Monday, October 29, 2012

சிதறிய ரொட்டியும், தெறித்த ரெட்டியும் !!!

                                          ஓட்டுனர் உரிமம்  வாங்குவது என்பது வளைகுடா நாட்டு  வாழ்க்கையில் ஒரு மைல்கல்.பயிற்சி பள்ளியில் சில பூர்வாங்க  தேர்வுக்கு பின் நாம் சில தனியார்  காரோட்டிகளின் மூலம் பயிற்சி பெற்று பின் தேர்வுக்கு செல்லலாம்.
அப்படி தெரியாத்தனமா வந்து நம்ம நண்பர்கள்கிட்ட மாட்டுன ஒரு அப்பாவி ஆத்மா தான் "ரெட்டி " ஆந்திராகாரர். மதிய உணவு இடைவேளையின் போதோ அல்லது சாயந்திரம் எங்களுக்கு  வேலை முடிந்தபின்பு  பயிற்சி என்ற பெயரில் சித்திரவதை ஆரம்பமாகும் அவருக்கு.

 ஒரு நண்பன் நான் பெரிய அப்பாடக்கர், ஊரில் எல்லாம் வண்டி ஒட்டி இருக்கேன் சொல்லிட்டு அவரிடம் பயிற்சிக்கு போனான். ஒருமுறை  ரவுண்டானாவில் யு டேர்ன்  எடுக்குமாறு சொல்ல, நமது நண்பனும் எதுக்கு  அங்க எல்லாம் போய்  சுத்திகிட்டின்னு நினைச்சு ரவுண்டானா ஆரம்பமாகும் இடத்திலேயே போட்டான்  பாருங்க யு டேர்ன, அவ்வளவுதான் தெறிச்சுட்டார் நம்ம ரெட்டி.  அப்புறம் அவனுக்கு ஆனா ஆவன்னாலேருந்து ஆரம்பிச்சார். 

பொதுவாக ரவுண்டானா ஆரம்பத்தில் சற்று நிதானித்து வேறு வண்டிக்கு இடைஞ்சல் இல்லாமல் போக வேண்டும்.  ஒருநாள் ரவுண்டானா ஆரம்பத்தில் நிதானித்து வண்டியை மெதுவாக்கி , நம்மாள்  போகலாம் என்று நினைத்து வண்டியை கிளப்பும் போதே  ரெட்டி "பெட்ரோல் தேதோ" " பெட்ரோல் தேதோ" ன்னு அவசர கதியில் கத்த, ஹிந்தி தெரியாத நண்பன், போகச் சொல்கிறாரா, நிக்க சொல்றாரான்னு புரியாமல்  குழம்பி மிகச்சரியாக  நடுரோட்டில் நிறுத்தி விட்டான். பிறகுதான் தெரிந்தது  ஆக்சிலேட்டர்  குடு என்பதைத்தான் ரெட்டி அப்படி   சொல்லி இருக்காருன்னு.

 அதுலேருந்து  கொஞ்சம் பயத்துடனே நம்மாளு ரவுண்டானாவுல  வண்டி ஓட்டி  கொண்டு இருக்க, இதை கவனித்த ரெட்டி, ஒருநாள்  சாயந்திரம் ஒரு டீயையும் ரெண்டு ரொட்டியையும் வாங்கி கொண்டு வண்டியில் ஏறி,  ரொட்டியை டீயில்  நனைத்து சாப்பிட்டவாறே, நண்பனை உற்சாகப்படுத்துவதாக நினைத்து கொண்டு,  நான் இருக்கிறேன் அல்லவா பயப்படாதே நல்ல தைரியமா ஒட்டு என்று சொல்லி கொண்டு  இருக்க,  

நம்மாளு ஒரு ரவுண்டானாவில் வேகமா போவோம்னு நினைச்சு ஆக்சிலேட்டரை  ஒரு அழுத்து  அழுத்த , ரொட்டி தின்கிற சுவாரஸ்யத்துல ரெட்டியும்  கவனிக்காமல் விட, அடுத்த செகண்ட் வண்டி முன்னால  இருந்த "கர்பு ஸ்டோனை" எல்லாம் தாண்டி ரவுண்டானா நடுவில போய்  நின்னிருக்கு. கலக்கத்தோட நம்மாளு ரெட்டிய பார்க்க, ரொட்டி சிதறி,  டீயும் மூஞ்சு, ஒடம்பு   பூரா ஊத்தி இருக்க ,  ரெட்டி கண்ணாடிய பார்த்து அவரையே திட்டிக்க ஆரம்பிச்சாராம்.

