகளும் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்களும் இதற்கு பெரிய பின்னடைவை கொடுத்திருக்கின்றன.

எல்லா காரணிகளிலும்  அதிக முன்னிலையோடு துபாய் இருப்பது இதற்கான வாய்ப்பை சற்று பிரகாசமாக வைத்துள்ளன. இது நடைபெறும் இடம் குறித்த சில புகைப்படங்கள் ,








இது குறித்த இறுதி முடிவு இன்று இரவு துபாய் நேரப்படி 8.30மணிக்கு பாரீஸில் இருந்து   அறிவிக்கப்படும்.

பார்க்கலாம் பூங்கொத்தா அல்லது  புஸ்வாணமா என்று !!!!

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!



Tuesday, November 5, 2013

பொய்யாய்க் கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா.

அன்பாயிருந்த மகனுக்கு,

ஒரு மழைக்கால ராத்திரியில்தான் நீ பிறந்து என் வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினாய்.என் கைச்சூடு கண்டுகொண்டதால்   என்னவோ பிறந்த சில மாதங்களுக்கு  என்னைத்தவிர யாரிடமும் சென்றதில்லை நீ. ஒருநாளில்  எனக்காக நான் ஒதுக்கிய நேரம் சில  நிமிடங்கள்  மட்டுமே.

மழைக்  காலமாகையால் நீ ஈரமாக்கிய துணிகளை துவைத்து   வெளியில் காய வைக்க இயலாமல் விறகு அடுப்பின் வெம்மையில் உலர்த்தி  தருவார்  உனது அம்மாச்சி.  

"முந்தித்  தவமிருந்து
முன்னூறு நாட்  சுமந்து
அந்திப் பகலாய் இறைவனை வந்தித்து" 

பெற்றெடுத்த உன்னை, உடலால் தோளிலும், மனதால் நெஞ்சிலும் சுமந்து திரிந்தார் உனது தந்தை.உனது மழலைச்  சொல் தான்  எங்கள் வேதமாகியது.நீ இருக்கும் இடம்தான் எங்களுக்கு விருப்பிடமானது.   உலகினை பொறுத்தமட்டிலும் நீ வளர்ந்து கொண்டே இருந்தாய் நானோ சிறுபிள்ளையாகிக் கொண்டிருந்தேன்.

நடைவண்டியோட்டி நீ  நடை பழகிய காலத்தில் கொல்லைப்புற வாசல்  ஓரமாய் இருந்த கல் தடுக்கி  நீ விழுந்து விட்டாய். உனக்கு அடிபட்டு விட்ட ஆதங்கத்தில் உன் தந்தை பெயர்த்து எறிந்த அந்தக் கல்,எல்லைக் கல் ஆனதால்  பங்காளி வீட்டு  பகையாகி காவல் நிலையம் வரை சென்றது தனிக்கதை.

நீ பள்ளி சென்ற முதல் நாளின் வெறுமையை  தாங்க இயலாமல், நாள் முழுவதும் பித்து பிடித்தாற்  போல இருந்தது உனக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை.

எனக்கும் உன் தந்தைக்குமான கருத்து வேறுபாடுகள் மிக சொற்பமே. உன்னால்,  உன் பருவ வயதில் நீ செய்த தவறுகளால்  எனக்கும் உன் தந்தைக்குமான மனஸ்தாபங்கள் ஏராளம்.

நீ உடுத்திய  உடை முதல்  படித்த  கல்லூரி மற்றும் கட்டிய மனைவி  வரை உனது விருப்பமே பிரதானமாக இருந்தது. நீயும் நன்கு படித்து நல்ல நிலைமைக்கு வந்து விட்டாய். மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் உனக்குத்தான் நான் மிகவும் வேண்டாதவளாகிப் போய்விட்டேன். தளர்ந்த உடலும்,  சுருக்கம் விழுந்த முகமுமாக நான்தான்  அந்நியப்பட்டுப் போய்விட்டேன்.

முன்பொரு காலத்தில் முழு வீட்டையுமே ஆக்கிரமித்து இருந்தாய் நீ.  அதில்  எனக்கொரு ஒட்டுத்திண்ணை கூட கிடைக்காதது எனது துரதிர்ஷ்டமே. எனக்கு வசதியாய் இருக்கட்டும் என்று,  என்னைப்போல அனாதைகள் நிரம்ப உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளாய்.

 நன்றாகத்தான் இருக்கிறது மகனே நீ சேர்த்து விட்டிருக்கும் முதியோர் இல்லம்,  என் போன்ற அனாதைகளின் ஏக்கப் பெருமூச்சோடு. எதற்கும் இருக்கட்டும் இந்த அறையையும் முன்பதிவு செய்து கொள். உன் காலத்தில் இதற்கும் வரலாம் இடப்பற்றாக்குறை!!!.  

இப்படிக்கு 
பொய்யாய்க்   கூட கோபிக்க மனம் வராத உன் அம்மா .


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, September 23, 2013

நிக்கோடினா ஒரோல்ஸ்.

1999
காலேஜ் பர்ஸ்ட் இயர்  படிக்கும்(??!!) போது படிக்கிறத தவிர மத்த எல்லாத்தையும்  செய்யுறது.  எங்க பக்கத்து ரூம்ல ஒரு அஜீத் குமார் இருந்தான். அவன் எப்போதும் கண்ணாடிக்கு முன்னாடி நின்னுகிட்டே  வராத மீசையை வா வான்னுட்டு இருப்பான். ஒரு பரு வந்துடுச்சுன்னா  போதும் ரூம் புல்லா கலர் கலரா மருந்து வாங்கி வைச்சிருப்பான்,  நைட்டு படுக்க போறதுக்கு முன்னாடி  மூஞ்சில எதையாவது   அப்பிக்கிட்டு பக்கத்துல இருக்கிறவங்களை பயமுறுத்தி கிட்டு இருப்பான்.

