Tuesday, December 18, 2012

செத்துப் போ விவசாயியே ...

"வரப்புயர நீர் உயரும்
 நீர் உயர நெல் உயரும்
 நெல் உயர  குடி உயரும்
 குடி உயரக்  கோன் உயர்வான்."

 என்று ஒரு விவசாய குடியின் வளர்ச்சி  நாட்டின் வளர்ச்சியாகப் பார்த்த காலங்கள் மலையேறிப் போய்விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிநாதமாய்,  பெருமையாய்  பாடப்பட்ட விவசாயி தான் இன்று வரிசையாய்  தற்கொலை செய்து கொள்கிறான்.  இது விதர்பாவிலோ, அல்லது நமக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாத நாட்டின்  ஏதோ  ஒரு மூலையிலோ  நடந்த செய்தி அல்ல. உலகுக்கே  படியளந்த தஞ்சை டெல்டாவில் தான் இந்த தொடர் தற்கொலை சம்பவங்கள்.

"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
 தான்அமிழ்தம்  என்றுணரற் பாற்று.  "

 என்று உலகத்து உயிர்களை எல்லாம் வாழ வைக்கும் அமிர்தம் போன்ற மழைதான் இன்று "ஆலகாலமாய்" மாறி, பெய்க்காமல் பொய்த்து, விவசாயிகளை காவு வாங்குகிறது.

அண்டை மாநிலங்கள் தண்ணீர் தராமல்  வஞ்சிக்க, பருவமழை பொய்க்க, நிலத்தடி நீரும் குறைந்து, குண்டு பல்பு எரியகூடிய அளவு மின்சாரத்தையே வழங்க  வக்கத்த, துப்புகெட்ட அரசாங்கமும் கைவிட, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட  முடியாமலும், வறண்ட வீறு விட்ட வயலை காணச் சகிக்காமலும், பூச்சி மருந்திலும், புளிய மரத்தில் நான்கு  முழக் கயிறுடன்  நிரந்தர நிம்மதி தேடிக்கொள்கிறான் ஏழை விவசாயி.

வறட்சி காலத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அரசாங்கம்,  வாய்தா வாங்கும் சாமர்த்தியத்தில் பாதி காண்பித்தால் கூட போதும் காவிரி கைவிரிக்காது. முல்லைப் பெரியாறு முரண்டு பிடிக்காது. ராஜ தந்திரமாய் காரியம் சாதித்து கொள்ள நமது அரசியல்வாதிகளுக்கு துப்பில்லை. ஆனால் அறிக்கை போர் புரிவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை.

  • நதி நீர் இணைப்பு குறித்த தெளிவான பார்வை இல்லை. அதை மேற்கொள்ள எந்த விதமான முனைப்புத்  தன்மையும் இல்லை.
  • நீராதாரத்தை நிலைப்படுத்த எந்தவிதமான  தொலை நோக்கு திட்டங்களும் இல்லை.  
  • போதிய தடுப்பணைகள் அமைத்து உபரியாய் கடலில் கலக்கும்  நீரைச் சேமிக்க எந்த ஒரு முயற்சியும் இல்லை.  
  • குறிப்பாக விவசாயம் குறித்தோ விவசாயிகள் குறித்தோ யாருக்கும் எந்த அக்கறையும் இல்லை .

அரசியல்வாதிதான் அப்படி இருக்கிறார்கள் என்றால்  நன்கு மெத்த படித்த நல்ல பதவியில் உள்ள வேளாண்மை அதிகாரிகள்  அதுக்கு மேல் !!!!  விவசாயி எங்கு போய்  முட்டிக்கொள்வது???  மண்பரிசோதனை  செய்ய நான் பட்ட பாடு சொல்லி மாளாது ....


                                                                             மீண்டும்  புலம்புவான் விவசாயி  .......

விவசாயிகளின் தொடர் தற்கொலை கண்டு, தாங்கொண ஆற்றாமையால் புலம்பித் தவிக்கும், பொறியாளன் என்று சொல்வதை விட ஒரு விவசாயி என்று  சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் .


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!











18 comments:

  1. முதலில் உங்களுக்கு பாராட்டு. இன்ற‌ய‌ ஒரு விவசாயின் நிலையை கையில் எடுத்து எழுதியதற்க்கு.. உங்களின் ஆற்றாமையையும், உண்மையை உரக்க உறைத்ததற்க்கும்... ஒருவன் வாழ, உடலில் உயிர் தங்க, திறமையுடன் செயல்ப்பட‌ உணவு தான் இன்றி அமையாதது.. அது ஒரு விவசாயியால் மட்டுமே படைக்ககூடிய, போற்றத்தக்க‌ ஒன்று..பணத்தால் உணவை வாங்கலாம்தான், ஆனால் அது உற்ப்பத்தியாகி இருக்கவேண்டுமே..உற்ப்பத்தியை உண்டாக்குவது ஒரு விவசாயி அல்லவா. ஒருவன் பசியால் வாடும்போது உணவளித்தவனை தெய்வம் என்கிறான். ஆனால் இங்கு அனைவருக்குமே உணவளிக்கும் விவசாயி, கீழ்மட்டத்தில் வைக்கப்படுவதோடு, எந்த ஒரு சமுதாய மதிப்பிற்க்கும் உள்பட்டவனாக அல்லாமல், மிக மிக சாதாரணமாக பார்க்கப்படுகிறான்... மாற வேண்டும்....நாம் பணத்தி சம்பாதிக்கலாம்..அதை உண்ண முடியுமா...நல்ல கட்டுரை..