பார்க் பண்ணியதும், யு டேர்ன் போட்டதும்....

ஆனா மானஸ்தங்க அந்த ரெட்டி!! அதுக்கு அப்புறம் எந்த ஒரு நெலமையிலையும், எங்களோட  போனை எடுக்கவே இல்லையே, எங்களோட பேர எவனாவது சொன்னா பயிற்சி கட்டணம் அதிகமா வசூலிக்கிறதா கேள்வி அவ்வ்வ்வவ் !!!

வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!



Saturday, October 20, 2012

நண்பனும் தங்கையும் !!!

                                                             பாசமலர் படத்தை பார்த்து கெட்டு  போன பயபுள்ளைகள்ள  நம்ம நண்பனும் ஒருத்தன் . சின்ன புள்ளையில  தங்கச்சிக்கு ஒண்ணுன்னா மொத ஆளா நிப்பான். ஏதாவது தப்பு செய்ததற்கு   தங்கச்சியை அடிக்க அவங்க அம்மா கம்பை எடுத்தா , தங்கச்சி அழுவுதோ இல்லையோ  நம்மாளு அழ ஆரம்பிச்சுடுவான். 

அம்மா வேண்டாம்மா,  அம்மா வேண்டாம்மா  ன்னு சொல்லி  அவங்க அம்மா கைய புடிச்சு தொங்கி கிட்டு இருப்பான். பொறுத்து பொறுத்து பார்த்த அவங்க அம்மா, அவன் தங்கச்சி ஏதாவது தப்பு பண்ணினா மொதல்ல இவனை புடிச்சு வெளுக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அவனோட அறிவுக்கும், பண்ற சேட்டைக்கும்  வாரத்துக்கு ஏழு நாள் மட்டும் தான் அடிவாங்குவான். இப்போ பாசமலர் தங்கச்சியோட அடி கணக்கு வேறயா !! அதுனால கணக்கு வழக்கில்லாமல் அடிவிழும். போதும் போதுங்கிற அளவுக்கு அடி குடுத்து,  கடைசியா ஏதாவது தின்பண்டத்தை குடுத்து  விட்டுருவாங்க!!!.எந்த நேரமும் அழுகையும், தீனியுமாதான்  அலைவான் நம்ம பங்காளி.

ஒருநாள்   உலையில அரிசியை போட்டுட்டு,  தங்கையிடம் கொஞ்ச நேரம் கழித்து பக்கத்துக்கு வீட்டு அத்தையை கூப்பிட்டு சோறு வடிக்க சொல்லிவிட்டு  அவங்க அம்மா  ஒரு  கேதத்துக்கு போய்விட, விளையாட்டு மும்முரத்தில் தங்கையும் மறந்து விட, சோறு பொங்கலாயிருச்சு. அதுவும் அவங்க அம்மா வந்து பார்த்தா பின்னாடிதான்  தெரிஞ்சது .

கடுப்பான அவங்கம்மா கம்பை எடுத்து ப்ரோட்டோ கால் படி நம்ம பங்காளியை அடிக்காமல் நேரடியாக  அவன் தங்கச்சியை  அடி வெளுக்க ஆரம்பிக்க,
நம்மாளு தங்கச்சியை காப்பற்ற வேண்டுமென்ற கடமை உணர்வோடு  கம்பை அவங்க  அம்மாவிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஓட, என்றுமில்லாத கோபத்தில் அவங்க அம்மாவும் விரட்ட, சிக்கினா சின்னாபின்னமாயிருவோம்னு  தெரிஞ்சு  நம்மாளு ஓடி வீட்டு கூரை    மேல ஏறிட்டான் . வேகமா வந்த அவங்க அம்மா கால் தடுக்கி விழுந்து கல் ஒரல்ல மோதி மண்டை ஒடஞ்சு ரத்தம் ஊத்துது. 

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வந்தவர்கள் , இவனை திட்ட  இதை எதிர்பார்க்காத நம்மாளு, டென்ஷனாகி  அழுதுகிட்டே இதுக்கெல்லாம் காரணம் இவதான்னு சொல்லிட்டு ஒரு ஓட்டை எடுத்து அவன் தங்கச்சி தலையில போட  அவ மண்டையும் ஒடஞ்சு ரத்தம் ஓட ஆரம்பிச்சது.