வழக்கம் போல படிக்காம  பேசிக்கிட்டு இருக்கிற "சைலன்ஸ் அவர்ல" அவனைக் கலாய்க்கிறதுக்காக ஒரு ப்ளான் போட்டோம் . நம்மாளுதான் மூஞ்சுக்கு போடுற பவுடர் அல்லது  க்ரீம்ன்னா  உயிரை விடுவானே அதுனால அவனுக்காக ஒரு  பவுடர் தயார் பண்ணினோம், அதோட மூலப் பொருட்கள் என்னன்னா

1.சர்ப்  சோப் பவுடர்
2.பாண்ட்ஸ் பவுடர் (கொஞ்சம் )
3.ப்ளீச்சிங் பவுடர்   (கொஞ்சத்துல கொஞ்சமா)

நல்லா  மிக்ஸ் பண்ணிட்டு,  ஒரு சின்ன டப்பால போட்டு வச்சிட்டோம் . நாங்க பேசிக்கிட்டு இருக்கும் போது  ஒருத்தன் ரொம்ப கேஷுவலா கேக்குற மாதிரி மச்சான் ஜோதி, உங்க மாமா லண்டன்லேருந்து வாங்கி வந்த பேஸ்  வாஷ் நல்ல இருக்குடா அப்படின்னு சொன்ன உடனே,

"மசால் வடையை பார்த்த எலி மாதிரி'' பாஞ்சு வந்து எனக்கு எங்கடான்னு, எனக்கு எங்கடான்னு எக்கோ எபக்ட்டுல கேட்டுட்டு, கூடவே அதோட பேரு என்னடான்னு கேட்க, நாங்கள் திகைக்க  என் நண்பன் ஒருவனோ சட்டென்று வைச்சான் பாருங்க பேரு "நிக்கோடினா  ஒரோல்ஸ் ."

பேரே பாரின் பிகர் மாதிரி இருக்கதால நம்மாளுக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
மச்சான் ரொம்ப காஸ்ட்லியான பவர்புல்  பவுடர் கொஞ்சமா தண்ணில கலந்து போடு, மூஞ்சில  அரிச்சா பவுடர் வேலை செய்யுறதா அர்த்தம்னு சொல்லிட்டு சபையை கலைச்சிட்டோம்.

நம்மாளும் அதை தொடர்ச்சியா நாலஞ்சு நாள்  போட்டு மூஞ்சில வெள்ளை வெள்ளையா சொறி வந்ததுதான் மிச்சம். மூஞ்சை சொறிஞ்சது சகிக்காம நண்பன் ஒருத்தன் "நிக்கோடினா  ஒரோல்ஸ்" சோட பார்முலாவை நம்ம அஜித்குமார்கிட்ட சொல்ல, அப்புறம் கேப்டன் விசயகாந்த் ரேஞ்சுக்கு கண்ணு செவக்க  செவக்க  "செந்தமிழ்" ல ஒரு அரைமணி நேரம் சிறப்பு வகுப்பு எடுத்தான் எங்களுக்கு .

2013
இப்போ அந்த அஜித்குமார் யு. எஸ் ல இருக்கான்.  கொஞ்ச நாளைக்கு முன்பு பேசியவன் ஊருக்கு போறப்போ ட்ரான்ஸிட்  துபாய் வர்றதாகவும் , கண்டிப்பா மீட் பண்ணுவோம்னு சொல்லிட்டு   வர்றப்போ   என்னடா வேணும்ன்னு   கேட்க,  யு .கேன்னா கிடைக்கும் மச்சான் ஆனா  யு. எஸ் ல கிடைக்குமான்னு தெரியலயேன்னு  சொல்ல அப்படி என்னடா இங்க கிடைக்காததுன்னு  கேட்க, நானோ "நிக்கோடினா  ஒரோல்ஸ் " ன்னு சொல்ல, டமார்ன்னு ஒரு சத்தம் கேட்டுச்சு அது அவனோட மொபைலா இருக்குமோன்னு தோணுது!!! உங்களுக்கு என்ன  தோணுது ??



வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!

Thursday, September 5, 2013

ஆ "சிறந்தோர்" தினம்.

"டேய் மொட்டை நீ வந்து வாசி" .

போர்டில் டீச்சர் எழுதி போட்டிருப்பதை   வாசிக்க வேண்டும்.தவறாய் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லுக்கும் டீச்சருக்கு வாகாய்  இருக்கும்  இடத்தில் தலையிலோ, பின்பக்கத்திலோ  அடி விழும்.

"ஜ"வுக்கும்   " ஐ "க்கும் வித்தியாசம் தெரியாமல் தவறுதலாய் வாசிக்க, டீச்சரிடம்  இருந்த பிரம்புதான்  அந்த வித்தியாசத்தை உணர்த்தியது.
ஒரு நாள்  நீரில் மிதக்கும் பொருள்களை சொல்லுமாறு வகுப்பில் பொதுவாய் கேட்க நான் "கரித்துண்டு" என்று பட் டென்று சொல்லி வாங்கிய "முதல் கைத்தட்டலுடன்" ஆரம்பமானது எனது பள்ளிப்படிப்பு.

சராசரி மாணவனாக இருந்த என்னை  நன்கு படிக்கும் மாணவனாக  மாற்றியது அந்த மூணாப்பு  டீச்சரின் அன்பும் வழிகாட்டுதலும் தான்.

அதன்பின் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு விதமான வழிகாட்டுதல்கள். ஐந்தாம் வகுப்பில் நடந்த க்விஸ் ப்ரோகிராமில் ஜெயித்தது.ஆறாம்  வகுப்பில் நடந்த  க்விஸ் ப்ரோகிராமில்  ஜோனல் லெவலில் முதல் பரிசு பெற்றது. இப்படி நிறைய ..
ஏழாம்  வகுப்பில்  தேசியப்பறவை வரைந்து அதனடியில் ஒரு கவிதை கட்டாயம் எழுதவேண்டும் என டீச்சர்  சொல்ல,எனக்குள்ள ஒரு கவிஞன் பார்ம் ஆனது அப்போதுதான்,

பெண் கூந்தல்  போன்ற 
தோகை உடைய மயிலே 
நீ 
அடைபட்டது  கூண்டிலே அல்ல 
எனது மனச் சிறையிலே!!

என்று எழுதி பாராட்டப் பெற்றது, என பள்ளிப்பருவத்தின்  ஒவ்வொரு நிகழ்வும் எனக்கு எதையோ  கற்றுத்தந்து என்னை செம்மைப்படுத்தியவைதான்.

நடை பழகும் குழந்தைக்கு  விரல் பிடித்து நடக்க கற்றுத்தரும் ஒரு அன்னை போல் அனைத்தையும் கற்றுத்தந்து, கூடவே
"கற்றது கைம்மண்ணளவு கல்லாதது  உலகளவு" என்பதையும் சொல்லித்தந்து, அனுதினமும் கற்றல் நிகழ்ந்து கொண்டிருப்பதை உணர வைத்த எனது ஆசிரியப் பெருமக்களுக்கு "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் "

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

டிஸ்கி :  இது கவிதையா என்று யாரும் கல்லெடுக்க வேண்டாம் ... அவ்வப்போது எனக்குள் வீறு கொண்டு எழும் கவிஞனை, பதிவுலகத்தின் நன்மை கருதி அண்ணன் "வெளங்காதவன்" கமெண்டை  காட்டி கட்டிப் போட்டுள்ளேன் .ஹிஹிஹி....     