    ReplyDelete
    Replies
    1. புரிந்துணர்ந்த மறுமொழிக்கு நன்றி நண்பரே..

      Delete
  2. நெற்களஞ்சியம் என் புகழ பெற்ற தஞ்சை என்று வரண்டு கிடக்கிறது . மிசாரமும் இல்லை தண்ணீரும் இல்லை ஆனால் வற்றாத கண்ணிற் மட்டும் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இன்று இருக்கும் விவசாயிகளை சாகடித்துக் கொண்டிருக்கிறது. நெற்களஞ்சியம் இன்று விவசாயிகளின் கண்ணீர் நிரம்பிய களஞ்சியமாக காட்சியளிப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அது குறித்த கவலை ஏதுமின்றி ஆட்சியாளர்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. வருகைக்கு நன்றி நண்பா..

      Delete
  3. விவசாயம் இன்று சபிக்கப்பட்ட தொழிலாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.பருவ மழை பொய்ப்பு, ஆள் பற்றாக்குறை போன்றவற்றால் இப்போதெல்லாம் யாரும் விவசாயம் செய்வதை விரும்புவதில்லை. வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  4. அருமையான பதிவு நண்பா...சென்ற வாரம் அரட்டை அரங்கத்தில் ஒருவர் கேட்டார் எல்லாருடைய பிள்ளைகளும் பெற்றோர் செய்யும் துறைகளில் நுழையும்போது விவசாயியின் வாரிசுகள் அந்தத் துறையை தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் அவர்தம் பெற்றோர் தன் துறையை தேர்ந்தெடுக்கச் சொல்லி வளர்த்தாததே என்றார் . வாழ்வாதாரத்திற்கே உதவாத ஒரு தொழிலில் எப்படி தன் பிள்ளையை அனுப்புவார்? இப்போது விவசாயத்தின் நிலை இதுதான். ..அரசுதான் நலிந்து வரும் ஆனால் அத்தியாவசியமான துறையாகக் கருதி ஊக்கமளிக்க வேண்டும்...இப்பொழுதே கிராமங்களில் 18-30 வயதில் விவசாயம் தெரிந்திருப்போர் மிகவும் குறைவு..இப்படியே போனால் இந்த தலைமுறைக்குப் பிறகு விவசாயம் செய்ய யாருமே இருக்க மாட்டார்கள் அப்படி ஒரு தொலைநோக்குப் பார்வையை அரசுதான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்வாதாரத்திற்கே உதவாத ஒரு தொழிலில் எப்படி தன் பிள்ளையை அனுப்புவார்? // மிகவும் சரியான பதில்.யாருமே தான் படும் கஷ்டங்கள் தனது பிள்ளைகள் படக்கூடாதென்று நினைப்பார்கள். நடைமுறை கஷ்டங்கள் ஒருபுறமிருக்க, பலனடையும் தருவாயில் ஒரு மழை பெய்து அனைத்து உழைப்பையும் கெடுத்துவிட முடியும். ஆகவே இத்தொழிலை தவிர்க்கவே அனைவரும் விரும்புகின்றனர்.தொலை நோக்கு பார்வையுடன் அரசு எதேனும் செய்யுமா?? வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  5. பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பா.

      Delete
  6. மிகவும் உண்மையான நிலை! நெற்களஞ்சியம் இப்போது காய்ந்து கிடக்கும் நிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மிகச்சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்! வலைச்சரத்தில் உங்கள் பதிவு அறிமுகம் ஆகியுள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையான நிலை உவப்பானதாக இல்லையே நண்பா அதுதான் வருத்தமளிக்கிறது. வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி நண்பா.

      Delete
  7. நல்லதொரு பதிவு. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் சரியான பதிவு. வாழ்த்துக்கள். கண்டிப்பாக இந்த நிலை மாற வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. உலகுக்கே படியளந்த நமக்கு வட மாநிலத்தில் இருந்து நெல் இறக்குமதியாம்.மிகவும் வருத்தமாக இருக்கிறது... வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி.

      Delete
  8. ஒரு விவசாயி என்று சொல்வதை பெருமையாய் நினைக்கும் ஒரு சாமானியன் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்திய பகிர்வு ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி...

      Delete
  9. ஆமாம்..போற்றவேண்டியத் தொழிலைக் காக்க முடியவில்லை...இப்படியேச் சென்றால் யாருக்கும் வாழ்வில்லை ..புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து தேவையானதைச் செய்தால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் மறுமொழியிட்டமைக்கும் நன்றி...

      Delete