அப்புறம் என்ன அவன் ஓட ஆரம்பிச்சுட்டான்.   ஊரே ஒன்னு  கூடி அவனோட வீர தீர பிரதாபங்களை பேச அவங்க அப்பா அடுத்த வாரத்துல அவனை கொண்டு போய் ஹாஸ்ட்டல்ல சேர்த்து விட்டாங்க.  நம்மளுக்கு ஸ்நாக்ஸ் வரத்து கம்மியாயிருச்சு ஹி ஹி ஹி ..... !!!!!!


வாழ்க வளமுடன், தமிழ் தந்த புகழுடன் !!!







Thursday, October 11, 2012

மரம்தான் மறந்தான்!!!

                                                         நம்மில் எத்தனை பேருக்கு  ஏழூர்  அய்யாசாமி அல்லது  ஜாதவ் பயாங் பற்றி தெரியும். நமக்கு ஒருவரை பற்றி தெரியவேண்டுமானால்   அவர்கள்  ஒரு  அரசியல்வாதியாகவோ, சினிமா பிரபலமாகவோ  அல்லது கிரிக்கெட் வீரராகவோ இருக்க வேண்டும். இவர்கள் அப்படி கிடையாது ஆனால் அதை விட மேலானவர்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள்.

அசாமை  சேர்ந்த ஜாதவ் பயாங் ஒரு தனி மனிதனாக 1360 ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கியவர் . மரங்கள் வளர்வதற்கு ஏற்றதாக இல்லை என்று     வனத்துறையால்  கைவிடப்பட்ட     இடத்தில்தான்  இவர் இதை உருவாக்கி காட்டியுள்ளார். நினைத்து பாருங்கள் ஒரு எளிய,  தனி  மனிதனின் முயற்சி எப்பேர்பட்ட காரியத்தை சாதித்துள்ளது .
 

 இன்னொருவர் நம்ம ஊர்க்காரர் ஏழூர்  அய்யாசாமி சத்தியமங்கலம் அருகே   இவர் கிட்டத்தட்ட ஒரு 10000 மரங்களை பொது நல நோக்கோடு  வளர்த்துள்ளார் . இவரும் ஒரு  எளியவர் . தண்ணீர் தட்டுப் பாடு உள்ள கோடைகாலத்திலும் வீட்டிலிருந்து  தண்ணீர் ஊற்றி வளர்த்துள்ளார்.  நாம் என்ன செய்தோம் அவர் வளர்த்ததில் 7000 மரங்களை திட்டமிட்டு வெட்டினோம்.

இத்தகைய செய்திகளை பார்க்கும் போது படிக்க நேரமில்லாமல் கடந்து விடுகிறோம் அல்லது படித்துவிட்டு  அதிகபட்சமாக அவரை மனதிற்குள் பாராட்டுகிறோம்  அவ்வளவுதான்.

நிற்க நேரமில்லாமல் நாம் ஓடி உழைத்துக் கொண்டிருப்பது யாருக்காக ? நமது அடுத்த தலைமுறைக்காகத்தானே! நம்மை விட மேம்பட்ட ஒரு வாழ்க்கையை அவர்களுக்கு கொடுக்கத்தானே நாம் இவ்வளவு போராடுகிறோம் . ஆனால்  உண்மையில்  நாம் அவர்களுக்கு என்ன கொடுக்க போகிறோம் தெரியுமா?

மலடாக்கப்பட்ட மண்.
ஓட்டையிடப்பட்ட  ஆகாயம்.
ஆழ்துளையிட்டாலும் கிடைக்காத நிலத்தடி நீர்.
கற்பழிக்கப்பட்ட காற்று .

என பஞ்ச பூதங்களையும் நாசமாக்கிவிட்டோம்  நெருப்பைத்தவிர . சொல்லுங்கள்  இதை கொடுக்கவா நாம் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் ? 
முன்பு இலவசமாய் ,சாதாரணமாய் கிடைத்தவை எல்லாமே இப்போது காசு கொடுத்து வாங்குகிறோம். சொல்லமுடியாது நமது அடுத்த சந்ததி காற்றை கூட காசு கொடுத்து வாங்கும் நிலை வந்தாலும்  வரலாம்.

 இவை அனைத்தையும் மரம் வளர்ப்பதின் மூலமாக சரி செய்ய இயலும். நகரத்தில் வாழ்கிறேன் என்னால் இங்கு செய்ய இயலாது என்று சப்பைக்கட்டு கட்டினாலும், நாம் நினைத்தால் சாதிக்க இயலாது ஒன்றும் இல்லை நண்பர்களே . நமக்கெல்லாம் ஒரு வேர்பிடிப்பாய் கட்டாயம் நமது கிராமங்கள் இன்னமும்  இருந்து கொண்டுதான் இருக்கின்றன.  அங்கு செய்யுங்கள். எதுவுமே செய்ய இயலாது என்றால்  குறைந்த பட்சம் உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துங்கள்.
முடிந்தவர்கள் செய்யட்டும்.முடியாதவர்கள் உதவட்டும்.