Tuesday, July 30, 2013

கொல்லைப்புற கிணற்றடியும் பவள மல்லி மரத்தடியும்..

எத்தனையோ  முறை உன்னைக் கடந்து வந்திருப்பேன் அவசரமாகவோ, இல்லை கண்டும் காணாமலோ. ஆனால்  நான் வெறுமையை உணரும் போதெல்லாம் "தாய் மடி கண்ட சேய்" போல  தஞ்சமடையும் இடம் கொல்லைப்புறத்தில் உள்ள இந்த கிணற்றடியும், அந்த பவள மல்லி மரத்தடியும் தான்.

எப்போதிருந்து ஆரம்பித்தது இந்த சினேகிதமான  நெருக்கம்? பால்யத்தில் விளையாட ஒருவருமின்றி தனித்திருந்த சில பொழுதுகளை வாஞ்சையுடன்   அரவணைத்த போதா? இல்லை அம்மா துணி துவைக்க தண்ணீர் சேந்தி தரும் பொழுதுகளில், கிடைக்கும் இடைவெளியில் ஈரக்   கைகளுடன் அங்கு சிதறிக்கிடக்கும் பவளமல்லி மலர்களை சேகரித்து அதன் வாசனையை ஆழமாய் சுவாசித்து நுரையீரல்களில் நிரப்பிய தருணத்திலா?



அல்லது ,
சற்றே பெரியதாய், உயரமாய் அமைந்த துணி துவைக்கும் கல்லின் மேல் படுத்தவாறே சிதறிக்கிடக்கும் நட்சத்திர கூட்டங்களை ஆச்சர்யமாய் எண்ணிக்கொண்டிருந்த போதா?

அல்லது,
வீட்டில் சண்டையிட்டு கோபித்த இரவுகளின் நீட்சியாய் பசியுடனும், கண்ணீர்க் கரையோடிய கன்னங்களுடனும்  கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்த அந்தப் பொழுதிலா?

அல்லது,
வானம் வெளித்த மழை நாளில், கதிரவன் தன் பொன்மஞ்சள் கதிர்களை கலைந்தோடும் முகில்களுக்கிடையே சிதறடித்துக் கொண்டிருந்த மாலையொன்றில், மழைமுத்தை மடியில் ஏந்தியவாறு பச்சைப் புல்வெளிப் பரப்பில் சிதறிக்கிடந்த  பவளமல்லி மலர்களும், கொல்லைப்புறத்தையே தன் வாசனையால்  நிரப்பி வைத்திருந்த, மொட்டவிழ்ந்த சந்தன முல்லை மலர்களுமாய் காட்சியளித்தபோதா?

சரியாய்த் தெரியவில்லை எனக்கு. இருக்கலாம் இவற்றில் எதாவதொரு பொழுதிலோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்து என்னை ரசவாதம் செய்த ஒரு கலவையான பொழுதிலோ, என் மனதை முற்றிலுமாக  ஆக்கிரமித்திருக்கலாம், இந்த கொல்லைப்புற கிணற்றடியும் அந்த பவள மல்லி  மரத்தடியும்.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன்!!!








Monday, July 22, 2013

சலாலா போகலாம் வாரீகளா !!!!

                                                         கல்லூரி நாட்களுக்கு அப்புறமா எத்தனையோ டூர் வடிவேலு ரேஞ்சுக்கு ப்ளான்  பண்ணி, ஆபரேஷன் "டி"ன்னு பேரெல்லாம்  வச்சி, கடைசியா  பவர் ஸ்டார் படம் மாதிரி ப்ளாப் ஆகிடும்.

போன ரம்ஜான் லீவுக்கு  எல்லாரும் சலாலா   போகலாம்னு  ஒருமனதா முடிவு பண்ணி ரெண்டு கார்ல, மூணு  ட்ரைவரோட, நாலு நாள்  பயணமா, அஞ்சு பேரு ஒரு காருக்குன்னு மொத்தமா  பத்து  பேர் ஒரு சுபயோக சுபதினத்தில் கிளம்பிட்டோம்.

கொஞ்சம் ஓமன் கரன்சி கொஞ்சம் மாத்திக்கலாம்ன்னு எக்சேஞ்சுக்கு போயி ஒரு 500 ஓமன் ரியால்(நம்ம ரூபாய்  70,000)  மாத்திக்கிட்டு  இருக்கும் போது         "காறித் துப்பினா காக்காசு பெறமாட்டான்னு" சொலவடைக்கு மிகப்பொருத்தமான  சுடிதார் போட்ட பாகிஸ்தானி ஒருத்தன், அவனை சுற்றி அவனுக்கே  உண்டான பாதுகாப்பு வளையத்துடன்(!!!) அவனும்  ஓமன் ரியால்  மாற்றிக்கொண்டிருந்தான். அவன் மாற்றியது எவ்வளவு தெரியுமா மக்களே ? 6000 ஓமன் ரியால்!!!. நம்மூரு மதிப்புக்கு கிட்டத்தட்ட 9 லட்சம் . என்னோட வாயில போன ஈயை துப்பிட்டு, என்னோட  சில்லறைய   வாங்கிகிட்டு  நின்ன இடம் தெரியாம கிளம்பி வந்துட்டேன்.

கூட வர்ற யாரும் முன்னபின்ன   அங்க போனதில்லை. நம்ம கூகுளாண்டவர் துணையோட ரூட் மேப்பை , லேண்ட்மார்க் போட்டோவோட  ஸ்பைரல் பைண்டிங் போட்டு  ரெடி பண்ணிட்டாரு நண்பர் ஒருத்தர். இந்த பெர்பக்க்ஷனை வேலையில  காட்டி இருந்தார்ன்னு வைங்க, "வெரிகுட்"ன்னுருப்பான் வெள்ளைக்காரன். ஏன்னா  அவரு பாஸ் ஒரு வெள்ளைக்காரன் !!!! ஹிஹிஹி  ...

