Wednesday, June 20, 2012

கணக்கு டீச்சரும் நானும்….


இன்னைக்கு மழை வராதா? இல்லாட்டி எனக்கு காய்ச்சல் அடிக்காதா? பள்ளிகூடம் லீவு கிடைக்காதா!! அப்படி நினைச்சுகிட்டு பள்ளிகூடம் போன நாட்கள் தான் நம்மளோட வரலாற்றில் அதிகம்…. அதிலும் அந்த கணக்கு பாடத்த நினைச்சாலே கடுப்பா வரும்….. ஒரு மாட்ட செவ்வக வடிவில் உள்ள வயலின் மையத்தில் 10மீ நீளமுள்ள கயிற்றில் கட்டி இருப்பாங்க, மாடு தின்ன புல்லின் பரப்பளவு என்ன? அப்படின்னு கேட்டு இருப்பாங்க, அந்த கேள்விய படிச்சதுமே நம்ம மூஞ்சியில ப்யூஸ் போய்ரும்.. எப்படித்தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியுதோன்னு நாம ஆச்சரியப்படுற அளவுக்கு கணக்கு இருக்கும்…

அதுலயும் ரொம்ப ஈசியா இருக்க கணக்க டீச்சர் போட்டுட்டு, கஷ்டமா இருக்குற கணக்க நம்ம தலையில கட்டிருவாங்க…… அதையும் அப்பவே போட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க… இது நடக்குற காரியமா நமக்கு??!!!!!!! அப்டியும் ரொம்ப சீரியஸா கணக்கு போடுற மாதிரி ரூட்ட குடுக்குறது ஆனா இது எப்படிதான் அந்த டீச்சருக்கு தெரியும்ன்னு தெரியாது, அவ்ளோ பேரு இருக்குற க்ளாசுல என்னய கூப்பிட்டு ஆன்ஸர் சொல்ல சொல்லுவாங்க…. நாம அப்பதான் Given Data  அப்பிடின்னு போட்டு, அண்டர்லைன் எல்லாம் பண்ணி ரொம்ப அழகா எழுத முயற்சி பண்ணிட்டு இருப்போம். இவ்வளவு  நேரம் ஆச்சு என்ன பண்றே!!! அந்த நோட்ட எடு அப்பிடின்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள என் நோட்ட தூக்கி குடுத்துருவாங்க சில எட்டப்பர்கள். அப்புறம் என்ன  ஒரே அடிதடி தான்.

ஒருதடவை ரொம்ப புத்திசாலித்தனமா புக்குல கடைசியா இருக்குற ஆன்சர பார்த்து சொல்லிட்டேன். நம்ம நேரத்துக்கு அது தவறான விடையா போக, டீச்சர் என் நோட்ட வாங்கி பார்க்க, அப்புறம் என்ன ஒரே தீபாவளிதான்..

அந்த அடிதடி கூடஒ.கே, நான் தாங்கிருவேன், ஆனா அதுக்கு அப்புறம் ஒரு பத்து நிமிஷத்துக்கு பண்ணுவாங்க பாருங்க அட்வைஸ்… அதுலயும் உங்க அக்கா ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர்றா நீ ஏன்டா இப்படி இருக்குற? அவ படிக்குற நேரத்துல நீ என்ன பண்ற? அப்பப்பா கஷ்டகாலம்டா சாமி... இதுல ஹைலைட்டா வார கடைசியில சர்ச்சுல பார்த்துட்டு அம்மா கிட்ட இவன் வர வர ஒழுங்கா படிக்கிறதே இல்ல ( நாம எப்பொ ஒழுங்காபடிச்சோம்!!!!!!!) அப்படின்னு வத்தி வைக்கிறது…… அப்டின்னு  நெறய பண்ணி நம்மளோட வயித்தெரிச்சலை ரொம்ப கொட்டிக்கிட்டாங்க…
சத்தியமா இன்னைக்கு இந்த டீச்சர் குறைந்த பட்சம் சர்ச்சுக்காவது வராமல் காப்பாத்து அப்படி எல்லாம் வேண்டி இருக்கேன்னா பார்த்துக்கங்க………..