ஒன்று ஒன்றாய் தான்  நூறு.
சிறு துளி  பெரு  வெள்ளம்.
சிறு விதை பெரு விருட்சம் !!!

தனிமரமும்  தோப்பாகும்  நண்பர்களே நாம் மனது வைத்தால்  !!!

வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!


Monday, October 8, 2012

மறைந்து விட்ட திண்ணைகள் !!!

                                        திண்ணைக்கும் நமக்குமான தொடர்பு அலாதியானது.   வீட்டின் எத்தனையோ இடங்கள் நமக்கு  பிடித்தமான ஒன்றாக இருந்த போதிலும், நம் ஒவ்வொருவருக்குள்ளும் எதோ ஒருவிதமான நெருக்கத்தை , அன்யோன்யத்தை  தந்திருக்கும் இந்த திண்ணைகள்.
சிறுவயதில் வெளியில் விளையாடி விட்டு தாமதமாய் வீடு திரும்பும் போதோ, அல்லது அனுமதி இல்லாமல்  பஞ்சாயத்து டி.வியில் படம் பார்த்துவிட்டு, தாமதமாய்  ஒருவித கலக்கமான மனநிலையில் வீடு திரும்பும் போதோ  வீட்டின் நிலவரத்தை நிசப்தத்தின் வாயிலாக  அறிவிப்பது   இந்த  திண்ணைகள் தாம்.
                          
ரேங்க் கார்டை அப்பாவிடம் கொடுத்துவிட்டு   நேர்கொண்டு பேச இயலாமல் தவித்த எத்தனையோ பொழுதுகளில் தாய்க்கோழியாய்  அடைகாத்த  அந்த தூண்களும்,  போட்டி போட்டு கொண்டு சுண்ணாம்பு அடித்த தூண்களில் கிறுக்கிய பெயர்களும், பொங்கலன்று புதிதாய் உடுத்திகொள்ளும்  காவி பார்டர்களும்,    திண்ணையில் உள்ள உத்திரத்தை எட்டி தொட்டு பார்த்து எனது    உயரத்தை அளந்த விதங்களும்,
 உச்சிவெயிலில் ஊர்சுற்றிவிட்டு வர, மிளகாயும், வற்றலையும் காய  வைத்து விட்டு , வாகாய்  தூணில் சாய்ந்து கொண்டு அம்மாவும், அக்காக்களும் பேசிக்    கொண்டிருக்கும் இடமாய் , கோபம் கொண்ட இரவுகளில் சாப்பிடாமல் வீம்பாய் சுருண்டு    படுத்துக்கொள்ளும் இடமாய்,  விடுமுறை நாட்களின் உச்சி வெயில் போதுகளில் தாயமோ, பரமபதமோ  விளையாடும்  இடமாய், யாருமற்ற  தனிமையில் மல்லாந்து  படுத்து ஓடுகளையும், குறுக்கு சட்டங்களையும் எண்ணிக்கொண்டு இருக்கும் இடமாய்  இருந்தது இந்த திண்ணைகள் தாம். 

படம் பார்க்கவோ, ஆற்றில் குளிப்பதற்கோ அனுமதி கிடைத்த   சந்தோஷத்தில்  துள்ளி குதித்து கொண்டு வெளி வரும் போது  எனக்கு சொல்லப்பட்டு கொண்டிருக்கும் நிபந்தனைகளின்  கடைசி  வார்த்தைகளின் சாட்சியாக நின்றவை  இந்த தூண்களும், திண்ணைகளும்  தான் .

வெவ்வேறு கால உருமாற்றங்களின் சாட்சியான திண்ணை   தாழ்வாரமாகி, பிறகு மரச்சட்டமிடப்பட்ட தட்டிக்குள்  அடைந்து, இன்று வழக்கொழிந்து போய்விட்டன.

விருந்தோம்பலின் அடையாளமாய் ஒரு காலத்தில் திகழ்ந்த இந்த திண்ணைகள் இன்று நமது நினைவுகளிலும், புகைப்படங்களிலும் மட்டுமே இருக்கின்றன,                        
கால எந்திரம் சுழற்றிய சுழற்சிகளின் மௌன சாட்சியாய் !!!


வாழ்க வளமுடன் !!! தமிழ் தந்த புகழுடன் !!!