கைப்புள்ளைங்களோட   ப்ளான்  இதுதான் ,

1.அபுதாபி(abudhabi  ) to  அல் அய்ன் பார்டர் கேட் (Al Ain barder  )-150 km
2.அல் அய்ன் (Al Ain) to  இப்ரி(Ibri  ) -125 km
3. இப்ரி(Ibri) டு ரோடு 29 -31 சந்திப்பு -213 km
4.ரோடு 29 -31 சந்திப்பு டு ஹைமா(haimah)-229 km
5. ஹைமா(Haimah) டு முஸ்கின் (Mushkin)-223 km
6. முஸ்கின்(Mushkin) டு  தும்ரைத் (Thumrait)-188 km
7. தும்ரைத்(Thumrait) டு சலலாஹ்(Salalah) -82 km


அத்து வானத்துல பறக்குற ஹெலிகாப்டருக்கே எழுமிச்சம்பழத்தை முன்னாடி கட்டி, சந்தனம் குங்குமம் வைக்கிற ஆளுங்க  நாம, காருக்கு விட்டுடுவோமா என்ன, அதுவும் லாங் ரூட் வேற , கற்பூரம் காட்டி ,சாமி எல்லாம் கும்பிட்டு  எலுமிச்சம் பழத்தை எல்லாம் வைச்சு நசுக்கிட்டு கிளம்பியாச்சு.

ரம்ஜான் மாசம்  வேறயா, வழியில சாப்பிட ஏதும் கிடைக்காதுங்கிறதால வடிவேலு சொல்றமாதிரி  "எவ்வளவு  முடியுமோ அவ்வளவு " ஸ்நாக்ஸும், பழங்களும்  வாங்கி வண்டிய நிரப்பியாச்சு.

போற யாருக்கும் வழியும் தெரியாது, அரபியும் தெரியாது. சமந்தா  மேல பாரத்த போட்டுட்டு  விட்றா  சம்முவம் போவட்டும்ன்னு  கிளம்பிட்டோம்.

எங்களுக்கு முதல் சோதனை அல் அய்ன் பார்டர் கேட்டுல ஆரம்பிச்சது விசா வடிவுல...
                                                                                                       இன்னும் போவோம் ....

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!

Sunday, July 7, 2013

மரணித்து விட்டதா மனிதம்???

சமீபத்தில் எக்ஸ்ப்ரெஸ் அவென்யு வில்  நிகழ்ந்த தற்கொலை காணொளியை பார்க்க  நேரிட்டது. சண்முகம் என்ற இளைஞர்  மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்தார்.  சுயநலம் பிடித்த மால் நிர்வாகம் அதை செய்து முடித்து விட்டது .  

என்னதொரு கொடூரம். கீழே  விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் மனிதனை காப்பாற்ற முயற்சி செய்யாமல் வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது ?

இதுவே தனது மாமனோ அல்லது மச்சானாகவோ இருந்தால் இதுதான் அவர்களின் நிலைப்பாடாக இருந்திருக்குமா ?? மனசாட்சி உள்ளவர்கள் சிலர் சேர்ந்து சிகிச்சை அளிக்க எடுத்துச் செல்ல வற்புறுத்தியும் ,பார்மாலிட்டிஸ்   என்று கூறி மறுத்துவிட்டதாம் மால் நிர்வாகம், குறைந்த பட்ச முதலுதவியைக்கூட செய்ய வில்லை நிர்வாகம்.

ஆம்பூலன்ஸ் மற்றும் கடமை தவறாத காவல்துறை வந்து  உயிரற்ற சடலத்தை எடுத்து சென்றார்களாம் சிகிச்சைக்கு !!!!

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் "  என்ற வள்ளலார் பிறந்த மண் இது .. ஆனால் நாம் தான்  ஒரு மனித உயிர்  துள்ளத் துடிக்கப்  போராடும் போது  கவைக்குதவாத சட்டத்தையும் பார்மாலிட்டிஸ் பற்றி பேசி ஒரு மனித உயிரை கொன்று விட்டோம். 

இன்னும் சிலரோ ஏன் திமிரெடுத்து தற்கொலை செய்து கொண்டான் என்கின்றனர். வாழ்க்கையை லாவகமாக  வளைத்தோ  அல்லது வளைந்தோ   வாழும்  கலை எல்லோருக்கும் வருவது இல்லை. கணப்பொழுது தடுமாற்றம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது என்ன செய்வது ??

அற்ப விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத சமூகத்தை தான் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். பணம் காய்க்கும்  இயந்திரங்களாகத்தான் நாம் அடுத்த தலைமுறையை உருவாக்கி வருகிறோமே  தவிர வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவித்து  வாழ  கற்றுத்தரவோ, கற்றுத்கொள்ளவோ விரும்புவதில்லை நாம் என்பதே நிதர்சனம்  .

ஒளி படைத்த கண்ணும், உறுதி கொண்ட நெஞ்சுமாய் அடுத்த தலைமுறையை உருவாக்கும்  உறுதியோடு உங்களில் ஒருவன்.


வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!!










Thursday, July 4, 2013

420 ஏர்டிக்கெட்டும், அடிபொலி அக்கௌன்டன்ட்டும்!!

என்னோட நண்பன் ஒரு மன்னாரன்   கம்பெனில வேலை பார்த்துட்டு இருந்தான்  (பின்னே நம்மளோட  ப்ரண்டு மலேசியா கம்பெனிலையா   வேல பார்ப்பான்) அப்படி ஒரு டுபாக்கூர் கம்பெனி அது. எப்படின்னா,

வெக்கேஷன்ல ஊருக்கு போயிருக்கவனுக்கெல்லாம் சம்பளம் போட்டு இருப்பானுங்க. இங்க வேல பார்க்குறவனுக்கு சம்பளம் போட்டு இருக்க மாட்டாங்க  கேட்டா , 

ஓ, நீ  நாட்டிலேருந்து திறுச்சி வந்தோ ?? எப்போ ? 
அப்படின்னு கேட்டு நம்மளை கொலைகாரன் ஆக்கப் பார்ப்பாங்க. 

நாமளும், திருச்சியும் வரல்ல, திண்டிவனமும் வரல்ல நான்தான் துபாய் வந்தேன்னு  சொல்லி கதறி  நம்மளோட சம்பளத்தை கேட்டா, 

இன்னும் டைம் ஷீட் வந்திட்டில்லை பாய் அப்படிப்பாங்க!!!!

"டேய் நாங்க வேலை பார்க்குறோமோ  இல்லையோ டைம் ஷீட்டை   சரியா அனுப்பிடுவோமேடான்னு" சொல்லிட்டு
கொஞ்சம் ட்ரேஸ் பண்ணினா, அந்த பேப்பரை கீழ விரிச்சி சாப்பாடு சாப்பிட்டு இருப்பான் அந்த புண்ணியவான்.
மொத்தத்துல  சம்பளம் வாங்குறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிடும்.

