Tuesday, November 20, 2012

பசுமை நிறைந்த பால்யம்-3

முந்தைய பகுதிகளை படிக்க,
பசுமை நிறைந்த பால்யம் -1
பசுமை நிறைந்த பால்யம் -2
                           
பள்ளி செல்லும் காலை பொழுதுகள் சற்று கசப்பானவை. ஜோல்னா பையை தலையில் மாட்டியபடி  அவசர அவசரமாய் நடந்து  செல்வதும் , நண்பன் கேட்கையில் மாத்திரம் நினைவுக்கு வரும் எழுத  மறந்து விட்ட வீட்டுப்பாடங்களும், எழுத ஆரம்பித்து பாதியில் தொக்கி நிற்கும் கணக்கும் செல்லும் வழியில் பயத்தை தருபவை.

கணக்கு டீச்சர் வராத நாட்களை எண்ணி குதூகலித்த தருணங்கள்  மிகவும் அதிகம்.பள்ளி நெருங்குகையில்  உரத்து  கேட்கும்  வாய்ப்பாட்டை  கேட்கும் பொழுதே சொரேரென்றிருக்கும்.  எங்கே சுழற்சி முறையில் நாமும்  சொல்ல வேண்டுமோ என்று பயந்து முன்னால் இருப்பவனின் முதுகுக்கு  பின்னால் ஒளிந்திருந்தது   ஒரு காலம் பால்யத்தில் . 

மழை பெய்யும் பள்ளி நாட்கள் இதமானவை. மழையின் ஆரம்பத்தில் வரும் மண்வாசனையும், இரைச்சல் மிகுதியால் நின்று விடும் வகுப்புகளும், மைதானத்தில் புள்ளியாய் ஆரம்பித்து தாழ்வான பகுதியை நோக்கி வாரிவாரியாக ஓட ஆரம்பிக்கும் மழை  நீரும், தேங்கிய மழைநீரில் விழுந்து  குடைவிரித்தவாறே  மறையும் நீர் முத்துகளும் கண்ணெதிரில் நடக்கும் அற்புதம்.

வானம் வெக்காளித்த  பின் வழக்கத்தை விட சற்று முன்னதாக விடப்படும் பள்ளியும், வெளிவருகையில் உணரும் வெம்மையும், செல்லும் வழி எல்லாம் தண்ணீரை எத்தி விளையாடிய படியே செல்வதும், மரம் செடிகளில் இருந்து சொட்டி கொண்டிருக்கும் நீர்த்திவலைகளும், சிறுமரத்தினடியில் யாரையேனும் எதார்த்தமாய் நிற்க வைத்து, அவர்கள் மீது  ஆட்டி விடப்பட்டு, சொட்டிய மழைத்துளிகளும்,

அம்மாவால் சூடாக   தரப்படும்  மழை நேரத்து தேநீரும், கூடவே தித்திப்பாய்  தேங்காய்,வெல்லமிட்டு தரப்படும்  ஊறவைத்த அரிசியும், அதில்  எதிர்பாராமல்  கடிபட்ட கல்லால் ஒரு வினாடி  கூசிப்போகும் உடலும்,  அதை நினைக்கையில்  அதே  உடல் கூசும் உணர்வை இப்பொழுதும்  உணரும் அதிசயத்தையும்    என்னவென்று சொல்வது!

பால்யம் குறித்த நினைவுகளை  எழுதுவது என்பது, கோடை நாளொன்றின் மீது கோபம் கொண்டு பெய்யும் பெருமழையின் சாரலில் நனைவது  போல என் மனதை சுகமாய்   நனைக்கிறது .

நன்றாய்  நனைக்கட்டும்  பெருமழையின் சாரல் !!!

                                                                                                                      பால்யம் மலரும் ....

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!


 

13 comments:

  1. பள்ளிக்கு செல்வதென்றாலே பிடிக்காவிட்டாலும், இத்தனை விசயங்களையும் மனதில் உள்வாங்க தவறுவதில்லையோ..பள்ளிநேரத்து மழை சுகம்.எதிர்பாரா விடுமுறை எத்தனை சுகம்...அந்த பொருப்பற்ற பருவத்திற்க்கு எதுவும் ஈடாகாதோ...அன்றய நினைவுகள் அது கஷ்ட்டமோ,சுகமோ இன்று சுகமாக இருப்பதினாலேதானே இந்த மலரும் நினைவுகள்..இதைப்படிக்கும், ஒவ்வொருவரும் நினைத்துப்பார்ப்பார்கள் அவரவர்களின் பள்ளி நாட்க்களை..பொன்

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பா,பால்யத்தில் நடந்தவற்றை நினைத்து பார்ப்பதும் ஒருவித சுகம்தான். வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete

  3. அழகான ஆட்டோகிராப் நினைவுகள்...!

    ReplyDelete
    Replies
    1. அந்த நினைவில் ஆழ்ந்து விடுவதும் ஒருவித சுகம். வருகைக்கு நன்றி, தொடரட்டும் தங்கள் வருகை....

      Delete
  4. அழகான மழைக்கால நினைவுகள் என்னுள்ளும் எழுந்ததால் மகிழ்கிறேன் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும் நன்றி.

      Delete
  5. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete

  6. அன்பு ராபர்ட். பசுமை நிறைந்த பால்ய நினைவுகளில் அசைபோட்டு எஞ்சியுள்ள வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறேன். எண்ண எண்ணத் தெவிட்டாத நிகழ்ச்சிகளின் நினைவுகளில் வாழ முடிவதில் பெரும் மகிழ்ச்சி. ஏனென்றால் வயது முதிரும்போது பலருக்கும் நினைவுகள் மங்கி விடுகிறது. உங்களிடம் ஒரு விஷயம் பகிர்ந்து கொள்கிறேன். ஒரே சூழ்நிலையில் வளர்ந்த ஒத்த வயதுடையோர் நினைப்பவை வேறு வேறு நிகழ்வுகளாக இருப்பது பார்த்திருக்கிறேன். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வரும். எதிர் காலத்தைப் பற்றியும் கனவு காணுங்கள். ( அப்துல் கலாம் கூறியது போல். ) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பால்ய நினைவுகளை அசை போடுவது என்பது மிகவும் சந்தோஷமளிப்பவையே.. நீங்கள் கூறியது சரிதான், ஒத்த சூழலில் வளர்ந்திருந்தாலும் ஒவ்வொருவரின் பார்வையும், மனவோட்டங்களும் வித்தியாசமானவை தான். எதிர்காலத்தை பற்றிய கனவுகளும் நிரம்ப உண்டு ஐயா, அதை நோக்கியே எனது போராட்டமான வாழ்க்கை பயணமும் .... நன்றி ஐயா வருகைக்கும், மறுமொழியிட்டமைக்கும்....

      Delete
  7. அடடா!இங்கும் மழையா????!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ. அனைவருக்கும் பிடித்தமான மழைதான் :-)

      Delete
  8. மலரும் நினைவுகள் ..நன்றி

    இடுகைத்தலைப்பு:
    பசுமை நிறைந்த பால்யம்-3

    உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!.....................

    ReplyDelete