அப்படி கும்பிட்ட எல்லா சாமிகளோட ஆசிர்வாதத்தால் படிச்சு முடிச்சுட்டு வேலைக்கும் போயாச்சு, இதுவரைக்கும் கணக்குல நான் படிச்ச வெக்டர், ð2X/ ð2Y, ஆய்லர்’ஸ் தியரி,வகை நுண்கணிதம், தொகை நுண்கணிதம் இது எல்லாம் என்னோட ப்ராக்டிக்கல் லைப்ல வரவே இல்ல…. நானும் பார்க்கிறேன் இதை எல்லாம் எப்பதான் யூஸ் பண்ண போறேன்னு………….!!!!!!!!!!!


               



வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………

Thursday, June 14, 2012

நாலு பேருக்கு நன்றி



எல்லாரையும் போலவே நடப்பு அரசியலை வெறுத்த போதுதான் தமிழகத்தின் விடிவெள்ளியாக, விடிசனியாக….. அவர் அவதரித்தார். சரிதான் நல்லதொரு மாற்றம், இனிமே எல்லாம் ம்ம்ம் ….. நல்லதே நடக்கும் என்றிருந்த போது நம்ம நண்பன் ஒருவன் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அந்த கட்சியில சேர்ந்து ஒரு பொறுப்புல வந்துட்டான்.

அதுக்கு அப்புறம் அந்த நாசமா போன ப்ளஃக்ஸ் கலாச்சாரத்துலயும் சேர்ந்து ஊரையும், தமிழையும் கதிகலங்க வச்சிகிட்டு இருந்தான்.       
                                         

இவன் இருந்த வேகத்த பார்த்துட்டு கட்சியில உள்ளாட்சி தேர்தல்ல இவனுக்கும், இவனோட இன்னொரு நண்பனுக்கும் சீட் குடுத்தாங்க…. இவரு நல்லவரு… அவரு நல்லவரோ நல்லவர்.

ரொம்ப ஆர்வமா எல்லாரும் உழைச்சாங்க… நம்ம நண்பனை எதிர்த்து நின்னவரு ஒரு பெரிய கட்சிய சேர்ந்தவர்,பண முதலை, இருந்தாலும் போட்டு பார்ப்போம் அப்படின்னுதான் தேர்தல்ல நின்னான்.  தேர்தலும் முடிஞ்சு முடிவுகளும் வந்துச்சு, கவுண்டிங் முடிஞ்சு கொஞ்சம் சோகமா வந்தவனைப் பார்த்து என்னாச்சுடா என்றதற்க்கு 4 விரலைக் காட்டினான். பயபுள்ள 4 ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டான்.எங்க எல்லாருக்குமே கொஞ்சம் கஷ்டமாயிருச்சி.

கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு, அந்த இன்னொரு நண்பனுக்கு என்ன ஆச்சுடா என்றதற்க்கு  அதுக்கும் 4 விரல்லயே காட்டினான். என்ன அவனும் 4  ஓட்டு வித்தியாசத்துல தோத்து போய்ட்டானா !!!! என்று ஆச்சரியத்துடன் கேட்டதற்கு, கேட்டவனை ஏறிட்டு பார்த்துட்டு நண்பன் அமைதியா சொன்னான்………

இல்லடா மச்சான், அவன் வாங்கினதே 4 ஓட்டுதான் !!!!!!!!!!!!!!!!!!!!
(ஏன்னா அவருக்கு அவ்வளோ நல்ல பேரு!!)

இதுல ஹைலைட்டான விஷயமே, கடுப்பான நண்பன் முடிவு வந்த மறுநாள், நன்றி சொல்றேன்னு சொல்லிட்டு, மைக் செட்டும் ஒரு ஆட்டோவும், வாடகைக்கு எடுத்துட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் திருப்பி திருப்பி போட்டு அந்த ஏரியாக்காரங்கள வெறுப்பேற்றினான். அது என்ன பாட்டுன்னா…..
                                                      
  “ நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
   நாலு பேருக்கு நன்றி, அந்த நாலு பேருக்கு நன்றி
   தாயில்லாத அனாதைக்கெல்லாம் தோள்குடுத்து தூக்கி செல்லும்
   அந்த நாலு பேருக்கு நன்றி..”


வாழ்க வளமுடன்……… தமிழ் தந்த புகழுடன்………………