இப்படியெல்லாம் நன்கு  அனுபவப்பட்ட  நம்மாளு, ஒருமுறை ஊருக்கு போக   ஒருவாரம் மட்டுமே  அனுமதி கிடைக்க, சொன்ன தேதிக்கு திரும்பி வர்ற  ப்ரூப்புக்கு டூ வே  டிக்கெட்டையும் குடுக்கச் சொல்லிட்டாரு அவனோட டேமேஜர் ,  

லீவை எக்ஸ்டென்ட் பண்ற ஐடியால இருந்த நம்மாளு  ஒன் வே டிக்கெட்டை    டூ வே டிக்கெட்டா  வோர்டுல மாத்தி அவனோட டேமேஜர்கிட்ட கையெழுத்தை  வாங்கி   அக்கவுன்ட்ஸ்  க்ளைமுக்கு  அனுப்பிச்சுட்டான்.

எங்கே குட்டு வெளியாயிருமோன்னு கொஞ்சம் டென்ஷன்ல நம்மாளு  இருக்கும் போது,  அடுத்த நாள் சைட்ல அவனோட நண்பன் ஒருத்தன் வந்து அக்கவுன்ட்ஸ்லேருந்து போன்  பண்ணாங்க, உனக்கு  சிக்னல் கிடைக்கலயாம் (பேஸ்மென்ட் ல  சிலநேரம் சிக்னல் கிடைக்காது )  ஏர் டிக்கெட் சம்மந்தமா ஏதோ பேசணுமாம்  உன்னைய உடனே போன்  பண்ண சொன்னாங்கன்னு சொல்ல,  

அவ்வளவுதான்.தெறிச்சிட்டான் நம்மாளு.ரொம்ப கலவரத்தோட அக்கவுண்டண்டுக்கு  போன் பண்ண, 

அவரோ, சாரே  நிண்ட ஏர் டிக்கெட்டுல வல்லிய தட்டாயி (உன்னோட ஏர்  டிக்கெட்ல பெரிய தப்பு நடந்து போச்சி )  , ரிடர்ன் டிக்கெட்டுல  அதே பிளைட்  நம்பர் ,துபாய் டு திருச்சின்னு இருக்கு அப்படின்னாரே  பார்க்கலாம். நண்பனும்  மிக சாமர்த்தியமாக பாருங்க சார் எவ்வளோ பொறுப்பில்லாம ட்ராவல் ஏஜென்சி இப்படி  தப்பு பண்ணிட்டான்  சொல்லி  எஸ்கேப் ஆயிட்டான்.

நடந்தது இதுதான், வேர்டுல காப்பி  பேஸ்ட் பண்ண நம்மாளு திரும்பி வர்ற பிளைட்  நம்பர், ஊரை  எடிட் பண்ண மறந்துட்டான் . ஆனாலும் அந்த அடிபொலி அக்கௌவுண்டன்ட்  இப்பவும் எங்களுக்கு ஊறுகாய் தான்.

வாழ்க வளமுடன் தமிழ் தந்த புகழுடன் !!! 

















Monday, June 10, 2013

வாழ்வில் வரக்கூடாத நாள் .

மனதிற்குள்  அழுகை ,பயம், வெறுப்பு மற்றும் இன்ன பிற உணர்ச்சிகளும் கலந்து கட்டி அடித்துக் கொண்டிருக்கும் நாள்.

விடுமுறை முடியும் சமயங்களில், நினைத்து நினைத்து பயந்து வெறுத்துக்  கொண்டிருக்கும் ஒரு நாள்.

கடந்த வருட நோட்டுகளின் எழுதப்படாத பக்கங்கள், கிழிபட்டு  ரஃப்  நோட்டாக உருமாறி பையினுள் ரெடியாக இருக்கும் நாள்.

பழைய யூனிபார்ம் துவைத்து மிகச்சரியாக  அயர்ன் செய்து வைக்கப் பட்டிருக்கும் நாள்.

 


புது வகுப்பில் யார் லீடராவது முதல்,கணக்கு டீச்சராக வருவது யார் என்று மனம் குமைய ஆரம்பிக்கும் நாள்.

எந்த ஆசிரியர்  வந்தாலும் கீறல் விழுந்த ரெக்கார்டாய் சொல்லும் "போன  வருஷம் மாதிரி விளையாட்டுத்தனமாய் இருக்கக்கூடாது". ஒழுங்கா படிக்கணும் என்று சொல்லும் நாள்.

நம்மை விட மோசமாய் படிப்பவன் (!!!) கொண்டு வரும் புது ஜாமென்ட்ரி பாக்சும்,அதை வைத்து அவன் செய்யும் அலம்பல்களை பார்த்து வயிறு எரியும் நாள் .

பாட்டி வீட்டு விடுமுறைக்கால குதூகலக் கொண்டாட்டங்கள் ,அத்தை மகள்கள் மற்றும்  சொந்தங்களுடன் அடித்த கும்மாளங்கள்   அனைத்தையும் ஒரு வாக்கியத்தில் போக்கடித்து விடும் அந்த நாள் ...

"இன்று  பள்ளி மறு திறப்பு நாள் "


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!





Sunday, May 19, 2013

மனதைப் பிசையும் சில விடை தெரியா கேள்விகள்!!


குல்மொஹர் மரம். பூக்கும்  பருவத்தில் இலை  எல்லாவற்றையும் உதிர்த்து விட்டு வெறும் பூக்களுடன் மட்டுமே தனக்கான  சகவாசம் என்பதாய் நினைத்துக் கொண்டு இருக்குமே அந்த மரம்தான். அந்த பூக்கள் பூப்பது, பின்  நிறம் மாறுவது  எல்லாமே அழகுதான். முதலில் அடர் சிவப்பாய் கூடவே பச்சையான சில மொட்டுகளுடன், பின் அந்த மொட்டுகளும் பூவாகி,  பின் மெல்ல நிறமிழந்து ஆரஞ்சு சிவப்பாய் கடைசியில் மஞ்சளாய், பிறகு வெளிர் மஞ்சளாய் மாறுவது வெகு அழகு.

எனது அலுவலகத்தின் முன் உள்ள சாலையில் இந்த மரங்கள் வரிசையாக நடப்பட்டு இருக்கும். பூத்து இருக்கும் அவற்றை ரசிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று .

ஐம்பதுகளின் ஆரம்பத்தில் இருப்பார் அந்த ஓட்டுனர். யாரையோ  இறக்கி விட்டுவிட்டு அவர்களின் வருகைக்காக வண்டியிலேயே காத்துக் கொண்டிருந்தார் ஒரு குல்மொஹர்  மர  நிழலின் கீழ். வெகுநேரம் காத்துக் கொண்டிருப்பார் போல, அவ்வப்போது கீழிறங்குவதும், அலைபேசியில் பேசுவதுமாக இருந்தார்.

சட்டென்று வந்து நின்றது துபாயின் போலிஸ் வாகனம். வரிசையாக அங்கு சாலையை ஒட்டி நிறுத்தி இருந்த வாகனங்களுக்கு அபராதம் எழுதியவர். தொடர்ச்சியாய் இந்த வண்டிக்கும் எழுத, பதறிப்போன அந்த பெரியவர் கீழிறங்கி அந்த போலீசிடம் மன்றாட, எதையும் பொருட்படுத்தாத  அந்த போலிஸ், அபராதம் எழுதி நீட்ட, சட்டென்று அந்த பெரியவர் அந்த போலிஸின் காலில் விழுந்து விட்டார்.

சகலமும் ஆடிப் போய்விட்டது எனக்கு. அதுவரை சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, மனதில் பெரிய பாராங்கல்லை வைத்தது  போலாகிவிட்டது. என் தந்தை வயதிருக்கலாம் அவருக்கு . 
பிழைப்புக்கு வழி தேடி வந்த வெளிநாட்டில், தன்மானத்தை விட்டு தன் மகன் வயதே உடைய ஒருவரிடம், காலில் விழ வேண்டிய நிர்பந்தம் என்னவாயிருக்கும்?   எது அவ்வாறு  செய்யத்தூண்டி  இருக்கும்? அந்த நாளின் இரவுப் பொழுது எவ்வாறு இருந்திருக்கும் அவருக்கு? இது போன்ற விடை தெரியாக்  கேள்விகள் மனதை பிசைந்து  கொண்டே இருந்தன.

இருக்கலாம் கல்யாண வயதில் உள்ள மகளுக்கு சேர்க்க வேண்டிய பணமாகவோ  , இல்லை அவர்களது கல்விக் கட்டணமாகவோ , இல்லை குடும்பத்தின் மருத்துவ செலவாகவோ, இல்லையேல் அந்த குடும்பத்தின் உணவாகவோ மாற  இருந்திருக்கலாம் அந்த பணம்.

நன்றாகத்தான் போகிறது வாழ்கை. மனதை பிசையும் சில  விடை தெரியா  கேள்விகள் தோன்றாத வரை. 

அழகாய் பூத்ததுதான் இருக்கிறது அந்த குல்மொஹர் மரம். ஆனால் எனக்குத்தான் ரசிக்க மனமில்லை.

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!










  

Tuesday, May 7, 2013

படிப்பது ஒரு பாவச்செயலா ??

பள்ளிக்கூடத்துல நல்ல விஷயம் எதுலயும் நம்ம பேர் வந்ததா வரலாறு,புவியியல் எதுவும் கிடையாது. நம்மளுக்கு சீனியரா ஒரு அண்ணன் இருந்தார். சீனியர்ன்னா ஒவ்வொரு வகுப்பிலும் ரெண்டு வருசமா படிச்சு அஸ்திவாரத்தை ரொம்ப பலமா போட்டுகிட்டு இருந்தார். அவருக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை "படிப்பு "

அண்ணன் படிப்பைத் தவிர மற்ற விஷயத்துல ரொம்ப கெட்டி. எந்த வாத்தியார்  இன்னைக்கு லீவுங்கிறதுல ஆரம்பிச்சு, என்னைக்கு   சத்துணவுல முட்டை போடுறாங்க  வரைக்கும்  அத்துபடி.

எங்களோட அறிவியல் வாத்தியார்  யாரையாவது ஒருத்தனை வாசிக்கச் சொல்லிட்டு நல்ல தூங்கி  பொழுதை போக்குவார். அந்த மாதிரி சமயங்களில் நம்ம அண்ணன் தான் கைகால் புடிச்சு விடுவார். குருபக்தின்னா அப்புடி ஒரு குருபக்தி ஹி ஹி .

தூக்கம் வராத நேரத்துல  அவர்  வகுப்பும் எடுப்பார் . இடையில ஏதாவது பேசினா,சேட்டை செய்தா அடி வெளுத்து விட்டுடுவார். பள்ளிக்கூடமே அவருக்கு பயப்படும்.ஒருநாள் வகுப்புக்கு வந்த அவர் நம்ம அண்ணனை பார்த்து, புத்தகத்தை எடுத்து வாசிக்க சொல்ல, அவன் அங்கும் இங்குமா புத்தகத்தை தேட, புத்தகம் எடுத்துட்டு வரலைன்னு அடி பிரிச்சுட்டாரு.

 அடுத்த நாள் வகுப்புக்கு வந்தவர், என்னடா இன்னைக்கு புத்தகம் கொண்டு வந்தியான்னு கேட்டுட்டு, அவனிடமிருந்தே  புத்தகத்தை வாங்கி வகுப்பெடுக்க, திடீரென சாமி வந்தவர் போல ஆவேசம் கொண்டு நம்ம அண்ணனை அடி வெளு வெளுன்னு வெளுத்துட்டார். அதுமட்டுமில்லாமல் ஸ்டாப் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டு ஒரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லி  ரெண்டு மூணு வாத்தியார்கிட்ட கூடுதலா அடி கொடுத்து  அனுப்பி வைச்சாரு.

 கண்ணீர்க் கரையோட அழுதுகிட்டே வந்தவனிடம் என்னாச்சு ? எதுக்கு உன்னைய அடிச்சாங்கன்னு கேட்டதுக்கு,  அவன்  புத்தகத்தோட கடைசி பக்க  அட்டையை காமிச்சான். அதுல  இப்படி  திருத்தம் பண்ணி   வைச்சிருந்தான் பாவிப்பய..

 படிப்பது
தீண்டாமை ஒரு பாவச் செயல்.
பள்ளிசெல்வது
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்.
 பரீட்சை வைப்பது
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்.
 


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் ..






Sunday, April 21, 2013

பசுமை நிறைந்த பால்யம் - 4

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் - 1
பசுமை நிறைந்த பால்யம் -2
பசுமை நிறைந்த பால்யம் -3 

பால்யத்தின்   விடியற்காலைப் பொழுதுகள்  சுகமானவை . அதிலும் விடுமுறை நாளின்  காலைப்பொழுதுகள்  எந்தவித நெருக்கடிகளும் இல்லாதவை. புத்தகத்தை விரித்து வைத்தவாறே படிப்பதாய் பாவனை செய்யும்  காலைப் பொழுதுகளும், அதிலிருந்து தப்பிப்பதற்கென்றே அமைந்து விடும்  வேலைகளும்,   சில நாட்களில்  நெல் அவிப்பதும்,  அதற்கான  ஆயத்தங்களும், அவித்த நெல்லை வாசலில் கொட்டும் போது வெளிவரும் நெல்மனமும்,  குவியலாக கொட்டி காலால் பரவலாக்கப்பட்ட விதங்களும்,  காய்ந்து கொண்டிருக்கும் நெல்லை அடிக்கடி பதம்  பார்த்துகொண்டிருக்கும் ஆயாவும், விளையாட செல்கையில்  எதிர்பாராமல் காய்ந்து கொண்டிருக்கும் நெல்லுக்கு  காக்கா  விரட்ட காவலாக ஆக்கபடுவதும் அதனை தவிர்க்க போராடுவதும்,   இப்போது நினைத்தாலும் அவ்வளவு பிடித்தமானதாக இருக்கிறது.

வெயில் பொழுதுகள் மிகவும் பிடித்தமானவை. வெளியில் சென்று விளையாடுவதற்கு எந்தவிதமான நிர்பந்தத்தையும்  தராதவை. உக்கிரமான வெயிலில் தெரு முழுவதும்  அலைந்து  திரிந்து விளையாடுவதும், வேர்த்து வழியும் உடம்பும், காலில் அப்பியுள்ள தெருப்புழுதியும்,    தாகமெடுத்த போது உடல் முழுவதும் வழிந்தோடுமாறு குடித்த தண்ணியும், களைத்த பொழுதுகளில் கூட விளையாடிய நண்பர்களுடன்    ஓய்வெடுக்கும் பெரிய  வேப்பமரத்து   நிழலும், தண்ணென்று வீசும் மெல்லிய காற்றின் குளிர்ச்சியும், தற்காலத்து எந்த காரணியாலும்  ஈடுகட்ட இயலாதவை.

பண்டிகை கால வீடு திரும்பல்கள் தித்திப்பானவை. எத்தனை நாள் விடுமுறையாயிருக்கும் என்று திரும்ப திரும்ப பார்க்கும் மாத  காலண்டரும், அடையாளமாய் மடித்து வைத்த தினசரி காலண்டரும், நண்பர்களுடனான பேச்சுகளே அந்தந்த பண்டிகை கொண்டாட்டத்திற்கு நிகரானவை. 

பொங்கலின் போது கரும்பு கடைகளுக்கு வருமுன்னே எங்களின் பேச்சு மூலம் அனைத்தும் சக்கையாக்கப் பட்டிருக்கும்.
தீபாவளின் போது  வெடிக்கும் வெடிகளை விட அதிக சந்தோஷத்தை தருபவை  அதை பற்றிய எங்களின்  பேச்சுகள். சற்றே மிகைப்படுத்தப்பட்ட பேச்சாயினும் அத்தனையையும் ரசிக்க வைத்த பண்டிகை கொண்டாட்டங்கள்.
                                               
இவை அனைத்துமே இப்பொழுதும் கிடைப்பவைதான், ஆனால்  நமது சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவற்றை   எல்லாம் ரசிக்கும் மனநிலையை விட்டு  வெகு தூரத்திற்கு நம்மை கொண்டு வந்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத நிஜம்.

நிஜத்தை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் போலி பிம்பத்துடன் இயைந்து இயல்பாய் இருக்கவும் இயலாமல் ஊசலாடி கொண்டிருக்கிறது எனது  பால்யம் குறித்த நினைவுகள். இந்த நினைவுகளின் மீட்சிதான் இன்னும் என்னை உயிர்ப்புடன் இயக்கிக் கொண்டிருக்கிறது.
நன்றாய்  இயக்கட்டும்  மீட்சிகளின் ஆளுமை ...

                                                                                                     பால்யம் மலரும் ...

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


Wednesday, April 3, 2013

ப்ளஸ் டூ பொண்ணு . !!!

   தலையை துவட்டியவாறே குளியலறையில் இருந்து வெளிப்பட்டான் ரஞ்சன், 27 வயது  இளைஞன். பார்த்தவுடன் பிடித்து போகும் முகம் , நல்ல  உயரமும் அதற்கேற்ற உடம்புமாய்  இருந்தான். சாப்ட்வேர் கம்பெனியில் லண்டனில் இரண்டு வருடமாய் குப்பை கொட்டிவிட்டு அம்மாவின் வற்புறுத்தலால் தற்போது சென்னைவாசி

 இன்றைக்கு  அம்மாவிற்கு  ஆர்த்தோ டாக்டரிடம்  மூட்டு வலிக்கான அப்பாயின்மென்ட்  என்பது திடும்மென நினைவுக்கு வர , அவசர அவசரமாக கிளம்பத் தொடங்கினான். ப்ருட்டை உடலில் விசிறி விட்டு, டி சர்ட் , ஜீனுக்கு தாவி, தலைவாரியபடியே வெளியே வந்தான்.

படிக்கட்டில் இறங்கி வரும்  மகனை  சற்றே பெருமிதமாய்  பார்த்த பூங்கோதை, தட்டில் இட்லியும் அவனுக்கு பிடித்த கொத்தமல்லி சட்னியை வைத்து நீட்ட , அவரசமாய் சாப்பிட ஆரம்பித்தவன்,  

அம்மா ஏதோ சொல்ல வருவது போல தோன்ற, சிரிப்புடன் என்னம்மா என்றான்தரகர் வந்துட்டு போனார், மூணு  ஜாதகம் நல்ல பொருத்தமா இருக்காம் நீ சரின்னு சொன்னா  பார்க்கலாம்.

கொஞ்ச நாள் போகட்டும்  என்று பொதுவாய் சொல்லிவிட்டு கைகழுவினான். அவ்வளவுதான் அதற்கு  மேல் எதுவும் கேட்க முடியாது.

எப்போது எதனால் கோபம் வருமென்று சொல்ல முடியாது,  அந்த கோபத்தின் உக்கிரத்தை தாங்க இயலாது, ஆனால் கோபம் தணிந்த அடுத்த நொடியில் குழந்தை போலாகிவிடுவான், இதை தவிர வேறு ஒன்றும் குறை சொல்ல முடியாது அவனிடம்

பூங்கோதையின் கவலை எல்லாம் வரப்போகும் பெண்ணை பற்றித்தான், வருபவள் அவனை புரிந்து நடந்து கொள்வாளா என்ற ஏக்கம் சில நாளாக அதிகரித்து இருந்தது.    

யாரையாவது காதலிக்கிறான்  என்றால் கூட  கல்யாணம் செய்து வைக்க அவள் தயார்தான், ஆனால் அவனோ பிடி கொடுத்து பேசுவேனா  என்கிறான்.

இதே நினைப்புடன் கிளம்பியவளை ரஞ்சனின் குரல் இவ்வுலகிற்கு கொண்டு வந்தது,    ஹாஸ்பிட்டல் பைலை  எடுத்துகிட்டிங்களா
என்றவாறு  பைக்கின் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றான் . 

ரஞ்சனுக்கு  காதல்  என்று இல்லாவிட்டாலும், உடனே  திருமணம் செய்ய வேண்டுமென தோன்றவில்லை. ஆனால் அம்மாவுக்கோ ஒரு பேரனையோ பேத்தியையோ பார்க்க வேண்டுமென ஆசை

 காதலிக்கும் நண்பர்கள் அவர்களின் முதல் சந்திப்பையோ அல்லது வேறேதை பற்றியோ  சொல்லும் போது மட்டும் ஒருவித ஏக்கம் மனசுக்குள் வந்தமரும். நமக்கு ஏதும் இது போன்று நடந்ததில்லையே என்று, பிறகு நமக்கா? என்றொரு  சிரிப்புடன் அந்த எண்ணம் எங்கோ சென்று ஒளிந்து கொள்ளும் .

வீட்டை பூட்டிவிட்டு அம்மா வர , ஹாஸ்பிட்டலை நோக்கி பைக்  அனிச்சையாய் ஓடியது. வழியில் அம்மா ஏதும் பேசவேயில்லை. மருத்துவமனையை அடைந்து, அம்மாவை பரிசோதனைக்கு உள்ளே  அழைத்து சென்று விட,

அவன்  மட்டும் வரவேற்பு அறையில் உட்கார்ந்து டி .வியில் ஓடிய குத்துபாட்டை ரசிக்க மனமின்றி   வேறெங்கோ  வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்கல்லூரி மாணவி போல் தோற்றமுடைய  ஒரு பெண்  காலில் ஒரு சிறிய கட்டுடன் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தாள்.

ஏதேனும் நடைபயிற்சி என்று  நினைத்து கொண்டிருக்கும் போதே, அவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவாறு அருகில் வந்து,சில்லறை வேண்டுமென  கேட்க,  அவன் தனது வாலெட்டிலிருந்து  எடுத்து நீட்ட ,சின்ன சிரிப்புடன்  தேங்க்ஸ் ஒன்றை உதிர்த்தவாறு  நகர்ந்தாள் .

 சிறிது நேரம் கழித்து  திரும்பி வந்தவள் அவனது பக்கத்தில் இருந்த சேரில் அமர்ந்து  வெகுநாள் பழக்கம் போல பேச ஆரம்பித்தாள்

ரஞ்சனிடம் இயல்பாகவே இருந்த கூச்ச சுபாவத்தால் அவளின்  கேள்விகளுக்கு பதில் சொல்வதோட நிறுத்த  அவளோ   அவளின் அப்பா, அம்மா  வேலை செய்வதில்  இருந்து, அவளது  அக்காவின் பொறியியல் படிப்பு மற்றும் அக்காவின்  சமீபத்திய    காதல் வரைக்கும் சொல்லிக்கொண்டு  இருந்தாள்

ரஞ்சனுக்கு மிகவும்  வியப்பாக இருந்தது. இப்பொழுது பார்த்த ஒருவருடன் எப்படி இத்தனை இயல்பாக பேச முடிகிறது என்று நினைத்தவாறே ஒரு குறுகுறுப்புடன்  அவளின் காலில் எப்படி அடிபட்டது என்று கேட்க?

 ஸ்கூட்டியில  போகும் போது  இன்னொரு வண்டிக்காரன் வந்து இடித்ததாக   சொல்ல, ஒரு  சந்தேகத்துடன்  லைசென்ஸ் இருக்கா? என்றதற்கு வெறுமனே சிரித்து வைத்தாள்.   

 இப்ப   என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
 என்று  கேட்டதற்கு பதிலாய் ஒரு வெடிகுண்டை வீசினாள்  + 2 படிப்பதாக

பார்ப்பதற்கு காலேஜ்  பொண்ணு மாதிரி இருக்கிறாய் என்றான் அவன், அதற்கு அவளோ நான் எங்க அப்பா மாதிரி என்றாள்  வெகுளியாய் .அவள் இவ்வளவு நேரம் லொடலொடவென்று  பேசினதின்  அர்த்தம் புரிந்தது ரஞ்சனுக்கு .
  
 கொஞ்ச நேரத்துல அவனது அம்மாவும் வந்து விட, அந்தப்பெண்ணிடம் சொல்லிவிட்டு  அம்மாவிடம்  செல்ல, மருந்து சீட்டை அவனிடம் தந்தவாறே உன்னுடன் வேலை செய்யும் பெண்ணா? என்று கேட்க,
இல்லை அவள்  +2 என்று  சொல்ல கூச்சப்பட்டுக்கொண்டு, ஆமாமென்று தலையசைத்துவிட்டு,  வண்டிக்கருகில் இருக்குமாறு சொல்லிவிட்டு  பார்மஸிக்கு  சென்றவன்,அவளின்  பெயரைக்கூட கேட்கவில்லையே  என்று நினைத்தவாறே   அவளை தேட, ரிசப்ஷன் அருகே அவள் இல்லை

 அவனது திறமையை அவனே மெச்சிக்கொண்டு  மாத்திரை வாங்கி வந்தால், அவனது வண்டியருகில் அவளும், அவனது  அம்மாவும் பேசிக்கொண்டு  இருக்க  அவனுக்கோ பகீரென்றது .

அவன் ஒன்றும் சொல்லாமல்   வண்டியை  ஸ்டார்ட் பண்ண,  பார்த்து போங்க என்று அவள் புன்னகைத்தவாறே  சொல்ல, எரிச்சலில்  இருந்த அவன்  என்னிடம்  லைசென்ஸ்  இருக்கு என்று சொல்லியவாறே கிளம்பினான்
மருத்துவமனை தாண்டியவுடன் அவனிடம் அம்மா கூறினாள்   ,

அந்த பொண்ணு பேரு "வெண்ணிலா"வாம்  +2 படிச்சிக்கிட்டு இருக்காம். அவன் காற்று வேகத்தில் காதில் விழாத பாவனையுடன்  வண்டியை செலுத்த ஆரம்பித்தான்.


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!